கல்லூரியில் இளநிலை இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும்போது, எங்கள் கணிணி பிரிவு தலைவரிடம், 'நைட் லேப்' கேட்டு வாங்குவோம். காலையில் இருந்து வகுப்பில் படித்தது போக, இரவிலும் கண் விழித்து 'நைட் லேப்' கேட்பது 'ப்ரொக்ராம்ஸ்' ப்ராக்டிஸ் செய்ய அல்ல. 'நைட் லேப்'பிற்கு வந்தால் மறுநாள் கல்லூரி செல்லவேண்டியதில்லை. எனவே பெரும்பாலும் எப்போதெல்லாம் க்ரிக்கெட் மேட்ச் இருக்கிறதோ அதற்கு முன் நாள் எப்படியாவது 'நைட் லேப்' வாங்கிவிடுவோம்.
அப்போதும் இரவு முழுக்க கண் விழித்து கணிணித் திரையை உற்று நோக்கிக் கொண்டிருக்கமாட்டேன். 'நைட் லேப்' இன்சார்ஜாக யாராவது ஒரு லெக்சரர் இருப்பார். இரவு 11 அல்லது 11:30 மணியளவில் அவரும் தூங்கிவிடுவார். அவர் தூங்கியவுடன், வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் எங்கள் கல்லூரிப் பேருந்திற்குள் நண்பர்கள் படையெடுப்போம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இருக்கையும், அந்த இரவில் படுக்கையாகிவிடும். பின்னே? இரவு முழுக்க கண் விழித்திருந்தால் மறுநாள் எப்படி மேட்ச் பார்ப்பது?
படிப்புக்கென்று உடலை வருத்தி இரவில் கண் விழித்தது இவ்வளவுதான். ஆனால் படிக்கும்போது சுலபமாக தவிர்க்கமுடிந்தது வேலை கிடைத்தபோது தவிர்க்க இயலவில்லை. சரியாக நினைவில்லை, வேலை கிடைத்து ஒரு வாரமோ, பத்து நாளோ 'ட்ரெயினிங்'கில் இருந்தேன். ட்ரெயினிங் முடிந்தவுடன் முதலிலேயே ஒரு புயல் ப்ளஸ் பூகம்பம்...அடுத்த ஒரு மாதம் நைட் ஷிஃப்ட்!
அய்யகோ! என்ன கொடுமை? பொதுத் தேர்வுகளுக்கோ, பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கோ கூட அசராதவன், இப்போது பொருளீட்டும் நிமித்தம் இரவில் கண் விழிக்க வேண்டியிருக்கின்றதே! இதை கேட்க யாருமில்லையா? கடவுளுக்கென்ன கண்ணில் அறுவை சிகிச்சையா நடந்து கொண்டிருக்கின்றது? வேறு வழியில்லை, 'ஸ்கூபி டூ' வேஷம் போட்டாகிவிட்டது, குரைத்துதான் ஆகவேண்டும்.
இரவு எட்டரை மணிக்கு ஷிஃப்ட் ஆரம்பிக்கும். பத்து மணிக்கு மேல்தான் அலுவலகத்தில் இரவு உணவு வரும். இரவில் எட்டு அல்லது எட்டரை மணிக்கே சாப்பிடும் பழக்கம் உள்ளவன் நான். மாலை சாப்பிட்டுவிட்டு அலுவலகம் வந்தால், இரவு சீக்கிரம் பசிக்காது. பதினொரு மணிக்கு மேல்தான் சாப்பிட முடியும். அதனால் மாலையில் ஏதேனும் ஒரு பழச்சாறு அல்லது காபி. அவ்வளவுதான்.
பதினொரு மணிக்கு மேல் சாப்பிடப்போவதில் இன்னொரு பிரச்னை. சாப்பாடு சூடாக இருக்காது. அந்த நேரத்தில் ஆறிப்போய் சப்பென்ற சாப்பாட்டை சாப்பிடுவது மிகக் கொடுமை. [ ஏனோ இந்த வரியை தட்டச்சும்போது, எப்போதேனும் மின்மடலில் வரும், பசியில் வாடும் உகாண்டா நாட்டு குழந்தைகளின் புகைப்படங்கள் நினைவுக்கு வருகிறது :( ]
இரவு உணவென்றால் ஏதோ இட்லி, தோசை போன்றவை அல்ல. இரண்டு சப்பாத்தி அல்லது பரோட்டா குருமா, சாம்பார் சாதம், ரசம், மோர், ஏதேனும் கூட்டு அல்லது பொரியல், அப்பளம், ஊறுகாய், ஒரு ஸ்வீட் அல்லது வாழைப்பழம். மதிய உணவு எப்படியிருக்குமோ அதற்கு சற்றும் குறைந்ததல்ல இரவு உணவு. எனவே நானும் நண்பரும் பத்து மணிக்கே உணவருந்தும் இடத்தில் ஆஜராகி விடுவோம். மதியம் சாப்பிடுவதைப் போல கட்டு கட்டென்று கட்டிவிட்டு, ஃப்ளோருக்கு போய் உட்கார்ந்தால், தூக்கம் கும்மென்று வரும்
வேலைக்குச் சேர்ந்த புதிதென்பதால், பெரிய தலைகள் யாராவது பார்த்து தொலைப்பார்களோ என்ற பயத்திலேயே, தூங்க முடியாமல் மிகுந்த அவஸ்தையில் அந்த இரவுகள் செல்லும். நம்பினால் நம்புங்கள், உடன் வேலை செய்த சிலர் மேற்கத்திய கழிவறைகளில் போய் சிறிது நேரம் தூங்கிவிட்டு வந்ததும் அரங்கேறியது.
