Friday, December 28, 2012

2012 - ரசித்து பார்த்த திரைப்படங்கள்

து கண்டிப்பாக 2012ல் வெளிவந்த சிறந்த படங்களின் லிஸ்ட் அல்ல. என் ரசனைகேற்றவாறு, 2012ல் நான் ரசித்து பார்த்த படங்களை வரிசைப்படுத்தியிருக்கிறேன். அந்த படத்தை விட்டுட்ட, இந்த படத்தை விட்டுட்டன்னுலாம் குறை சொல்லப்பிடாது :)

**********************

காதலில் சொதப்புவது எப்படி 

வாவ்!: காதலர்கள் பிரிகிறார்கள். ஈகோ பிரச்னை. எப்படி மீண்டும் சேருகிறார்கள்? நெகிழ்வு, உருக்கம் அது இதுவென்று ஒரு துளி கண்ணீரையாவது வரவழைக்கக்கூடிய கதை ஆனாலும் அதை நகைச்சுவையாக சொன்னதாலேயே பிடித்துப்போனது. அதுவும் ஒரு காட்சியில், அமலா பால் அழ ஆரம்பிக்கும்போது, ஒரு அணையில் இருந்து நீர் வெளியேறுவதை காண்பிக்கும்போது சிரிப்பை அடக்கமுடியவில்லை. 

ஆனால் உங்கள் மனைவி/காதலி அழும்போது, இந்த காட்சி நினைவுக்கு வந்து சிரித்து தொலைத்தீர்களேயானால், சனி பகவான் உங்கள் தலையில் டிஸ்கோ டான்ஸ் ஆடுகிறார் என்று அர்த்தம்.

ப்ச்: ஆரம்பத்தில் கொஞ்சம் நன்றாக இருந்தாலும் போகப் போக, சித்தார்த் கேமராவை பார்த்து "பசங்க பொண்ணுங்க, பசங்க பொண்ணுங்க" என்று அடிக்கடி பேசுவது அவ்வளவாக ரசிக்கும்படி இல்லை.

அம்புலி 

வாவ்!: நமக்கு அடையார் ஆனந்த பவன் பாஸந்தியைப் போன்றது, இயக்குனர் ஹரீஷுக்கு ஹாரர் ஜானர் கதைகள். எனவே இம்மாதிரி கதையை அவர் தேர்ந்தெடுத்தது ஆச்சரியமில்லை. ஆனால் திருட்டு விசிடி பிரச்னையை சமாளிக்க இந்த டீம், 3டி'யில் படத்தை எடுத்தது மிக புத்திசாலித்தனமான முடிவு. 

தமிழ்நாட்டில் இன்றும் பல கிராமங்களில் ஏதாவதொரு ஏரியாவை பற்றி ஒரு பேய் கதை இருக்கும். கிராமத்தில் ஒரு ஹாரர் கதை, அதுவும் 3டி'யில் என்பது படத்திற்கு மேலும் சுவாரஸ்யம் கூட்டியது.

ப்ச்: காதலை இன்னும் கொஞ்சம் க்யூட்டாக காண்பித்திருக்கலாம். பாடல்களை போல் காதலும் மனதில் அவ்வளவாக ஒட்டவில்லை. க்ளைமேக்ஸ் இன்னும் கொஞ்சம் பெட்டராக படமாக்கப்பட்டிருக்கலாம்.

இங்க்லிஷ் விங்க்லிஷ்

வாவ்!: ஸ்ரீதேவி. QUEEN'S RETURN TO THE SCREEN. ஆங்கிலம் அவ்வளவாக தெரியாத ஒரு பெண்ணை, அவள் குடும்பத்தினரே எவ்வளவு அலட்சியமாக ட்ரீட் செய்கின்றனர் என்பதை மிக இயல்பாக காண்பித்திருந்தார் கெளரி ஷிண்டே. ஒரு சில குடும்பத்தலைவர்களுக்காவது கண்டிப்பாக உறுத்தியிருக்கும். 

ஆங்கிலம் கற்றுக்கொண்டபின் ஸ்ரீதேவி கிளைமேக்ஸில் ஐ.நா.சபையில் உரையாற்றுவாரோ என்கிற பயத்தில் நாம் பார்த்துக்கொண்டிருக்கும்போது, வீட்டு திருமண நிகழ்ச்சியில், அதுவும் சிற்சில தவறுகளுடன் ஆங்கிலம் பேசுவது போன்று காண்பித்திருந்தது படு யதார்த்தம்.

ப்ச்: நானும் இருக்கேன் என்பது போல் இருந்தது இசை. இளையராஜாவை இறக்கி விட்டிருக்க வேண்டும். நிறைய காட்சிகளில் நம் மனதில் புகுந்து ஆட்கொண்டிருப்பார். GAURI & BALKI, YOU MISSED HIM!

ஒரு கல் ஒரு கண்ணாடி

வாவ்!: வேறு யார், சந்தானம்தான். வசனங்களுக்கு இணையாக, பாடி லேங்க்வேஜிலும், ரியாக்ஷனிலும் அதகளப்படுத்தி இருந்தார். ஓவர் பில்டப், ஒப்பனிங் சாங் என்று எதுவுமில்லாமல், தூக்கத்திலிருந்து எழுந்திருப்பது போன்று அறிமுகமானதிலேயே உதயநிதியை பிடித்துப்போனது. நடனத்தை தவிர, நடிப்பில் ஓரளவு பாஸாகிவிட்டார் என்றே சொல்லலாம்.

ப்ச்: லூஸு போல ஹன்சிகாவை சுற்றிய பின், ப்ராஜக்ட், ஒத்து வராது என்றெல்லாம் ஹீரோ சொல்லும்போது, ஓங்கி ஒரு குட்டு குட்டலாம் போல இருந்தது. ஹீரோ ஹீரோயின் காதலிக்கிறார்கள். பிரிகிறார்கள். காமெடி நண்பன். நட்பு. பிரபல ஹீரோவின் ஸ்பெஷல் அப்பீயரன்ஸ். ஹீரோ ஹீரோயின் லவ் சக்சஸ். இந்த டெம்ப்ளேட்டை ராஜேஷ் கண்டிப்பாக மாற்றியே தீரவேண்டும். OLD WINE IN NEW BOTTLE ரொம்ப நாளைக்கு நல்லாருக்காது.

நான் ஈ





வாவ்!: சந்தேகமின்றி இயக்குனர் ராஜமௌலிதான். ஒரு சனிக்கிழமை மாலை, சும்மா டைம் பாஸுக்காக நண்பனுடன் இந்த படத்திற்கு சென்றேன். படம் ரிலீசான இரண்டாம் நாள் என்று நினைக்கிறேன். அரை மணி நேரத்திலேயே புரிந்துவிட்டது, ஒரு அட்டகாசமான திரைக்கதை அமைந்திருக்கும் படத்திற்கு வந்திருக்கிறோம் என்று. ரொம்ப நாள் கழித்து மனம் ஒரு குழந்தையாய் மாறி என்ஜாய் பண்ணி பார்த்த படம்.

ப்ச்: ஒன்றே ஒன்றுதான். 3டி'யில் வந்திருக்க வேண்டிய படமிது. இன்னும் கொண்டாடியிருக்கலாம்.

வழக்கு எண் 18/9

வாவ்!: நாலு சண்டை, நாலு பாட்டு என்று மற்றுமொரு சினிமாவாக இல்லாமல், சாட்டையின்றி வலியை உணரவைத்ததற்காக இயக்குனர் பாலாஜி சக்திவேல் மற்றும் தயாரிப்பாளர் லிங்குசாமி இருவரும் பாராட்டுக்குரியவர்கள். "அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட்டார்" என்று பிரதான பாத்திரத்தில் நடித்த நான்கு பேரையுமே சொல்லலாம். மறந்துவிட்டேன், அந்த போலீஸ்காரர் உட்பட. "ஆய் ஊய்" என்று கத்தாமல் என்னவொரு வில்லத்தனம்!

ப்ச்: தயாரிப்பு செலவு குறைகிறது என்றாலும் டிஜிட்டல் கேமிராவில் எடுத்ததால், படம் முழுக்க மனதில் ஒட்டவில்லை சில ஷாட்ஸ், டிவியில் வரும் சின்னத்திரை சினிமா போல இருந்தது. ஆனால், இந்த கதைக்காக அதை பொறுத்துக்கொள்ளலாம் என்றுதான் தோன்றுகிறது.

மௌன குரு

வாவ்!: இந்த படம் ரிலீசானது டிசம்பர் 2011 என்றாலும், நான் பார்த்தது இந்த வருடம்தான். இப்படியெல்லாம் நடக்குமா, இது சாத்தியமா, சரியான லாஜிக்கா என்றெல்லாம் யோசிக்க விடாமல், திரைக்கதையில் கட்டிப்போட்டிருந்தார் இயக்குனர் சாந்த குமார். இதுவரை நீங்கள் இந்த படத்தை பார்க்காவிடில், வாய்ப்பு கிடைத்தால் அவசியம் பாருங்கள். மிஸ் பண்ணக்கூடாத படம் இது!

ப்ச்: இரண்டாம் பாதியில் நன்றாக நடித்திருந்தாலும், முதல் பாதியில், அருள்நிதியின் முகத்தில் ஒரு எக்ஸ்ப்ரஷனும் காணோம். சொல்லிக்கொடுத்த டயலாக்கை சரியா சொல்றேன் பார் என்பது போல நடித்திருந்தார்.

தடையறத் தாக்க

வாவ்!: இயக்குனர் மகிழ் திருமேனி & அருண் விஜய். கண்டிப்பாக ஒரு ப்ரேக் குடுத்தாக வேண்டும் என்ற நிலையில் இயக்குனரும், ஹீரோவும். படத்தில் ஒரு காட்சி கூட போரடிக்கவில்லை. சொந்த படம் என்றாலும், 'ஏய்ய்ய்ய் நான் யார் தெரியுமா' என்றெல்லாம் எக்ஸ்ட்ரா பில்டப் கொடுக்கததாலேயே அருண் விஜய்யை பிடித்திருந்தது. இது போன்ற படங்களை தேர்வு செய்து நடித்தால், மனுஷன் ஒரு நல்ல இடத்தை பிடிப்பார்.

ப்ச்: அதிகப்படியான வன்முறை. உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறை என்று காண்பித்தால் கூட, கண்டிப்பாக வீட்டில் அமர்ந்து குடும்பத்தோடு பார்க்கமுடியுமா என்பது கேள்விக்குறிதான்.

துப்பாக்கி 

வாவ்!: இளைய தளபதியா இது? விஜய்  கூட அண்டர்ப்ளே பண்ணி நடிப்பாரா என்று ஆச்சரியப்படவைத்த படம். நண்பன் படத்திற்கு பிறகு விஜய் நடிப்பை மறுபடியும் ரசித்து பார்த்தேன். எல்லா புகழும் முருகதாஸுக்கே. உட்கார்ந்து பேசினால், என்னென்ன லாஜிக் ஓட்டைகள் என்று மணிக்கணக்கில் பேசலாம். ஆனால் தியேட்டரில் படம் பார்க்கும்போது யோசிக்கவிடாத திரைக்கதை அமைத்ததே படத்தின் உண்மையான வெற்றி. ஏழாம் அறிவு சறுக்கலுக்கு பின் முருகதாஸ் மீண்டும் BACK TO FORM!

