ஆனால் லட்சுமிகாந்தனுக்கு வழியும் ரத்தமும் சரி, கோபமும் சரி, கொஞ்சமும் அடங்கவில்லை. அதனால் மருத்துவமனைக்குச் செல்லும் முன் முதலில் வேப்பேரி காவல் நிலையத்திற்குச் சென்று, வடிவேலுவும், 30 வயது மதிக்கத்தக்க இன்னொரு நபரும் சேர்ந்து தன்னை கத்தியால் குத்திவிட்டதாக புகார் செய்துவிட்டுதான் மருத்துவமனைக்குச் சென்றார். இதில் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று காவல் நிலையத்துக்கு ரிக்ஷாவில் சென்ற பின் ரிக்ஷாவை விட்டு லட்சுமிகாந்தனால் இறங்கக்கூட முடியவில்லை. அதனால் அப்போது காவல் நிலையத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் நம்பியார் வெளியே வந்து, லட்சுமிகாந்தன் சொல்ல சொல்ல, புகாரை அவரே எழுதிக்கொண்டார்.
அதன் பின் பொது மருத்துவமனையில், வென்லாக் வார்டில் (Wenlock Ward) லட்சுமிகாந்தன் அட்மிட் ஆக, டாக்டர் பி.ஆர்.பாலகிருஷ்ணன் அவரை பார்த்தபோது, ஏறக்குறைய தன்னுடைய வாழ்வின் முடிவிற்கே லட்சுமிகாந்தன் வந்திருந்தார். கத்தியால் குத்துப்பட்ட பின் நிறைய நேரம் தாமதப்படுத்தி வந்ததால், மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. நவம்பர் 9, 1944 அன்று அதிகாலை 4:15 மணிக்கு, வழக்கமாகச் சொல்வதுபோல், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
லட்சுமிகாந்தனை வடிவேலுவும், நாகலிங்கமும் கொன்றது உண்மைதான். ஆனால் இந்த திட்டத்திற்கு பின் ஆரியவீரசேனன், ஜெயானந்தம், ராஜாபாதர், ஆறுமுகம் போன்றோரும் இருந்தனர். போலீஸாரின் அதிரடியில் முதலில் மாட்டியது வடிவேலு. நவம்பர் 9ம் தேதியன்றே வடிவேலுவைக் கைது செய்தனர் போலீஸார். பின்பு ஒவ்வொருவராக கைது செய்யப்பட, கடைசி நேர திருப்பமாக ஜெயானந்தம் அப்ரூவராக மாறினான். இதன்பின்தான் பெரிய தலைகள் உருள ஆரம்பித்தன.
நவம்பர் 27, 1944 - அசோகா பிலிம்ஸ் அலுவலகத்துக்கு போலீஸார் வந்து என்.எஸ்.கிருஷ்ணனை கைது செய்வதாகக் கூறினர் போலீஸார். எதுவும் கூறவில்லை என்.எஸ்.கே. அமைதியாக அவர்களுடன் கிளம்பினார். அதே நேரத்தில் மாம்பலத்தில் தியாகராஜ பாகவதரும் கைது செய்யப்பட்டார். ஆனால் ஸ்ரீராமுலு நாயுடு மட்டும் ஜனவரியில்தான் கைது செய்யப்பட்டார்.
பாகவதரும், என்.எஸ்.கேவும் ஜாமீனில் வெளிவந்தனர். வெளியே வந்தவுடன் விறுவிறுவென்று ஒப்பந்தம் செய்துகொண்டிருந்த படங்களிலெல்லாம் என்.எஸ்.கே நடித்து முடித்தார். ஜனவரி 12, 1945 அன்று இருவரின் ஜாமீனும் ரத்தானது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பாகவதரும், என்.எஸ்.கேவும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
செஷன்ஸ் விசாரணை ஏப்ரல் 12, 1945 அன்று ஆரம்பமானது. ஸ்ரீராமுலு நாயுடு சார்பாக வாதாட பிரபல வழக்கறிஞர் கே.எம்.முன்ஷி பம்பாயிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தார். அதற்காக முன்ஷிக்கு ஒரு நாளைக்கு ரூ.75,000 கொடுக்கப்பட்டது. பாகவதருக்காகவும், என்.எஸ்.கேவுக்காகவும் வாதாட வி.டி.ரங்கசாமி அய்யங்கார், வி.ராஜகோபாலச்சாரி, ரோலண்ட் பிராடல், எஸ்.கோவிந்தசாமி நாதன் ஆகியோர் ஆஜராகி இருந்தார்கள்.
கே.எம்.முன்ஷி வாதத் திறமை ஸ்ரீராமுலு நாயுடுவைக் காப்பாற்றியது. ஆம், கொலைத் திட்டம் தீட்டியதாக சொல்லப்பட்ட நவம்பர் 7, 1944 அன்று, பம்பாய் தாஜ் மகால் ஹோட்டலில் சர் ஆர்.கே.சண்முகம் செட்டியாருடன், ஸ்ரீராமுலு நாயுடு தங்கி இருந்ததாக நிரூபிக்கப்பட்டது. இந்த நிரூபணம் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஏப்ரல் 20, 1945 அன்று ஸ்ரீராமுலு நாயுடு விடுதலை செய்யப்பட்டார். இதன்பின் என்.எஸ்.கேவுக்காகவும் வாதாட கே.எம்.முன்ஷி நியமிக்கப்பட்டார்.