இதோ..சில வருடங்கள் கழித்து..இன்று, ப்ராஜக்ட் டெட்லைன், க்ளையண்ட்டுக்கு சப்போர்ட் கொடுக்கவேண்டும், அவர்கள் அனுப்பும் மின்மடலுக்கு பதிலளிக்கவேண்டும்..இன்னும் என்னவெல்லாமோ சொல்லி, சில நாட்கள் இரவில் கண் விழித்து வேலை செய்யவேண்டிய நிலை. ஆனால் வேலைக்குச் சேர்ந்த புதிதில் இருந்த நைட் ஷிஃப்ட் மீதான வெறுப்பு இப்போது இல்லை.
பகலில் இல்லாத அமைதி இரவில் மட்டுமெ கிடைக்கிறது. ப்ளஸ் பகலில் இல்லாத மைண்ட் ஃப்ரெஷ்னஸ்ஸும், 'ராஜா கோ ராணி ஸே ப்யார் ஹோகயா' என்று மெல்லிய ஓசையில் மனம் வருடும் பழைய ஹிந்தி பாடலைக் கேட்டுக்கொண்டே வேலையைப் பார்க்கும் சுதந்திரமும் நைட் ஷிஃப்ட்டில் மட்டுமே சாத்தியம். சில நேரம், இரவில் பணிபுரிவதுதான் ஏ.ஆர்.ரஹ்மானின் வெற்றிக்கு முக்கிய காரணமோ என்று கூட யோசித்திருக்கிறேன்.
நைட் ஷிஃப்ட் முடிந்து காலை தூங்கப்போகும் முன்.....வேளச்சேரியில் உடுப்பி போளி ஸ்டாலில், பொங்கல் (நெய் வாசம் கும்மென்றிருக்கும்:)) சாப்பிட்டு படுத்தால்...இட்ஸ் டிவைன்! நெய் பொங்கல் சாப்பிட்டு படுப்பது இரண்டு தூக்க மாத்திரை போட்ட எஃபெக்ட்டை தரும். சாப்பிட்டு காலை ஏழு மணிக்கு படுத்தால் கிட்டதட்ட மாலை மூன்று அல்லது நான்கு மணி வரையிலான தூக்கம் சர்வ நிச்சயம்.
பகலில் நன்றாக தூங்காவிட்டால், அன்றைய இரவு மிகக் கொடுமையாக இருக்கும். சிறிது நேரம் வேலை செய்துவிட்டு தூங்கிக்கொள்ளலாம் என்று நினைத்தால் அன்றுதான் க்ளையண்ட்டிடமிருந்து நூத்தியெட்டு மெய்ல்களும், ஆயிரத்தெட்டு கேள்விகளும் குவிந்து தள்ளும். பல முறை பகலில் சரியாக தூங்காததினால் ஏகப்பட்ட அவஸ்தைபட்டிருக்கிறேன். நைட் ஷிஃப்ட் செய்வோருக்கு நான் கூற விரும்புவது, ஒரு வேளை உணவு இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, ஆனால் தூக்கத்தை மட்டும் தவிர்க்காதீர்கள்.
சில வருடங்களுக்கு முன் சிவாஜி நடித்த நவராத்திரி படத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் திருடனாக வரும்போது ஒரு பாடலைப் பாடுவார். எனக்கென்னவோ அப்பாடலின் ஆரம்ப வரிகள் நைட் ஷிஃப்ட்டில் வேலை செய்வோருக்குக் கூட பொருந்தும் என்றே தோன்றியது.
இரவினில் ஆட்டம்
பகலினில் தூக்கம்
இதுதான்
எங்கள் உலகம்
எங்கள் உலகம்....