ப்ச்: போக்கிரி படம் ரொம்ப பிடித்திருந்தது, பெல் பாட்டம் போலீஸ் யூனிபார்ம் வரும் வரை. அது போல இந்த படத்தில், ஒப்பனிங் சாங்கும், க்ளைமாக்ஸ் 'தன் கையே தனக்குதவி' டைப்பில் எலும்பு முறிவை சரி செய்யும் காட்சியும். மொத்த படத்திற்காக இவ்விரு விஷயங்களை தாங்கிக்கொண்டே தீரவேண்டும்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

வாவ்!: வாழ்வில் நடந்த ஒரு மிக சீரியசான விஷயம். சீரியஸ்னசை தூக்கி மூட்டை கட்டி தூர போட்டுவிட்டு, நகைச்சுவை கலந்து திரையில் ஒரு கலக்கு கலக்கிவிட்டனர். ஹீரோ விஜய்  சேதுபதியை விட, எனக்கு அந்த மூன்று நண்பர்களின் நடிப்புதான் பிடித்திருந்தது.

யாரால் மறக்க முடியும் "ப்ப்ப்பா பொண்ணா இது" காட்சியை :) அதே போல் "நாகராஜ் அண்ணே!". க்ளைமேக்ஸில் விஜய் சேதுபதிக்கு நினைவு வரும் காட்சியில், அந்த நட்பும், நெகிழ்ச்சியும் சிம்ப்ளி சூப்பர்ப்!

ப்ச்: சில காட்சிகளை கொஞ்சம் எடிட் பண்ணியிருக்கலாம். அதை தவிர குறையொன்றுமில்லை.

பீட்சா





வாவ்!: நிஜமாகவே வாவ்! சொல்ல வைத்த படம். சில ஹாலிவுட் த்ரில்லர்களை பார்க்கும்போது கொஞ்சம் வருத்தமாக இருக்கும், தமிழில் ஏன் இது போல படங்கள் வருவதில்லை என்று. அந்த வருத்தத்தை துடைத்தெறிந்த படம். சினிமாவில் உழைப்போடு, கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும் என்பார்கள். விஜய்  சேதுபதிக்கு இந்த வருடம்.....என்ன சொல்ல? வெளுத்து வாங்குகிறார்! இவர் பயந்து பயந்து, அந்த பயத்தை நமக்கும் கொண்டுவரச் செய்ததிலேயே மனிதர் வெற்றி பெற்றுவிட்டார்.

படத்திற்கு சந்தோஷ் நாராயணனின் பிஜிஎம் யானை பலம். விரைவில் ஹிந்தியிலும் 'பீட்சா' டெலிவரி  (ரீமேக்) பண்ணப்போகிறார்கள்.

ப்ச்: முதல் அரை மணி நேரம். கொஞ்சம் ஸ்லோ. அதற்குப்பின்தான் படம் பட்டையை கிளப்ப ஆரம்பித்தது.

**********************

இந்த லிஸ்ட்டில் இருக்கும் பல படங்கள் நிறைய  பேருக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.

அடுத்த மூன்று நாட்களுக்குள் வேறெதையும் எழுதி யாரையும் டார்ச்சர் பண்ண விருப்பமில்லை :)  2013ஆம் வருடம் சிறப்பாக அமைய அனைவருக்கும் வாழ்த்துகள்!

Wednesday, December 26, 2012

லாலா லால லா ல லா லாலலா


ப்பா அம்மாவுடன் நேற்று தி.நகர் போயிருந்தேன். இரண்டு மணி நேர பயண தூரத்தில் சென்னை இருந்தாலும், பொங்கல் பர்ச்சேஸிற்காக அப்பாவும் அம்மாவும் சென்னை வருவது இதுவே முதல் முறை. விடுமுறை தினம் என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்க 9:30க்கே தி.நகர் போய்விட்டோம். செவிக்கு உணவில்லாத காலை பொழுதில், சரவண பவன் இட்லியும் காபியும் வயிற்றுக்கு ஈயப்பட, ஜீரணத்திற்கும் சேர்த்து பில் போட்டிருந்தார்கள்.




10 மணிக்கு போத்தீஸில் களமிறங்கினோம். தி.நகரின் ராசியா என்று தெரியவில்லை. ஊரில் இருக்கும் கடையில் பத்து பதினைந்து நிமிடங்களில் புடவை எடுத்துவிடும் அம்மா, நான்கு புடவைகள் எடுக்க ஒரு மணி நேரத்துக்கும் மேலானது. "எவ்வளவு நேரம் எடுத்துக்கறா பாருப்பா" என்று பொறுமையிழந்து அப்பா என்னிடம் வந்து புலம்ப, "பரவால்லப்பா, வருஷத்துல ஒரு நாள்தானே" என்று சமாதானப்படுத்தினேன்.

அடுத்த ஒரு மணி நேரம் அப்பாவுக்கு, தம்பிக்கு, எனக்கு என ட்ரஸ் எடுத்துவிட்டு, போத்தீஸில் இருந்து வெளியேறுகையில் அம்மா சொன்னார், "இனிமே பொங்கல் பர்ச்சேஸுக்கு இங்கேயே வந்து எடுக்கலாம்". அப்பா திரும்பி என்னை பார்த்தார். நான் மட்டும் என்ன செய்ய? எனக்கும் இஸ்க் இஸ்க் என்றுதான் கேட்டது.

*******

ஞ்சுக்கு வேளச்சேரி வந்தடைந்தோம். அப்பா, அம்மா ரெண்டு பேருக்குமே வெளியுலக எக்ஸ்போஷர் ரொம்ப கம்மி. கூட்டுக்குள்ளேயே வாழ பழகிக்கொண்டவர்கள். அவர்களுக்கு புதியதாக இருக்கட்டும் என்றெண்ணி, Flamingo ரெஸ்டாரண்ட்டுக்கு அழைத்துப்போயிருந்தேன். Vegetarian Buffet. டீசண்ட்டான இடம். அமைதியான சூழல். அவர்களுக்கு ரொம்பவே பிடித்துப்போனது. இரண்டு பேரும் கொஞ்சம் excitedஆகவே இருந்தார்கள்.

எப்போதும் இதுபோல் தோன்றியதில்லை. வெளியே புதிய இடத்திற்கு தன் குழந்தைகளை கூட்டி வந்திருக்கும் தந்தையின் உணர்வில் இருந்தேன் நான். அவர்களோடு ஒரு சில விஷயங்களில், இன்றும் நிறைய கருத்து வேற்றுமைகள் இருக்கிறது. Argue பண்ணியிருக்கிறேன். கோபப்பட்டிருக்கிறேன். எனினும், affection குறையவில்லை.

*******

ப்படியெல்லாம் feel பண்ணியதன் விளைவு......தற்போது, மொபைல் ரிங்டோனாக, எஸ்.ஏ.ராஜ்குமாரின் "லாலா லால லா ல லா லாலலா "வை வைக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்

Monday, October 15, 2012

கற்றதும் பெற்றதும் - சுஜாதா

சிறு வயதில், ஆனந்த விகடனை புரட்டும்போது, இரண்டு மூன்று பக்கங்கள் எதையும் வாசிக்காமல் அப்படியே கடந்து சென்றுவிடுவேன். அப்போது தெரியாது, ஒரு சில வருடங்கள் கழித்து, அதே பக்கங்களை புத்தக வடிவில் வெறி பிடித்தது போல வாசித்து தீர்ப்பேன் என்று. அந்த இரண்டு மூன்று பக்கங்களின் தலைப்பு 'கற்றதும் பெற்றதும்'.



த்ரில்லர் கதைகள் மிகவும் பிடித்தமானவை என்பதால், வீட்டு அலமாரியில் கணேஷ் வசந்த்களே குடியிருக்கின்றனர். மத்யமர்களையோ, ஸ்ரீரங்கத்து தேவதைகளையோ தரிசிக்க இன்னும் நேரம் வரவில்லை. சமீபத்தில், அலுவலக நண்பர் ஒருவர்தான் 'கற்றதும் பெற்றதும்' புத்தகத்தை கொடுத்தார். வாரயிறுதியில் ஊருக்கு செல்லும்போது வாசிக்கலாம் என்று அப்படியே வைத்திருந்தேன். 

சனிக்கிழமை காலை. சென்னை கடற்கரை ரயில் நிலையம். ஸ்டேஷனிடம் கோபித்துக்கொண்டு ரயில் கிளம்ப ஆரம்பித்தது. புத்தகத்தை திறந்து, மகிழ்ச்சியோடு தலை குனிந்தேன். முதல் ஒரு சில பக்கங்கள் எனக்கு சற்று அலர்ஜியாகவே இருந்தது. நிறைய கெமிஸ்ட்ரி, பயாலஜி...உவ்வே! பதினொன்றாம் வகுப்பிலிருந்தே, எனக்கும் கெமிஸ்ட்ரிக்கும்  கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதே இல்லை. கிட்டத்தட்ட 30 பக்கங்களுக்குப் பிறகுதான் புத்தகம் சூடு பிடித்தது...வாசிக்கவும் பிடித்தது.

"ச்சே....என்ன மனுஷன்யா இவரு" என்று சிலாகித்து, கொஞ்சம் தலை நிமிர்ந்து ரயிலின் ஜன்னல் வழியே பார்த்தேன். தாம்பரம் ரயில் நிலையம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம், தன் எழுத்தால் வாத்தியார் என்னை கட்டி போட்டு இருந்தார். அறிவியல் தொடர்பான விஷயங்களை விட, அவரின் அனுபவங்கள்தான் ரசிக்க வைத்தன.




#பதின்ம வயதில் எந்த வித குறும்புகளிலும் ஈடுபடவில்லை என்கிறார், காதல் உட்பட. காரணம், ஸ்ட்ரிக்ட்டான பாட்டி. ஏதாவது சின்ன பொய் சொன்னால் கூட, பாட்டி எளிதில் கண்டுபிடித்து விடுவாளாம்.

#ஸ்ரீரங்கத்தில், இவர் இருந்த தெரு அணிக்கும், இன்னொரு தெரு அணிக்கும் க்ரிக்கட் மேட்ச் நடந்திருக்கிறது. எதிரணியினர், அம்பயர் எங்க சைடு ஆளுதான் என்று கூற, அதற்கு இவர் அணியும் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். பின்புதான் தெரிந்திருக்கிறது அது எவ்வளவு பெரிய தவறு என்று. எதிரணி பேட்ஸ்மன்  அவுட் ஆகும்போதெல்லாம் அம்பயர் கை கூசாமல் "நோ பால்" காண்பித்திருக்கிறார். 1940களிலேயே மேட்ச் பிக்ஸிங்! பிறகென்ன, தோல்விதான். ஆனால் அதையும் சுவைபட கூறியிருக்கிறார்.

#மெட்ராஸில் (அப்போ மெட்ராஸ்தாம்பா) ஹாஸ்டலில் தங்கியிருந்தபோது, ஒரு முறை தகவல் எதுவும் சொல்லாமல், அவர் அப்பா திடீரென வந்திருக்கிறார். ஹாஸ்டல் ரூம் பற்றி சொல்ல வேண்டுமா என்ன? தொன்று தொட்டு வரும் பழக்கமான, ஆடையில் சிக்கனத்தை வலியுறுத்தும் நடிகையின் படம் ஒன்று சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கிறது. அதை மறைக்கக் கூட நேரமில்லை. அப்பா பார்த்துவிட்டார். ஆனால், அவர் எதுவும் கேட்கவில்லை. பின்பு, பல வருடங்கள் கழித்து, தன் அப்பாவின் கடைசி நாட்களின்போது இதை கேட்டிருக்கிறார் வாத்தியார்.

"அப்பா, ஹாஸ்டலுக்கு நீங்க வந்திருந்தபோது சுவத்துல..."

"ஞாபகம் இருக்குடா...ஒரு பொம்மனாட்டி படம் ஒட்டி இருந்தது"

"ஏம்பா எதுவும் கேட்கல?"