நவம்பர் 2 முதல் 11 வரை என்.எஸ்.கே சேலம் நகரில் இருந்ததை தக்க ஆதாரங்களுடன் நிரூபித்தார் முன்ஷி. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் பணிபுரிந்த பலரும் என்.எஸ்.கேவுக்கு சாதகமாக சாட்சி அளித்தனர். ஆனாலும் நீதிபதிகள் நிறைய விஷயங்களில் திருப்தி அடையவில்லை. 27 நாட்கள் விசாரணை முடிந்தபின் மே 5, 1945 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
வடிவேலு, நாகலிங்கம், ஆரியவீரசேனன், ராஜாபாதர் ஆகியோர் கொலை, கொலைக்கான சதி ஆகியவற்றில் குற்றவாளிகளாகத் தீர்மானிக்கப்பட்டனர். தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் - இவர்கள் இருவரும் கொலைக்கான சதித் திட்டத்துக்கு உடந்தையாக இருந்தனர் என்று ஒன்பது பேர் அடங்கியிருந்த நீதிபதிகள் குழுவில் ஆறு பேர் தெரிவித்திருந்ததால், ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டு இருவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
72 காரணங்களை சுட்டிக்காட்டி ஜுலை 12, 1945 அன்று உயர்நீதிமன்றத்தில் பாகவதரும், கிருஷ்ணனும் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட்டு அக்டோபர் 22, 1945 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனாலும் அக்டோபர் 29 அன்று உயர்நீதிமன்ற தீர்ப்பு, செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. இதற்குப்பின் லண்டன் ப்ரிவி கவுன்சிலில் (Privy Council) பாகவதரும், கிருஷ்ணனும் அப்பீல் செய்தனர்.
இந்தமுறை இருவருக்காகவும் வாதாட வந்தவர் வேலூர் எல்.எத்திராஜ். பாகவதரும், கிருஷ்ணனும் லட்சுமிகாந்தனின் சில எதிரிகளை நவம்பர் 7, 1944 அன்று ஒற்றைவாடை தியேட்டரில் சந்தித்து கொலைக்காக பணம் கொடுத்தனர் என்று பிராசிக்யூஷன் தரப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால் சாட்சியத்தில், சதித் திட்டம் தீட்டிய தினம் நவம்பர் 7 என்றும், குற்றப் பத்திரிக்கையில் நவம்பர் 8 என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததை சுட்டிக் காட்டினார் எத்திராஜ். மேலும் அப்ரூவரான ஜெயானந்தம் கிட்டதட்ட ஆறு விதமான வாக்குமூலம் கொடுத்திருந்தார். அதில் ஒவ்வொன்றும் மற்றொன்றுக்கு ரொம்பவே முறண்பட்டிருந்ததையும் சுட்டிக் காட்டினார் எத்திராஜ். சதித் திட்டம் தீட்டியதாக சொல்லப்பட்ட நவம்பர் 7 முன்பே, அக்டோபர் 19ம் தேதியன்று லட்சுமிகாந்தனைக் கொல்ல முயற்சி நடந்ததையும் நிரூபித்தார் எத்திராஜ். இப்படி படிப்படியாக செஷன்ஸ் கோர்ட் வழக்கறிஞர்கள் இந்த வழக்கில் விட்டிருந்த நிறைய ஓட்டைகளை எத்திராஜ் தன் திறமையால் அடைத்தார்.
தீர்ப்பளிக்கும் நாள் வந்தது. தீர்ப்பின் சாராம்சம் இதுதான், "அப்ரூவர் ஜெயானந்தத்தின் வாக்குமூலம் நிரூபணமாகவில்லை. அதனால் ஜெயானந்தத்தின் வாக்குமூலத்தை வைத்து பார்க்கும்போது தியாகராஜ பாகவதரையும், என்.எஸ்.கிருஷ்ணனையும் தண்டிப்பது நியாயமாகாது". இருவரும் விடுதலை ஆனார்கள். ஏறக்குறைய 30 மாதங்கள்.....ஆம், இரண்டரை வருடங்கள் சிறையில் கழித்த பிறகு!
#சிறையில் இருந்து வந்த பின்பு பாகவதரின் திரையுலக வாழ்க்கை சரிந்து போனது. திராவிடக் கருத்துகளை சமுதாய சீர்திருத்த படங்களாக மக்கள் பார்க்கத் தொடங்கிய காலமது. பாகவதரின் பாடல்கள் நிறைந்த மென் படங்கள் எடுபடாமல் போனது. தன் இறுதிக் காலத்தில் ஆண்டவனிடத்தில் மிகுந்த பக்தி கொண்டு கோயில்களில் மட்டுமே பாடி, ஏழ்மையில் மூழ்கி மறைந்தார். தன்னைப் பற்றிக் குறிப்பிட்டு பாகவதர் சொன்னது "என்னைப் போல் வாழ்ந்தவனும் இல்லை, என்னைப் போல் தாழ்ந்தவனும் இல்லை"
#இதற்கு நேர்மாறாக சிறையில் இருந்து வந்த பின்பு என்.எஸ்.கே பல படங்களில் நடித்து புகழின் உச்சியைத் தொட்டார். என்.எஸ்.கிருஷ்ணன்-டி.ஏ. மதுரம் நகைச்சுவை காட்சிகள் இருக்கிறதா என்று தெரிந்துகொண்ட பின்பே படம் பார்க்கும் அளவுக்கு, மக்களின் மனதில் இடம் பெற்றார் என்.எஸ்.கே.
#சிறையிலிருந்து விடுதலையானபின் நிறைய ஊர்களில் என்.எஸ்.கேவுக்கு விழா எடுத்தார்கள். ஜுலை 30, 1947 அன்று திருவல்லிக்கேணியில் நடராஜா கல்விக் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் பம்மல் சம்பந்த முதலியார் என்.எஸ்.கேவுக்கு "கலைவாணர்" என்ற பட்டம் சூட்டி, "கலைவாணர்" என்று பொறிக்கப்பட்ட வெள்ளிக் கேடயத்தையும் அளித்தார்.