"எப்படியும் நீ படிச்சு ஒழுங்கா வந்துடுவேன்னு தெரியும்டா". வாத்தியாரின் அப்பா தீர்க்கதரிசி!

#பணிக்காலத்தில், பல பிரச்னைகள் காரணமாக கிட்டத்தட்ட ஏழெட்டு முறை வீடு மாற்றியிருக்கிறார். அதுவும், பங்களூரில்தான் (வாத்தியாருக்கு எப்பவும் பங்களூர்தான், பெங்களூர் அல்ல) அதிகம். ம்ம்...என்ன செய்ய? அவங்க அப்பவே அப்படித்தான் போல!

#நிறைய கவிதைகளை பகிர்ந்திருக்கிறார். மனுஷ்ய புத்திரன், கனிமொழி (அவங்கதானே?) ஆகியோரின் பெயர்களை அடிக்கடி காண முடிந்தது. ஒரு சில அத்தியாயங்களில், "கவிதை புத்தகமெல்லாம் எனக்கு அனுப்பாதீங்க" என்று சற்று கோபம் கலந்து கெஞ்சி கேட்கிறார். அப்படியும் நம் பயபுள்ளைகள் அவரை விட்ட மாதிரி தெரியவில்லை.

#எழுத ஆரம்பித்து, சில வருடங்கள் கழித்து தட்டச்சுக்கு மாறி, பின்பு கணிணியில் கதைகள் எழுதியதை பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். கணிணியில் கதைகள், கட்டுரைகள் எழுதுவதின் பெரும் பயனாக அவர் சொல்லியிருப்பது - தன் கிறுக்கல் கையெழுத்தை பெரும் மன உளைச்சலுடன் வாசிக்கும் கஷ்டம் உதவி ஆசிரியர்களுக்கு இல்லாமல் போனது!

#இணையத்தில், தன்னை குறித்தான பாராட்டுகளையும், விமர்சனங்களையும் நன்கு கவனித்து வந்திருக்கிறார். இணையம் ஒரு சுதந்திரமான பொதுவெளி. இங்கு யாரும் எதுவும் சொல்லலாம் என்பதால், அவர்கள் எல்லோருக்கும் பதிலளிப்பது சரி வராது என்பது வாத்தியாரின் வாதம். இது தற்போதைய பதிவர்களுக்கும் பொருந்தும்.

#ரஜினி, வேண்டாம் என்று சொன்னவுடன், இயக்குனர் ஷங்கர் வேறு யார் 'முதல்வன்' என்று யோசித்திருக்கிறார். "இந்த கதைக்கு பெரிய நடிகர் அவசியமில்லை, நன்கு நடிக்கத் தெரிந்த நடிகர் இருந்தாலே போதும்" என்று வாத்தியார் சொல்ல, ஜென்டில்மேனை, முதல்வன் நாற்காலியில் உட்கார வைத்திருக்கிறார் ஷங்கர்.

பகிர்ந்து கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது. எதை எழுதுவது, எதை விடுவது என்றுதான் தெரியவில்லை. வாசித்து முடித்த பின், புத்தகத்தோடு ஒரு முடிவையும்  எடுத்து அலமாரியில் வைத்திருக்கிறேன். அது, 'கற்றதும் பெற்றதும்' மொத்தம் எத்தனை பாகங்கள் இருக்கிறதோ, அத்தனையையும் வாங்கிவிட வேண்டும். காத்திருக்கிறேன், 2013 சென்னை புத்தகக் கண்காட்சிக்காக.


Saturday, July 07, 2012

Exam - உங்கள் அறிவுத்திறனை சோதிக்க ஒரு படம்!

ஒரு படம், பார்ப்பவர்களை உருக வைக்க வேண்டும், நெஞ்சை நெகிழ வைக்க வேண்டும், கண்களை கலங்க வைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவரா நீங்கள்? அப்படியெனில் இது உங்களுக்கான படமல்ல. ஒன்று, இப்போதே இந்த விண்டோவை க்ளோஸ் பண்ணிவிடுங்கள் அல்லது கொஞ்சம் நேரம் ஒதுக்கி இந்த படத்தையும் பாருங்கள். ஒன்றரை மணி நேர சுவாரஸ்யத்துக்கு 100% கேரண்டி!

டமால் டுமீல் அதிரடி சண்டை காட்சியெல்லாம் கிடையாது. இங்கிட்டு ஒரு பில்டிங், அங்கிட்டு ஒரு பில்டிங் என்று தத்தி தாவும் ஸ்பைடர்மேனிஸமும் கிடையாது. இவையேதுமின்றி ஒரு த்ரில்லர் படத்தை எடுக்க முடியுமா, பார்ப்பவர்களை கவர முடியுமா என்ற கேள்விக்கு இந்த படத்தை பதிலாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஸ்டுவர்ட் ஹசல்டைன் (Stuart Hazeldine). 

பார்ப்பவர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு வரும் படம் என்பார்களே. அது இந்த படத்துக்கு அட்சர சுத்தமாக பொருந்தும். ஒரேயொரு லொகேஷன். நூற்றியொரு நிமிடங்கள். முழுக்க முழுக்க உரையாடல்கள்தான். இருந்தும் ஒரு இடத்தில் கூட சலிப்பே வரவில்லை. அடுத்து என்ன அடுத்து என்ன என்ற ஆர்வம்தான் அதிகமாகிக்கொண்டே போகிறது. வெகு நாளாயிற்று இப்படியொரு படத்தை பார்த்து!




ஒரு பயோ-டெக் கம்பெனியில்,  சிஇஓவின் பர்சனல் அசிஸ்டன்ட் பதவிக்காக ஒரு தேர்வு வைக்கப்படுகிறது. மொத்தம் எட்டு பேர் அந்த தேர்வை எழுத தகுதி பெற்றிருக்கின்றனர். ஒவ்வொருவரும் வெவ்வேறு சமூகப் பின்னணியை கொண்டவர்கள். அந்த எட்டு பேரில் ஒருவர்தான் சிஇஓவின் பர்சனல் அசிஸ்டன்ட்டாக தேர்வு செய்யப்படுவார்.

தேர்வறையை பற்றி சொல்லியாக வேண்டும். ஒரு ஜன்னல் கூட இல்லாத மூடிய அறை அது. அறை கதவின் பக்கத்திலேயே ஆயுதம் ஏந்திய காவலர் ஒருவர் இருக்கிறார். எட்டு போட்டியாளர்களும் அவரவர் இருக்கையில் அமர்ந்திருக்க, அந்த தேர்வின் ஒருங்கிணைப்பாளர் அறைக்குள் நுழைகிறார். 

அவர் சொல்லும் சில விஷயங்கள்:

இந்த தேர்வுக்கான நேரம் மொத்தம் 80 நிமிடங்கள்

இந்த தேர்வில் போட்டியாளர்கள் பதிலளிக்க வேண்டியது ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே!

மேலும் இந்த தேர்வுக்கு மூன்று நிபந்தனைகள்:

நிபந்தனை #1: போட்டியாளர்கள் யாரும் தேர்வு ஒருங்கிணைப்பாளரிடமோ, அறை கதவின் அருகில் இருக்கும் ஆயுதம் ஏந்திய காவலரிடமோ  பேசக்கூடாது.

நிபந்தனை #2: போட்டியாளர்கள் தங்கள் விடைத்தாளை சேதப்படுத்தக்கூடாது.

நிபந்தனை #3: அந்த அறையை விட்டு வெளியேறக்கூடாது.

இந்த மூன்று நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினாலும், போட்டியாளர்கள் தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள். இவற்றை அறிவித்துவிட்டு அந்த ஒருங்கிணைப்பாளர் தேர்வறையிலிருந்து வெளியேறிவிடுகிறார்.

இப்போது, போட்டியாளர்கள் ஒவ்வொருவரும், தங்கள் முன் வைத்திருக்கும் தாளை திறந்து பார்க்க......அவர்களுக்கு பேரதிர்ச்சி! அந்த தாளில் கேள்வியே இல்லை.  கேள்வியே  இல்லாமல் எப்படி விடையளிப்பது? எப்படி தேர்ச்சி பெறுவது? 

ஒரு சில  நிமிடங்களுக்குப் பின், அந்த அறைக்குள்தான்  கேள்வி எங்கேயோ ஒளிந்திருக்கிறது என்று முடிவு செய்து, தேட ஆரம்பிக்கிறார்கள். கேள்வியை கண்டுபிடித்தார்களா, எட்டு பேரில் யார் வெற்றி பெற்றது என்பதையெல்லாம், வெள்ளித்.....கணிணித்திரையில் கண்டு மகிழுங்கள்!

நான்கெழுத்து F*** வார்த்தையை தவிர்த்து, துளியும் விரசமின்றி நகருகிறது படம். தைரியமாக குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கலாம்.  படம் பார்த்து முடித்தவுடன், "ச்சே...நம்மால ஏன் அந்த கேள்வியை கண்டுபிடிக்க முடியல?" என்ற கேள்விதான் வெகுநேரம் எனக்குள் உறுத்திக்கொண்டிருந்தது.  கொஞ்சம் சுவாரஸ்யமான உறுத்தல்தான். படம் பார்த்தால், அது உங்களுக்கும் கிடைக்கும்.

பி.கு: திரைப்படம் குறித்து வெகு நாட்களாய் எழுதாததால் இந்த பதிவை முயற்சித்தேன். ஜாக்கிகள், கேபிள்கள் அளவுக்கெல்லாம் எனக்கு எழுத வராது. பொறுத்தருள்க :)

Wednesday, June 27, 2012

ஒரு நடுப்பகல் மரணம் - சுஜாதா


சில கதைகளின் பெயரை பார்த்தாலே சட்டென ஈர்த்துவிடும். ஆனாலும் இருமுறை யோசிப்பேன், தலைப்பில் இருக்கும் வசீகரம் உள்ளடக்கத்தில் இருக்குமா என. இந்த புத்தகம் வாங்குவதற்கு அப்படிப்பட்ட யோசனை எதுவும் தேவைப்படவில்லை. காரணம், மேலட்டையில் இருந்த மூன்று எழுத்துக்கள். சு. ஜா. தா.

பங்களூருக்கு (வாத்தியாருக்கு எப்பவும் பங்களூர்தான், பெங்களூர் அல்ல) தேனிலவு செல்கிறார்கள் புதுமண ஜோடி. ஒரு மதிய வேளையில், மனைவி வெளியே சென்றிருக்கும்போது, ஹோட்டல் அறையிலேயே வைத்து கணவன் கொலை செய்யப்படுகிறான். அறை கண்ணாடியில் ரத்தத்தால் MAYA என்று எழுதப்பட்டிருக்கிறது.

ஆம். கொலை செய்த நபர், 'முடிந்தால் என்னை பிடியுங்கள் பார்க்கலாம்' என்று கிட்டத்தட்ட நேரடியாகவே போலீசுக்கு சவால் விட, கதை சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. MAYA என்றால் என்ன, எதை குறிக்கிறது என்று பின்தொடரும் போலீஸ், ஒரு கட்டத்தில், கொலைகாரனை கைது செய்கிறார்கள்.

கடைசியில், எல்லோரையும் அழைத்து, யார் கொலை செய்தது, எப்படி கண்டுபிடித்தோம் என்பதையெல்லாம் போலீசார் விளக்குகிறார்கள். இங்கு ஒரு ட்விஸ்ட் வைக்கிறார் வாத்தியார். அது என்ன என்பதை இந்த கதையை வாசித்து தெரிந்துகொள்ளுங்கள்.



இதை விட சுருக்கமாக இந்த கதையை பற்றி சொல்ல எனக்கு தெரியவில்லை. வேறு எதை சொன்னாலும் சஸ்பென்ஸ் உடைந்துவிடும். அதனால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

கதை பெரும்பாலும் பெண்ணின் பார்வையிலேயே செல்கிறது. திருமணத்திற்கு பின் பெற்றோரை பிரிவது, முதலிரவு, தேனிலவு, கணவன் கொலையுண்ட பின் கிடைக்கும் அதிர்ச்சி, மாமியாருடன் ஏற்படும் உரசல் என்று பல விஷயங்கள்.

கணவனை இழந்த இளம் பெண்கள், உறவினர்களாக இருந்தாலும் வேறு ஆண்களோடு பேசினால், அதை எல்லோரும் சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை. கண், காது, மூக்கு மட்டுமின்றி, இன்ன பிற அங்கங்களும் வைத்து அழகு பார்த்து, ஆகச் சிறந்த கதையொன்றை கட்டுவதில் நம் சமூகம் இன்னும் சிறந்து விளங்கிகொண்டிருக்கிறது. இதை ஒரு புத்திமதி மாதிரியோ, கருத்து மாதிரியோ இடித்துரைக்காமல், போகிற போக்கில், ஒரு கதாபாத்திரம் வழியாக மிகச் சாதாரணமாக சொல்லிவிட்டு போகிறார் வாத்தியார்.

மற்ற கதைகளை ஒப்பிடுகையில், இந்த கதையின் க்ளைமேக்ஸ் அவ்வளவாக பெரியதொரு பாதிப்பை ஏற்படுத்தாதது ஒரு மைனஸ்தான். ஆனால் அதையும் தாண்டி இந்த கதையை ரசிக்க வைப்பது, அதன் ஃப்ளோ. அடுத்து என்ன ஆகும், அடுத்து என்ன ஆகும் என்று ஒரு படபடப்புடன் ஓடிக்கொண்டே இருக்கிறது கதை!

Strictly for Sujatha Fans!


Wednesday, May 09, 2012

தி.நகர்

தி.நகர். சென்னையின் அனைத்து தேவதைகளும் சங்கமிக்கும் பூந்தோட்டம். பீஹார் - வேளச்சேரி. இவற்றிற்கெல்லாம் அஞ்சவே இல்லை. கொஞ்சம் கூட என்கவுண்டர் பயமின்றி, வருவோர் போவோரையெல்லாம், கடைக்கண் பார்வையிலேயே போட்டு தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள் அழகான ராட்சசிகள். 

கிட்டத்தட்ட  ஆறு மாதங்களுக்குப் பின் கடந்த வாரம்தான் தி.நகர் செல்ல முடிந்தது. சம்மரை சமாளிப்பதற்காக அம்மாவுக்கும் பாட்டிக்கும், ஈரோடு காட்டன், இம்பீரியல் வகை புடவைகளை ஒவ்வொரு வருடமும் எடுத்துகொடுப்பதுண்டு. எப்போதும் போத்தீஸ்தான் முதல் மற்றும் ஒரே சாய்ஸ்.

ஆனால் இந்த வருடம் போத்தீஸ் கொஞ்சம் ஏமாற்றம்தான். அரை மணி நேரம் சுற்றியும் எதுவும் பிடிக்கவில்லை. எனவே குமரனில் எட்டி பார்த்தேன். இங்கும் மனதுக்கு திருப்தி அளிக்கவில்லை.  சுமார்தான். இரண்டு புடவைகளை மட்டும் எடுத்துக்கொண்டு நடையை கட்டினேன்.

அடுத்து சென்னை சில்க்ஸ். நன்றாக இருந்தால் இங்கு எடுப்போம். இல்லையென்றால் ஊருக்கு செல்லும்போது அங்கேயே எடுத்துவிடலாம் என்று அரை மனதோடுதான் உள்ளே சென்றேன். ஆச்சரியம்! நிஜமாகவே அழகழகான டிசைன்கள். ஒவ்வொரு புடவையும் ஏறக்குறைய ரூ.300 ரேஞ்சுக்கு இருக்கிறது. அவ்வளவும் வொர்த். தரத்திற்கும் குறைவில்லை.

சென்னை சில்க்ஸ்காரர்கள் புத்திசாலிகள். உடல் குளிர ஜம்மென்று ஏஸியும், மனம் குளிர  கும்மென்று அனுஷ்கா ஸ்டில்லும் ஒட்டிவைத்து நம்மை ஈர்த்துவிடுகிறார்கள். காய்கிற வெயிலுக்கு, அங்கேயே இன்னும் கொஞ்ச நேரம் சுற்றிகொண்டிருக்கலாம் போலிருந்தது. ஹும்ம்ம்...என்ன செய்ய? சில பல புடவைகளை அள்ளிக்கொண்டு கிளம்பினேன்.
  

தி.நகர் நொறுக்ஸ்

#பேருந்தைவிட ரயில்தான் வசதியாக இருக்கிறது. மாடி ரயிலில் பீச் ஸ்டேஷனுக்கு சென்று, அங்கிருந்து மாம்பலம். சற்று வெயில் நேரத்தில் சென்றால் கூட்டமும் இருக்காது. பர்ஸுக்கும் பங்கம் இல்லை.

#வெயில் காலம் என்பதால் எல்லா ஜூஸ், ஐஸ்க்ரீம் கடைகளிலும் கூட்டம் அம்முகிறது. சில கடைகளில் இன்னமும் கண்ணாடி க்ளாசை ஜூஸுக்கு பயன்படுத்துகிறார்கள். இவற்றை கழுவுவதற்கு எந்தளவு அக்கறை காண்பிப்பார்கள் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. எனவே, எந்தவித கலப்படமுமின்றி, சுத்தமான முறையில் இயற்கை தரும் இளநீர்தான் சாலச்சிறந்ததாக படுகிறது எனக்கு.

#தி.நகரில் மட்டும், "நடைபாதை" என்பதை "கடைபாதை" என பெயர்மாற்றம் செய்திட தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரவேண்டும். முழுக்க முழுக்க கடைகள்தான். சாலையில்தான் நீங்கள் கண்டிப்பாக நடந்தாக வேண்டும். இந்த நடைபாதை வியாபாரிகள் யாரும் திமுகவை சேர்ந்தவர்கள் கிடையாது என்பதை ஆணித்தரமாக நம்புகிறேன். இல்லாவிடில், எப்போதோ நில ஆக்கிரமிப்பு வழக்கில் உள்ளே சென்றிருப்பர்.

#திடீரென்று ஏதாவது ஒரு சந்தில் இருந்து, ஒரு ஆட்டோவோ, ஹோண்டா ஆக்டிவாவோ உங்களை ஏறக்குறைய இடித்துவிடும் அளவுக்கு வந்து, ப்ரேக் போட்டு கிறீச்ச்ச்ச்ச்ச்ச்சும். ஓட்டுபவர், உங்கள் குலம், கோத்திரம் ஆகியவற்றை கேட்காமலேயே, கொஞ்சம் அர்ச்சனை செய்துவிட்டு செல்வார். இந்த அர்ச்சனை ஆண்களுக்கு மட்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

#ரங்கநாதன் தெருவில் சரவணா ஸ்டோர்ஸ் உட்பட பல இடங்களில் வெளியே ஸ்நாக்ஸ் அயிட்டங்களை விற்றுகொண்டிருக்கிறார்கள். ஈக்களுக்கும் இந்த ஸ்நாக்ஸ் அயிட்டங்கள் ரொம்ப ஃபேவரைட் போல. சும்மா, பறந்து பறந்து ருசித்துகொண்டிருக்கின்றன. ஜனங்கள் இதையெல்லாம் துளி கூட கண்டுகொள்ளவில்லை. ஒவ்வொரு அயிட்டத்தையும் வெளுத்து வாங்குகிறார்கள். யோவ், இப்படிலாம் இருந்தா பின்ன ஏன் பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல், நீர்வன, பறப்பன, ஊர்வன காய்ச்சல்லாம் வராது?

இவ்வளவு பேர் கூடும் இடத்தில், ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால், மக்களை ஒழுங்குபடுத்துவதற்கோ, அவசர உதவிக்கோ போதுமான வசதிகள் இல்லை என்றுதான் தோன்றுகிறது. என்னதான், இது போன்ற ஒரு சில குறைகள் இருந்தாலும், இங்கு கிடைக்கும் பல பொருட்கள் நாம் வசிக்கும் ஏரியாவிலேயே கிடைத்தாலும், இன்னும் தி.நகர் சலிக்கவில்லை என்பது மட்டும் உண்மை.

Thursday, March 29, 2012

சென்னையில் ஒரு வெயில் காலம்

என்ன ஆச்சு தமிழ் சினிமாவுக்கு?

முன்பெல்லாம், இந்த படம் போகலாமா, அந்த படம் போகலாமா என்று முடிவெடுக்க முடியாமல் திணறுவேன். சமீபத்தில் அம்புலிக்குப் பிறகு எந்த படமும் பார்க்கவில்லை. கடந்த நான்கைந்து வாரங்களில் வெளியான எந்த படத்தையும் பார்க்கும் ஆர்வம் துளிகூட இல்லை. அரவான், கழுகு போன்ற படங்களை, பார்க்கலாமாஆஆ என்று யோசித்தால், சுடச்சுட விமர்சனங்கள் வெளியாகி அதற்கும் முட்டுக்கட்டை போட்டுவிடுகிறது.

வாரத்திற்கு ஒரு படம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, மாதத்திற்கு ஒரு படம் என்று மாறி, இப்போது ஒன்றிரண்டு மாதங்களுக்கு ஒரு படம் என்ற அளவில் வந்திருக்கிறது. நாற்பதாண்டுகள் கழித்து ரிலீசாகியிருக்கும் "கர்ணன்" படம் இந்த அளவு சக்கை போடு போடுவதற்கு சரியான போட்டி இல்லாததும் ஒரு காரணம் என்றுதான் தோன்றுகிறது.





ஆயிரம் சொல்லுங்க, சச்சினின் நூறு நூறுதான்!

நூறாவது சதத்தை கடப்பதற்கு சச்சின் எவ்வளவு கஷ்டப்பட்டாரோ, அதே அளவு சச்சினின் ரசிகனாய் நாமும் பட வேண்டியதாகிவிட்டது. நூறாவது சதம் முன்பு வரை, "99 சதம் அடித்தவருக்கு இன்னும் ஒரு சதம் அடிக்கவா தெரியாது?" என்று பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தேன். அந்த போட்டியில் தோற்ற பின், மறுநாள் அலுவலகத்தில் பழைய பல்லவியை பாட ஆரம்பித்துவிட்டார்கள், "சச்சின் செஞ்சுரி அடிச்சா இந்தியா தோத்துடும்".

சச்சின் இந்த முறை மெதுவாக ஆடினார் என்பதை மட்டும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் டீம் ஸ்கோரை நினைத்து பாருங்கள். 289. பங்களாதேஷுக்கு எதிராக இதனை defend பண்ண முடியவில்லை என்றால் கண்டிப்பாக குறை பெளலிங் மீதுதான். ஆனாலும் சச்சின் பெளலர்களை குறை கூறவில்லை. போட்டி முடிந்த பின் சச்சின் சொன்ன வார்த்தைகள் "Australia scored 434 but still lost to South Africa".  மேன்மக்கள்!

அதே பங்களாதேஷ் டீமை 260க்கும் குறைவான் டார்கெட் வைத்து, லீக் போட்டியிலும், இறுதிப் போட்டியிலும் வென்றது பாகிஸ்தான். கோஹ்லி, ரெய்னா, ரோஹித் ஷர்மா என்று பேட்டிங்கில் அசுரத்தனமாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்திய அணி, பெளலிங்கில் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.

அன்னை அரசு - அம்மையார் அரசு 

பத்து மாதங்கள் ஆன பின்பும், தமிழக அரசை பாராட்டும்படியான வாய்ப்பு இன்னும் அமையவில்லை. எந்த நேரத்தில் சமச்சீர்க்கல்வி திட்டத்தில் கை வைத்தார்களோ, தொட்டதெல்லாம் "துலங்கிக்கொண்டிருக்கிறது". மின்வெட்டு பிரச்னை பற்றி எல்லோரும் பேசி, புலம்பி, திட்டி தீர்த்து இப்போது அதற்கு பழகிக்கொண்டார்கள். மணி பத்து ஆகப்போகுது..கரண்ட் கட் ஆகற நேரம். ரைட்டு, தண்ணி புடிச்சு வெச்சுடுவோம்..இதுதான் வாழ்கை முறையாக மாறிபோயிருக்கிறது.

அட மாநில அரசுதான் இப்படி இருக்கிறது என்றால், மத்திய அரசு "வடக்கு பட்டி ராமசாமிக்கு கொடுத்த பணம் ஊஊ" கதையாக இருக்கிறது. தொடர்ந்து ஊழல் வழக்குகள், பெட்ரோல் விலையேற்றம், இலங்கைக்கெதிரான தீர்மானத்தில் வழா வழா கொழா கொழா நிலை என்று பத்திரிக்கை தலைப்புச் செய்திகளுக்கு செம தீனி போடுகிறார்கள், கொஞ்சம் நெருப்பு அள்ளி நம் வயிற்றில் போட்டுவிட்டு.

இரண்டு அரசுகளுக்கும் சரியான மாற்று இல்லாததுதான் இன்னும் எரிச்சலாக இருக்கிறது.....:-(

சென்னையில் ஒரு வெயில் காலம்

மே மாதத்தில் காய வேண்டிய வெயில் மார்ச் மாதத்திலேயே காய்ந்து, நாம் சென்னையில்தான் இருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது. வெயிலை சமாளிக்க நான் ஃபாலோ பண்ணும் ஒரு விஷயம், அரிசி சாப்பாட்டை குறைத்துக்கொள்வது. சாப்பாட்டை குறைத்துக்கொண்டு நிறைய பழங்கள், இளநீர், ஜூஸ் போன்றவற்றை எடுத்துக்கொண்டால் வெயிலை ஓரளவு சமாளிக்க முடியும்.

எந்த கடையில் ஜூஸ் குடித்தாலும், ஐஸ் போடாமல் குடிப்பது சாலச்சிறந்தது. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, ஐஸ் போட்டு குடிப்பது உடம்பை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவாது. இன்னொரு காரணம், அவ்வளவு பெரிய ஐஸ் கட்டியை எப்படி தூள் தூளாக்குகிறார்கள் என்பதை பார்த்தால் சத்தியமாக ஐஸ் போட்டு ஜூஸ் குடிக்க மனசே வராது.

Let me be myself...please!

எல்லோரும் விரும்பும்படி நடந்துகொள்வது யாருக்கும் சாத்தியமில்லை. நம்மைச் சுற்றி பத்து பேர் இருந்தால், கண்டிப்பாக இரண்டு பேருக்காவது நம் மீது கொஞ்சம் பொறாமையோ, எரிச்சலோ இருக்கக்கூடும். எட்டு பேருக்கு நம்மை பிடித்திருந்தாலும், நம்மை பிடிக்காத இரண்டு பேரின் வார்த்தைகள் ஆறாத காயத்தை ஏற்படுத்திவிடுவதுண்டு. எனவே எல்லோருடைய விருப்பப் பட்டியலிலும் இடம் பெற வேண்டும் என்று ரொம்பவே மெனக்கெடுவேன்.

இப்போது அந்த ஆட்டிட்யூட் கொஞ்சம் மாறியிருக்கிறது. எல்லோருக்கும் பிடித்தவனாக மாற முயற்சிக்கையில், என்னுடைய தனித்தன்மையை இழப்பதை நன்றாக உணரமுடிகிறது. நான் நானாக இருக்கவே விரும்புகிறேன். என்னுடைய கோபம், அன்பு, நட்பு, நகைச்சுவை உணர்வு ஆகியவற்றை முழுமையாக ஏற்றுக்கொள்வோர் மட்டும் எனக்கு நெருக்கமானவர்களாக இருந்தால் போதும். இதை திமிராக சொல்லவில்லை. If you can't love me, please ignore me..


Thursday, March 08, 2012

59வது தேசிய திரைப்பட விருதுகள் - ஏன் ரஹ்மானுக்கு கிடைக்கவில்லை?

நேற்று மதியம் சிஎன்என் சேனலில் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பை நேரடியாக  ஒளிபரப்பினார்கள் மிகுந்த ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தேன். மற்ற எந்த  கேட்டகரியிலும் எனக்கு பெரிதாக ஆர்வம் இல்லை. ஆனால் சிறந்த இசையமைப்பாளர் விருது ரஹ்மானுக்கும், சிறந்த பின்னணி பாடகர் விருது மோஹித் செளகானுக்கும் கண்டிப்பாக கிடைக்கும் என்று 'ராக்ஸ்டார்' இசை கேட்டதிலிருந்தே நம்பிக்கொண்டிருந்தேன். நிற்க.  நான்கைந்து  பத்திகள் கழித்து  மீண்டும்  புலம்புகிறேன்.


கன்னாபின்னாவென்று வசூலும், ஆஹா ஓஹோவென விமர்சனங்களும் வந்துவிட்டதால் வித்யா பாலனுக்கு விருது கிடைத்ததில் பெரிய ஆச்சரியம் இல்லை. 'கான்' நடிகர்கள் இல்லாமலும் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை தரமுடியும் என்று நிரூபித்ததே 'டர்ட்டி பிக்சர்' டீமுக்கு பெரிய வெற்றிதான். இந்த விருது இன்னும் அவர்களை மேலும் உற்சாகபடுத்தி இருக்கக்கூடும்.

விமர்சகர்கள் கல் எறிந்தாலும், அற்புதமான  மார்க்கெட்டிங்கினாலேயே துட்டு பார்த்துவிட்ட ஷாரூக்கின் 'ரா.ஒன்', சிறந்த ஸ்பெஷல் பெக்ட்ஸ் விருதை அள்ளியிருக்கிறது. 

சிறந்த படத்தொகுப்பிற்காக 'ஆரண்ய காண்டம்' படத்திற்கும், தமிழில் சிறந்த படமாக 'வாகை சூட வா'விற்கும் விருது கிடைத்துள்ளது. இவையிரண்டும் சரியான தேர்வுதான். வித்தியாசமான கதை, மசாலா ஐட்டங்கள் ஏதுமின்றி குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படம் என்றாலும், சிறந்த ஜனரஞ்சக படமாக 'அழகர்சாமியின் குதிரை' தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. 

ஜனரஞ்சகமான படம் என்றால் அனைவரையும் கவர்ந்திருக்க வேண்டும். வணிக ரீதியாக வெற்றி கிடைக்காததே இந்த படம் அனைவரையும் கவரவில்லை என்பதற்குச் சான்று. அதற்காக 'மங்காத்தா' படத்திற்குத்தான் இந்த விருது கிடைத்திருக்க வேண்டும் என்று சொல்லுமளவுக்கு நான் கொடுங்கோலன் அல்ல. ஒரு வரியில் சொல்லவேண்டும் என்றால்,  'அழகர்சாமியின் குதிரை' - விமர்சகர்களால் மட்டுமே கொண்டாடப்பட்ட படம். 

'லகான்' படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டபோதும் எனக்கு இதே எண்ணம்தான் தோன்றியது. படு புத்திசாலித்தனமான திரைக்கதை, அசத்தலான இயக்கம், இசை ஆகியவை இருந்தாலும், ஆஸ்கர் வாங்கும் அளவுக்கு இந்த படம் வொர்த் இல்லை என்பது என் கருத்து. 

ராக்ஸ்டாருக்கு வருவோம். படத்தின் இரண்டாம் பாதி சரியான சொதப்பல் என்றாலும் சிறந்த நடிப்பிற்கான விருது ரன்பீர் கபூருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஃபில்ம்ஃபேர், அப்ஸரா, ஸ்டார் ஸ்க்ரீன் அவார்ட்ஸ், ஸீ சினி அவார்ட்ஸ் என பல விருதுகளை அள்ளினாலும், தேசிய விருது கிடைக்கவில்லை. போகட்டும், இது கூட பரவாயில்லை. ஆனால் பாடல்களை கேட்ட பின்பும், பார்த்த பின்பும், இசைக்காக ரஹ்மானுக்கும், பாடியதற்காக மோஹித் செளகானுக்கும் கண்டிப்பாக விருது கிடைக்கும் என்று திடமாக நம்பினேன். பில்ம்பேரில் ஆரம்பித்து ஒவ்வொரு மேடையாக ஏறி, இருவரும் விருதுகளை வாங்கி குவித்துகொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இவ்விருவருக்குமே தேசிய விருது கிடைக்காதது  ஒரு மிகப்பெரிய disappointment. பொதுவாக ரஹ்மானின் பாடல்களில், ஒரு படத்தில் ஒன்றிரண்டு பாடல்களாவது 'சுமார்' என்ற பீலிங்கைத்தான் கொடுக்கும். இசை சம்பந்தப்பட்ட படம் என்பதாலோ என்னவோ, புல் ஃபார்மில் பட்டையை கிளப்பியிருந்தார் ரஹ்மான். 'ஜோ பி மேய்ன்' தொடங்கி 'தும் ஹோ' வரை ஒவ்வொரு பாடலும் அட்டகாசம். 




இந்த பாடலை பாருங்கள். ரஹ்மானின் இசையும், மோஹித் செளகானின் குரலும், ரன்பீர் கபூரின் நடிப்பும், நாடி நரம்பையெல்லாம் முறுக்கேற வைக்கும்! என்னை பொறுத்தவரை ஆஸ்கர் வாங்கிய 'ஜெய் ஹோ'வை விட 'சட்டா ஹக்' நூறு மடங்கு மேல். இந்த பாடலுக்கு விருது கிடைக்காமல் போனது ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. தேர்வு குழுவினர் இந்த பாடலை கேட்டதே/பார்த்ததே இல்லையோ? ப்ச்... என்னமோ போடா மாதவா!

Tuesday, March 06, 2012

மகாத்மா காந்தி கொலை வழக்கு - என். சொக்கன்

காந்தியை கொன்றது யார்? கோட்ஸே. அவ்வளவுதான் தெரியும் நம் தலைமுறைக்கு. யார் இந்த கோட்ஸே? காந்தியை கொல்லவேண்டும் என்று ப்ரிட்டிஷ் அரசு கூட நினைக்கவில்லை. உலகமே போற்றிய காந்தியை கொல்லவேண்டும் என்று ஏன் கோட்ஸேக்கு தோன்றியது? அப்படியென்ன அவருக்கு காந்தி மேல் கோபம்? தனியாளாகத்தான் இந்த கொலையை அவர் செய்தாரா? இது போன்ற பல கேள்விகளுக்கு இந்த புத்தகம் பதில் சொல்கிறது. 

சும்மா போகிற போக்கில் நடந்த சம்பவங்களை பற்றி எழுதாமல், நிறைய விஷயங்களை விரிவாக அதே சமயம் எளிமையாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் என்.சொக்கன். சமயத்தில் அதுவே கொஞ்சம் போரடிப்பது போல தோன்றினாலும் அடுத்தடுத்த அத்தியாயங்களை வாசிக்கும்போது ஒவ்வொரு விஷயமும் எவ்வளவு முக்கியம் என்பதை உணரமுடிகிறது. 



காந்தி கொலைக்கு முக்கிய காரணமாக இன்றும் பலர் சொல்வது "55 கோடி". இதை பற்றி கொஞ்சம் பார்ப்போம். இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்த பின்னர், புதிய நாட்டின் கட்டமைப்புக்கு என்று 75 கோடி தருவதாக ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இதில் முதல் தவணையாக 20 கோடி பாகிஸ்தானுக்கு தரப்பட்டிருக்கிறது.

அப்போது காஷ்மீரை ஹரி சிங் என்ற அரசர் ஆண்டு வந்திருக்கிறார்.  காஷ்மீரில் பெரும்பாலான மக்கள் முஸ்லிம். ஆனால் ஆள்பவரோ ஹிந்து அரசர். எனவே இந்தியாவும், பாகிஸ்தானும் காஷ்மீரை சொந்தம் கொண்டாட ஆரம்பித்தன. பின் வழியாக வந்து தாக்குவதை கார்கிலுக்கு முன்பு அப்போதே பாகிஸ்தான் ஆரம்பித்திருக்கிறது. 

அலறியடித்துக்கொண்டு இந்தியாவிடம் உதவி கேட்டிருக்கிறார் காஷ்மீர் அரசர். கிடைத்த வாய்ப்பை இந்தியாவும் விடவில்லை. 

இதற்கிடையில் பாகிஸ்தான் ஆட்சியாளர்களோ, எங்களுக்கும் தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, எங்களுக்கு வரவேண்டிய மீதி பணத்தை அனுப்புங்கள் என்று இந்திய அரசிடம் கேட்டிருக்கிறார்கள். இவர்கள் இப்போதே இப்படியிருக்கிறார்கள், இன்னும் 55 கோடி கொடுத்துவிட்டால் என்னவெல்லாம் செய்வார்களோ என்றெண்ணிய இந்திய அரசு அதை அப்படியே நிறுத்திவைத்தது.

இந்த விஷயத்தை காந்தியிடம் கொண்டுபோகும்போது அப்போதைய கவர்னர் மவுண்ட்பேட்டன் "சுதந்திரம் கிடைத்த பின் இந்தியாவின் முதல் நேர்மையற்ற செயல்" என்று குறிப்பிட, இந்த வார்த்தைகள் காந்திக்கு மிகுந்த வருத்தத்தை அளித்திருக்கிறது.

ஏறக்குறைய இதே சமயத்தில், ஹிந்து முஸ்லிம் கலவரம் டெல்லியில் பற்றி எரிய ஆரம்பித்திருந்த நேரம். இரு மதத்தினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டி காந்தி ஜனவரி 13, 1948 காலை 11:55க்கு உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருக்கிறார். பதறி போன இந்திய அரசு, தனது கேபினட் கூட்டத்தை காந்தி உண்ணாவிரதமிருந்த பிர்லா இல்லத்திலேயே கூட்டியிருக்கிறார்கள். காந்தி நேரடியாக கேட்கவில்லை. இருந்தாலும் அவரை திருப்திபடுத்தி உண்ணாவிரதத்தை கைவிட கேபினட் கூட்டம் செய்த முதல் முடிவு, பாகிஸ்தானுக்கு 55 கோடி கொடுத்துவிடலாம்.


நாதுராம் கோட்ஸே

இதுதான் தீவிர ஹிந்துத்வாவான கோட்ஸேவை மிகுந்த கோபமடையச் செய்திருக்கிறது. காந்தி முஸ்லிம்களுக்கு ஆதரவாகத்தான் பேசுகிறார். ஹிந்துக்களை பற்றி அவருக்கு கவலையில்லை. அவர் செத்தொழிந்தால்தான் இந்தியாவுக்கு நிம்மதி. அப்போதுதான் இந்தியா தன் வளர்ச்சியை பற்றி யோசிக்க முடியும். இனி பொறுத்துபோக முடியாது. ஜனவரி 20, 1948. நாள் குறித்தாயிற்று.

கொலை திட்டத்தை நிறைவேற்ற மொத்தம் ஏழு பேர் (இவர்கள் ஒவ்வொருவரை பற்றியும் விரிவாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்).

1. நாராயண் ஆப்தே 
2. நாதுராம் கோட்ஸே 
3. விஷ்ணு கார்கரே
4. மதன்லால் பாஹ்வா 
5. கோபால் கோட்ஸே (நாதுராம் கோட்ஸேவின் தம்பி)
6. திகம்பர் பாட்ஜே
7. ஷங்கர் கிஸ்தைய்யா

ஜனவரி 20, 1948 அன்று ஆப்தேவும், கோட்ஸேவும் பிர்லா இல்லத்துக்கு மற்றவர்களோடு சென்றார்களே தவிர, காந்தியை கொலை செய்ய நேரடியாக முயற்சிக்கவில்லை. திட்டம் போட்டது மட்டுமே அவர்கள் வேலை. 

பிரார்த்தனை மைதானத்திற்கு சற்று தொலைவில் மதன்லால் ஒரு வெடிகுண்டை வெடிக்கவைப்பார். கூட்டம் சிதறி ஓடும். காவலர்கள் கவனம் சிதறும். இந்த சமயத்தில் திகம்பர் பாட்ஜே காந்தியை அருகிலிருந்த வீட்டு ஜன்னலில் இருந்து சுடவேண்டும். சரியாக போட்ட ப்ளானில் கடைசியில் சொதப்பியது திகம்பர் பாட்ஜே. குண்டு வெடித்தபின் அவர் காந்தியை சுடவில்லை. ஆப்தே - கோட்ஸே குழுவினருக்கு இது பேரிடி! போதாதற்கு மதன்லால் போலீஸிடம் மாட்டிக்கொண்டார்.

இந்த தோல்வியை ஆப்தே மற்றும் கோட்ஸேவால் தாங்கமுடியவில்லை. இனி மற்றவர்களை நம்பி பிரயஜோனமில்லை. நேரடியாக களத்தில் இறங்க வேண்டியதுதான். முடிவெடுத்தார் கோட்ஸே. விளைவு - ஜனவரி 30, 1948.

I do say that my shots were fired at the person whose policy and action had brought rack and ruin and destruction to millions of Hindus. There was no legal machinery by which such an offender could be brought to book and for this reason I fired those fatal shots. I bear no ill will towards anyone individually, but I do say that I had no respect for the present government owing to their policy, which was unfairly favourable towards the Muslims. But at the same time I could clearly see that the policy was entirely due to the presence of Gandhi.
— Nathuram Godse, Answer to the Charge Sheet (Excerpt from Para. 135)




இதில் கொடுமை என்னவென்றால், ஜனவரி 20லிருந்து 30 வரை போலீசின் நடவடிக்கை  படு மெத்தனமாக இருந்திருக்கிறது. மதன்லாலை தவிர வேறு யாரும் கைது செய்யப்படவில்லை.

ஆனால் கொலை நடந்த இரண்டு வாரங்களுக்குள் எல்லாவற்றையும் கண்டுபிடித்து ஏழு பேரையும் கைது செய்திருக்கிறார்கள். ஏறக்குறைய ஒன்றரை வருடங்கள் கழித்து தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. கோட்ஸேவுக்கும், ஆப்தேவுக்கும் மரண தண்டனை. மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை. அப்ரூவராக மாறிய திகம்பர் பாட்ஜேவுக்கு விடுதலை!

சொக்கன் அவர்கள் எழுத்தில் அறிஞர் அண்ணா, திருபாய் அம்பானி, பில் கேட்ஸ் ஆகியோரின் வாழ்கை வரலாற்றை வாசித்திருக்கிறேன். என்னை பொறுத்தவரை இதுவரை அவர் எழுதியதிலேயே இந்த புத்தகம்தான், த பெஸ்ட்!


பெயர்: மகாத்மா காந்தி கொலை வழக்கு
ஆசிரியர்: என். சொக்கன்
விலை: ரூ.135/-
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-596-7.html


Tuesday, February 28, 2012

அம்புலி 3D

முதல் பத்து நிமிடங்களிலேயே டெக்னிக்கலாக தாங்கள் எடுத்திருக்கும் சிரத்தையையும், இந்த படம் எந்த மாதிரியான களனை கொண்டது என்பதையும், பார்ப்பவர்களுக்கு புரிய வைத்துவிடுகிறார்கள் இயக்குனர்கள் ஹரீஷ் நாராயணும், ஹரி ஷங்கரும். குழந்தைகளுக்கு மட்டும்தான் முப்பரிமாண படம் என்பதை மாற்றி அனைவரும் பார்க்கும் வகையில் ஒரு த்ரில்லரை கொடுத்திருக்கிறார்கள்.

கல்லூரிக்கும், பக்கத்து ஊருக்கும் நடுவே ஒரு சோளக்காடு இருக்கிறது. அதில் அம்புலி என்றொரு மிருகம் வசித்து வருவதாகவும், அது மனிதர்களை கண்டால் கொன்றுவிடுவதாகவும் வதந்தி பரவியிருக்க, அதனை கண்டுபிடிக்க களம் இறங்குகிறார்கள் கல்லூரி மாணவர்கள் அஜய்யும், ஸ்ரீஜித்தும். அம்புலி என்பது உண்மைதானா? அதனை இவர்கள் கண்டுபிடித்தார்களா என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 




லீட் ரோலில் இருவர் நடித்திருந்தாலும், ஒளிப்பதிவாளர் சதீஷ்தான் படத்தின் நிஜமான நாயகன் என்று சொல்வேன். 3டியில் ஒரு அட்டகாசமான அனுபவத்தை தருகிறார் சதீஷ். சோளக்காடு வழியே நம்மை பயணிக்க வைப்பதும், துப்பாக்கியை எடுத்து நம் மீது குறி பார்ப்பதும், கண் அருகே பாம்பு வருவதும் என ஒவ்வொன்றும் அசத்தல் ரகம். படத்தின் ஜானருக்கு ஏற்ற வகையில் பின்னணி இசை அமைந்திருப்பதும் படத்துக்கு பெரிய பலம். 

படத்தின் குறைகள் என்றால், பாடல்களும், காதல் காட்சிகளும்தான். பார்க்கும்போது நன்றாக இருப்பதுபோல் தோன்றினாலும், எந்த பாடலும் மனதில் நிற்கவில்லை. குறிப்பாக இரண்டாம் பாதியில், இரு ஜோடிகளும் ஆடும் பாடல் படத்தின் வேகத்திற்கு வேகத்தடையாகத்தான் தோன்றியது எனக்கு. கல்லூரி காதல் என்பதால் இன்னும் கொஞ்சம் க்யூட்டாக இருந்திருக்கலாம். "ரோமியோ ஜூலியட் காலத்திலிருந்தே ஹீரோயின் ரூம் மாடியிலதான்" போன்ற வசனம் 'அட!' போடவைத்தாலும், ஏதோ ஒன்று மிஸ் ஆவது போன்றே ஒரு ஃபீல்.

மற்ற எல்லோரையும் விட எனக்கு கலைராணி, ஜெகன் மற்றும் தம்பி ராமையாவின் நடிப்பு பிடித்திருந்தது. கிராமத்து  மருத்துவச்சியாக அம்புலியின் மர்மம் அறிந்த பாட்டியாக நடித்திருக்கிறார் கலைராணி. பாட்டி என்பதால் கன்னாபின்னாவென்று மேக்கப் போடாமல், அளவான மேக்கப்போடு இயல்பாக அவரை காண்பித்ததே நன்றாக இருந்தது.

1970௦களில் நடக்கும் கதை என்பதால், ஒரு திராவிடர் கழக கேரக்டரை ஜெகன் மூலம் உலவவிட்டிருக்கிரார்கள். சட்டையையும், ஒரு சில வசனங்களையும் வைத்தே அவர் கேரக்டரை புரியவைப்பது இயக்குனர்களின் புத்திசாலித்தனத்திற்கு ஒரு சான்று. ஜெகனும் கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தி இருக்கிறார். ஒரு அப்பாவின் பயத்தையும், பாசத்தையும், காமெடியுடன் கூடிய குணச்சித்திரத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார் தம்பி ராமையா.

க்ளைமேக்ஸ் உட்பட படத்தில் சில லாஜிக் ஓட்டைகள் இருக்கத்தான் செய்கின்றன. இரண்டாம் பாதியில் சரசரவென்று நகரும் திரைக்கதைதான் அதையெல்லாம் மறக்கச்செய்து பார்ப்பவர்களை கட்டிப்போடுகிறது. 


இணையதளங்களையும், பர்மா பஜார்களையும் பார்த்து 'பைரஸி பைரஸி' என்று கத்திக்கொண்டிருந்த தமிழ் சினிமா இண்டஸ்ட்ரிக்கு, 3டி மூலம் ஒரு கோடு போட்டு காண்பித்துள்ளார்கள் இயக்குனர்கள் ஹரீஷ் மற்றும் ஹரி ஷங்கர். பார்ப்போம், அடுத்து யார் ரோடு போடுகிறார்கள் என்று...

Wednesday, February 15, 2012

பஸ் டே கொண்டாட்டம் - இத நிறுத்துங்க முதல்ல!

யார் இந்த கண்றாவியை கண்டுபிடித்தார்கள் என்றே தெரியவில்லை. ஒவ்வொரு வருடமும் செய்தித்தாளில் தவறாமல் இடம்பெறுகிறது பஸ் டே கொண்டாட்டம் பற்றிய செய்திகள். தங்களது கல்லூரியின் வழித்தடத்தில் ரெகுலராக வரும் பேருந்தின் ஓட்டுனரையும், நடத்துனரையும் கெளரவிக்கும் விதமாக செயல்பட்டு வந்த பஸ் டே கொண்டாட்டம், கடந்த சில வருடங்களாக ஒரு அருவருப்பான விஷயமாகத்தான் மாறிக்கொண்டு வருகிறது. 

கொண்டாட வேண்டும் என்று நினைப்பவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி, கல்லூரிக்கென்று சொந்தமாக பஸ் வாங்கி, கல்லூரி மைதானத்திலேயே கொண்டாட வேண்டியதுதானே. அதென்ன மாட்னான் இளிச்சவாயன் என்பது போல் அரசு பேருந்துகளை எடுத்துகொண்டு அண்ணா சாலையில் ஆட்டம் போடுவது? இதற்கெல்லாம் அனுமதி கொடுத்து, பேருந்தும் கொடுத்து அனுப்புகிறார்களே..அவர்களை சொல்லவேண்டும். 

சென்ற வாரம், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாட தீர்மானித்து கோயம்பேட்டில் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் என்று கருதி, போலீசார் அவர்களை அங்கேயே நிறுத்திவிட, இந்த so-called மாணவர்கள் கடுப்பாகிவிட்டார்கள். பின்பு அங்கொன்றும் இங்கொன்றும் இருந்த கும்பல்கள் ஒன்று கூடி எதிர்ப்பை காட்ட முடிவு செய்திருக்கிறது. விளைவு? கல்லூரி வளாகத்தில் இருந்துகொண்டு சாலையில் கண்டபடி கல் எறிந்திருக்கிறார்கள். பேருந்து ஓட்டுனர் ஒருவரும், பயணி ஒருவரும் இதில் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.

குழந்தை மீது கற்கள் படாமல் தாயிடம் சேர்க்கும் காவலர்



இந்த சம்பவத்திற்கு பின் சில மாணவர்களை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். எனக்கென்னவோ இந்த வழக்கு கொஞ்ச நாளுக்கு இழுத்து, கொஞ்சம் ஃபைனும், நீதிபதியின் அறிவுரை கலந்த கண்டனத்தோடும் இந்த மாணவர்கள் வெளியே வந்துவிடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது. 

ஆனால் இவர்கள் வெளியே வருவதற்குள் இவர்கள் பெற்றோர் எவ்வளவு வேதனைகளையும், அவமானங்களையும்  தாங்க  வேண்டி இருக்கும். இதை ஒரு நிமிடம் யோசித்து பார்த்திருந்தால், எந்த ஒரு மாணவனும் இப்படிப்பட்ட கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடவேமாட்டான். ஹீரோயிசத்தை காட்டுவதற்கு வாழ்வில் எவ்வளவோ பாஸிட்டிவான வழிகள் இருக்கும்போது, ஒரு விலங்கு மாதிரி கூரையில் ஆடுவதெல்லாம் எதற்கு? பரிணாம வளர்ச்சியை சாலையில் செல்பவர்களுக்கு நினைவூட்டுவதற்கா?

இதற்கு சரியான நிரந்தர தீர்வு, பஸ் டே கொண்டாட்டத்தை தடை செய்வதுதான். எதற்கோ கட்டப்பட்ட கட்டிடத்தை மருத்துவமனை ஆக்குவது, அவரை வீட்டை விட்டு அனுப்புவது, இவர் மேல் கேஸ் போடுவது, சட்டசபையில் நேருக்கு நேர் சவால் விடுவது  என்று எதிலெதிலோ வீரத்தை காட்டும் இந்த அரசு, பஸ் டே கொண்டாட்டத்தை தடை செய்தால் அதை கண்டிப்பாக பலரும் வரவேற்பார்கள். முடிவு தமிழக அரசி(யி)ன் கையில்!

Friday, February 10, 2012

பதிவர் மோகன்குமாருடன் ஒரு சந்திப்பு

சென்னையில் இதுவரை நடந்த எந்தவொரு பதிவர் சந்திப்புக்கும் சென்றதில்லை. சிலர் எழுத்துக்களை ரசித்து வாசித்தாலும், அவர்களுக்குள் இருக்கும் அரசியல், குழு மனப்பான்மை ஆகியவையெல்லாம் பார்க்கும்போது சற்று ஒதுங்கி இருக்கவே விரும்புகிறேன். இப்பொழுதும், திரட்டிகளில் சுற்றுமபோது, "பிரபல பதிவரும் ............." என்று ஏதாவது ஜூ.வி., நக்கீரன், ரிப்போர்ட்டர் வகையறா டைட்டிலை பார்த்தாலே அலர்ஜியாக இருக்கிறது. ப்ளீஸ், கொஞ்சம் மாத்திகோங்கப்பா!

ஆரம்பத்தில் ப்ளாக் மீது ஒரு போதை இருந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் பதிவுலகில் நடந்த சில நிகழ்வுகளினாலேயே போதை குறைந்து ஒரு "ச்சே" பீலிங் வந்துவிட்டது. பிரபல பதிவர்களுக்கு நன்றி. இப்போதெல்லாம் எப்போது எழுத வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதுதான் எழுதுகிறேன் :)

பிரபலங்களிலும் ஒரு சிலர் விதிவிலக்காய் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படிப்பட்டவர்களில் எனக்கு பிடித்தமானவர்கள் வரிசையில், கண்டிப்பாக 'வீடு திரும்பல்' மோகன்குமார் அவர்களுக்கு முக்கிய இடம் உண்டு. எளிமையாக, டீசன்ட்டாக எழுதுவதினாலேயே இவரின் பதிவுகள் எனக்கு பிடிக்கும். 

சில நாட்கள் முன் புத்தக கண்காட்சியின்போது வாங்கிய புத்தகங்கள் பற்றி எழுதியபோது, தலைவர் புத்தகங்களை exchange பண்ணிக்கலாமா என்று கேட்டிருந்தார். தலைவர் எழுத்து பலரிடம் செல்வது குறித்து எனக்கு மகிழ்ச்சியே. எனவே நான்கு புத்தகங்களை அவருக்கு தபாலில் அனுப்பிவிட்டேன். அவர் அத்துடன் விடவில்லை. "என்னிடம் சில புத்தகங்கள் இருக்கிறது. ஒரே ஏரியாவில் இருந்துகொண்டு சந்திக்காமலேயே இருக்கிறோம், நேரில் வாங்க சந்திப்போம்" என்றார்.

நெருங்கிய நண்பர்கள் அருகில் இருக்கும்போதுதான் அரட்டையில் அரண்மனை கட்டி விளையாடுவேன். புதிதாக சந்திப்பவர்களோடு நான் அதிகம் பேசுவதில்லை. இது என் இயல்பான சுபாவமே தவிர நான் ஏன் பேசவேண்டும், வேண்டும் என்றால் அவர்கள் பேசட்டுமே என்ற ஈகோ அல்ல. மோகன் அழைத்தவுடன், ஒரு குறிப்பிட்ட தினத்தில் மதியம் அவருடைய அலுவலகத்தில் சந்திப்பது என்று முடிவு செய்தோம். சரியாக மதியம் பன்னிரண்டரை மணிக்கு வருவதாக சொல்லியிருந்தேன். ஆனால் வீட்டிலிருந்து கிளம்பும்போதே மணி பன்னிரண்டரை. நாம எப்போ சொன்ன நேரத்துக்கு கரெக்டா போயிருக்கிறோம்?




வீட்டிலிருந்து அவர் பணிபுரியும் அலுவலகத்துக்கு வெறும் பத்து நிமிட தூரம்தான். எனவே ஒருவழியாக சமாளித்துவிட்டேன். நேரில் சந்தித்தபோது ரொம்ப கேஷுவலாக பேசினார். தனி கேபின், அழகான சுத்தமான டேபிள், பக்கத்தில் அவரின் துறை சம்பந்தமான பார்ட் 1, பார்ட் 2, பார்ட் 3 என்று தடிமனான சில புத்தகங்கள் என்று கிட்டத்தட்ட ஒரு எம்.டி லுக்கில்தான் இருந்தார். பேச்சின் போது நடுநடுவே சிலர்  ஃபோன் செய்து சில கேள்விகள் கேட்க, அவர்களின் சந்தேகங்களையும் தீர்த்துவைத்தார். "போனை எடுத்தா நச்சு நச்சுன்றானுங்கப்பா" என்று கவுண்டர் மாதிரி அலுத்துக்கொள்ளவில்லையே தவிர, சார் நிஜமாவே பிஸிதான்!

எப்படி சமீப நாட்களில் நிறைய எழுதுகிறீர்கள் என்று கேட்டேன். சொன்னார். ம்ம்.....அது ஆஃப் த ரெக்கார்டாகவே இருக்கட்டும். சில புத்தகங்களை தந்து எது வேணுமோ எடுத்துகோங்க என்றார். கிளி கழுத்தை கண்ட அர்ஜுனன் போல் நான் தலைவரின் கதைகளை மட்டுமே எடுத்துக்கொண்டேன். அவருடைய சமீபத்திய பயணம், என்னுடைய வொர்க் டைமிங், பதிவர்கள் சந்திப்பு, சத்யம் தியேட்டர் என்று டாபிக் மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருந்தோம். வேளச்சேரியில் புதிதாக வரப்போகும் திரைஅரங்குகள் பற்றி சொன்னார். நான்தான் நிறைய பேசினேன் என்று நினைக்கிறேன். நிறைய பேசினாலும் ரொம்ப  ஃபார்மலாகத்தான் பேச முடிந்தது. முதன் முறை சந்திப்பதினால் இருக்கும் சிறு தயக்கம். மேலும் சில சந்திப்புகளில் கொஞ்சம் இயல்பாக பேசுவேன் என்று நம்புகிறேன்.

வயிற்றுக்கு ஈயும் நேரம் வந்ததால், ஏற்கனவே பேசிவைத்தபடி இருவரும் தலப்பாகட்டி'னோம். ஒரு கோழியை கொன்ற பாவத்தை அக்கவுன்ட்டில் ஏற்றிகொண்ட பிறகு விடைபெற்றேன். ஒரு பந்தா இல்லாத, பழகுவதற்கு எளிமையான, கண்ணியமான மனிதரை சந்தித்தோம் என்ற திருப்தி கிடைத்தது. விரைவில் மேலும் சில புத்தகங்களோடு மீண்டும் சந்திப்போம் மோகன்.

Tuesday, January 24, 2012

நில் கவனி தாக்கு - சுஜாதா

1960களில் வெளியான ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் மீது தலைவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்திருக்க வேண்டும். இந்த கதையை வாசித்து முடித்த பின் அப்படித்தான் எனக்கு தோன்றியது. தமிழில் இது போன்ற ஒரு ஸ்பை த்ரில்லர் கதையை இப்போதுதான் வாசித்திருக்கிறேன். என்னா ஒரு ஃப்ளோடா!

2011 புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகம் இது. புத்தக வாசிப்பிற்கும் எனக்கும் பெரிய இடைவெளி விழுந்த வருடம் 2011. இந்த வருடம் அதை ஈடுகட்டுவதற்காகவே, நான்கு நாட்கள் பட்டினி கிடந்தவன் சரவண பவன் ஃபுல் மீல்ஸை பார்த்தது போல, வெறித்தனமாக வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். எந்த தடையும் இல்லாமல் இது தொடர வேண்டும்.



கதைக்கு வருவோம். பம்பாயிலிருந்து (அப்போ மும்பை இல்லப்பா) டெல்லிக்கு வரும் ஒரு அணு விஞ்ஞானியை ரிசீவ் செய்து பத்திரமாக ஒரு இடத்திற்கு  அழைத்து வரும் பொறுப்பு நாயகனுக்கு தரப்படுகிறது. ஜேம்ஸ் பாண்ட் பாணி கதை என்பதால் ஒரு அழகிய பெண்ணை பார்த்தவுடன் சற்று கடமையிலிருந்து தவறுகிறான் நாயகன். அடையாளம் தெரியாத நபர்களால் அணு விஞ்ஞானி கடத்தப்படுகிறார். இதனால் கடிந்துகொள்ளும் மேலதிகாரியிடம், எப்படியாவது அவரை மீட்டு கொண்டு வருகிறேன் என்று இருபத்து நாலு மணி நேரம் டைம் கேட்கிறான் நாயகன். 

சில பல ஸ்டண்ட்களுக்கு பின் அணு விஞ்ஞானியை மீட்கிறான். நிற்க. கதை இதோடு முடிவதில்லை. இது வெறும் இடைவேளைதான். விஞ்ஞானியை கடத்தியவர்களின் பின்புலத்தை ஆராயும்போதுதான் அவனுக்கு நிறைய விஷயங்கள் தெரிய வருகிறது. இதற்கு மேல் கதை சொல்லி சஸ்பென்ஸை உடைக்க விரும்பவில்லை. இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

துப்பாக்கி, சண்டை, ரத்தம், ஆதர்சம், துரோகம் என்று செல்லும் கதையில், வாசகர்களுக்கு கடைசி அத்தியாயம் ஆரம்பிக்கும் முன் ஒரு சவால் விடுகிறார் தலைவர். கடைசி அத்தியாயம் வாசிக்கும் முன் கதை இப்படித்தான் முடியும் என்று யூகித்தால் நீங்கள் புத்திசாலிதான் என்கிறார். சத்தியமாக கடைசி அத்தியாயத்தின் பாதியை வாசிததபின்தான் யூகிக்கவே முடிந்தது. அதனாலென்ன, தலைவரிடம் தோற்பது கூட மகிழ்ச்சியைத்தான் தருகிறது.

இந்த கதையில், ஃப்ளோவை அடுத்து நான் ரசித்தது தலைவர் தரும் விவரமான வர்ணனைகள்தான். ஹோட்டல், அன்னெக்ஸ், காபரே நடனம் ஆடும் அழகி, அரங்கம் மற்றும் வழக்கம் போல் நாயகியின் அழகு. வாசிக்க வாசிக்க, கற்பனையில் ஒரு அட்டகாசமான த்ரில்லர் படத்தை காணமுடிகிறது. ஹாலிவுட் படங்களில், டைட்டிலில் BASED ON THE NOVEL என்று கதையின்  பெயரையும், ஆசிரியரின்  பெயரையும்  போடுவார்கள். தமிழில் ஏன் அது போல் இயக்குனர்கள் முயற்சிப்பதில்லை? கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று அனைத்திலும் தன் பெயர்தான் வரவேண்டும் என்ற பிடிவாதமோ? 

Ctrl+C, Ctrl+V வேலையையெல்லாம் செய்யும் ஷங்கர் இந்த கதையை படமாக எடுத்தால் கண்டிப்பாக சூப்பர் டூப்பர் ஹிட்டாகும். இல்லையென்றால் கெளதம். இவர்களை தவிர யார் எடுத்தாலும், வரும் அவுட்புட்டை தலைவர் மேலிருந்தபடியே கெட்ட ஆங்கிலத்தில் திட்டுவார்.

பெயர்: நில் கவனி தாக்கு
ஆசிரியர்: சுஜாதா
விலை: ரூ.75/-
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-565-3.html

Thursday, January 19, 2012

சத்யம் சினிமாஸ் - பெஸ்ட் இன் சென்னை

அவதார் ரிலீஸ் ஆகி இருந்த சமயம். சென்னையில் எந்த தியேட்டரிலும் வார இறுதியில் டிக்கெட் கிடைக்கவில்லை. பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆர்வம் மட்டும் அதிகமாக இருந்தது. சரி ஊரிலேயே பார்த்து விடலாம் என்று முடிவு செய்தேன். மாலை 6:30 மணிக்கு ஷோ. கூட்டம் அதிகம்தான். அடித்து பிடித்து டிக்கெட் வாங்கியாகிவிட்டது.

தியேட்டர் உள்ளே சென்றேன். சீட்டு நம்பர் எல்லாம் கிடையாது. கொஞ்சம் புண்ணியம் செய்திருந்தால் ஃபேன் இருக்கும் பகுதியில் சீட் கிடைக்கும். இதற்கு சாமர்த்தியமும் மிக அவசியம். அங்கிங்கு தேடி நல்ல இடத்தை பிடித்து உட்கார்ந்தேன். உலகமே எதிர்பார்த்த சினிமா இன்னும் சில நிமிடங்களில் நானும் காணப்போகிறேன். மகிழ்ச்சியாக இருந்தது. 

படம் ஆரம்பித்தது. வடிவேலு சொல்வதுபோல் நன்றாகத்தான் போய்கொண்டிருந்தது. பத்து பதினைந்து நிமிடங்களில் சிகரெட் வாசம் வர,  என்னடா இது என்று பக்கத்தில் திரும்பி பார்த்தால் இரு நல்ல 'குடிமகன்கள்' வாயில் சிகரெட்டோடும், கையில் பாட்டிலோடும், தியேட்டரை டெம்பரவரி 'பார்' ஆக மாற்றிகொண்டிருந்தனர். எனக்கு கடுப்பாகிவிட்டது. கேட்காவிட்டால் வேலைக்காகாது. கேட்டேன்.

"ஹலோ இதென்ன தியேட்டரா இல்ல பாரா?"

அந்த 'இருவரில்', ஒரு பிரகாஷ்ராஜ் "டேய் இங்க குடிக்க கூடாதாம்டா" என்று பக்கத்திலிருந்த மோகன்லாலை உசுப்பேற்ற, அவர் ஒருவித வெறுப்பு கலந்த சலிப்போடு என்னை பார்த்துவிட்டு, "எழுந்து போலாம் வா" என்று பிரகாஷ்ராஜை கூப்பிட்டுக்கொண்டு தியேட்டரை விட்டு வெளியே போய்விட்டார். 

அவர்கள் போய்விட்டாலும், என்னடா இது தியேட்டரில் போய் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறார்களே என்ற எண்ணம்தான் மனதில் மேலோங்கி இருந்தது. படத்தை என்னால் முழுமையாக என்ஜாய் பண்ணி பார்க்கமுடியவில்லை. ரொம்பவும் ஆசைப்பட்டு போன படம். கொஞ்சம் தலைவலியோடு திரும்பி வந்ததுதான் மிச்சம்.

அதிலிருந்து ஏதாவது ஒரு படத்தை பார்க்கவேண்டும் என்று ஆசைபட்டாலே என்னுடைய முதல் மற்றும் ஒரே சாய்ஸ் 'சத்யம்'தான். டிக்கெட் விலை 120, 115 என்று இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் கண்டிப்பாக சத்யம் வொர்த். 



சத்யம் பற்றி பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். இது தெரியாதவர்களுக்காக - வாரயிறுதியில் போவதென்றால் புதன் கிழமை காலை ஆறு மணிக்கே ஆன்லைனில் புக் செய்துகொள்ளுங்கள். கொஞ்சம் தாமதித்தாலும் டிக்கெட் கிடைப்பது கஷ்டம்.  பின்னர் உங்கள் மொபைலுக்கு டிக்கெட் கன்ஃபர்மேஷன் மெசேஜ் வரும். அதை சேவ் பண்ணிகொள்ளுங்கள். அது போதும். அதோடு படம் போவதற்கு ஐந்து நிமிடம் முன்னால் தியேட்டருக்கு போய் கவுண்டரில் டிக்கெட் ஐடி சொல்லி டிக்கெட் வாங்கிகொள்ளலாம். 

இரு சக்கர வண்டிகளுக்கு பார்க்கிங் கட்டணமாக சில தியேட்டர்கள் எல்லாம் ரூ.20௦ வாங்கும் காலகட்டத்தில், இன்னும் சத்யத்தில் பத்து ரூபாய்தான். என்ன, வெயில் அதிகமாக இருந்தால் வண்டிக்கு சன்பாத்தும், மழையாக இருந்தால், ஃப்ரீ வாட்டர் சர்வீசும் கிடைப்பது தவிர்க்க முடியாதது. மற்றபடி குறையொன்றுமில்லை.

பெரும்பாலும் ஞாயிறன்று புக் செய்துவிடுவதால், அண்ணா சாலையிலிருக்கும் வழக்கமான போக்குவரத்து இம்சை ஏதும் இருப்பதில்லை. வேளச்சேரியிலிருந்து சத்யம் போவதற்கு அரை மணி நேரம்தான் ஆகிறது. இப்படித்தான் கடந்த சில மாதங்களில் மங்காத்தா, Rockstar,  The Adventures of Tintin,  Mission Impossible: Ghost Protocol,  Don 2 போன்ற படங்களை எந்த வித மன உளைச்சலும், உடல் அலைச்சலும் இல்லாமல் நிம்மதியாக ரசித்து பார்த்தேன்.

ஆனால் எல்லா படங்களையும் சத்யத்தில்தான் பார்க்க வேண்டும் என்று அடம் பிடிப்பதில்லை. இப்போதும் சில படங்களை வார இறுதியில் ஊருக்கு போகும்போதுதான் பார்க்கிறேன். ஒரு சில படங்கள் மட்டுமே 'இத சத்யம்லதான் பாக்கணும்' என்று தோன்ற வைக்கின்றன. அடுத்த சில மாதங்களுக்கு நோ சத்யம். பில்லா 2விற்காக வெய்ட்டிங்!