Wednesday, March 27, 2013

அக்பர்

ல்லாம் சிறு வயதில், பள்ளியில் படித்ததுதானே. அப்படி என்ன இருந்துவிடப்போகிறது என்று கொஞ்சம் அலட்சியத்துடன்தான் இந்த புத்தகத்தை எடுத்தேன். 

அக்பர், ஹுமாயூன், பாபர், ஜஹாங்கிர், இப்ராஹிம் லோடி, ஹேமு, ஷேர் ஷா, சிக்கந்தர் ஷா என்று இதில் வரும் பெயர்கள், முதலாம் பானிபட் போர், இரண்டாம் பானிபட் போர் என எல்லாமே நாம் கடந்து வந்ததுதான். ஆனாலும் எழுத்து நடை நம்மை கட்டிப்போடுகிறது.

வெளிப்படையாக சொன்னால், "சிறுவயதில் படித்தது" என்று சொல்லவே கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கிறது. ஆங்கில வழி கல்வி என்பதால், புரிந்து படிக்கும் ஆர்வமின்றி, வெறும் மனப்பாடமே உலகம் என்றாகிப்போனது. பின்னே, மதிப்பெண்ணை விட வரலாறு தெரிந்து கொள்வதா முக்கியம்?

இந்த மதிப்பெண் இம்சை ஏதுமின்றி, இப்போது படிக்கும்போதுதான், வரலாறை எந்தளவிற்கு மிஸ் பண்ணியிருக்கிறோம் என்பதை உணரமுடிகிறது.





சரி, அக்பருக்கு வருவோம். யார் அக்பர்?

முகலாயப் பேரரசர் பாபர். பாபரின் மகன் ஹுமாயூன். ஹுமாயூனின் மகன்தான் அக்பர். முதல் ஒன்றிரண்டு அத்தியாயங்களில் இவர்களை நமக்கு பொறுமையாக அறிமுகப்படுத்திவிட்டு, அடுத்ததடுத்த அத்தியாயங்களில், "ஓடியாங்கடா என் பின்னாடி" என்று தடதடவென சம்பவங்களை நகர்த்த ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.

அக்பரின் வாழ்க்கை born with silver spoon என்றெல்லாம் ஆரம்பிக்கவில்லை. ஹுமாயூனுக்கென்று ஒரு ராஜ்ஜியம் இல்லாத சூழ்நிலையில்தான் அக்பர் பிறக்கிறார். பின்பு தன் நம்பிக்கைக்குரியவரான பைரம் கானுடன் சேர்ந்து, ஆட்டத்தை ஆரம்பிக்கிறார் ஹுமாயூன். தனக்கென ஒரு ராஜ்ஜியம் அமைகிறது.

நாமெல்லாம் 12-14 வயதில் என்ன செய்திருப்போம்? சைக்கிள், பைக் ஓட்ட கற்றுக்கொண்டிருப்போம். சீட்டு இல்லாமல் மளிகை கடைக்குச் சென்று, அம்மா சொன்ன ஐந்தாறு பொருட்களை நினைவில் வைத்து வாங்கி வந்திருப்போம். ரேஷனுக்கு சென்றிருப்போம். எப்போதாவது படித்திருப்போம். நிறைய க்ரிக்கட் விளையாடியிருப்போம். தலையெழுத்தே என ட்யூஷன் சென்றிருப்போம்.

ஏறக்குறைய இதே வயதில், அக்பர் நாட்டை ஆள ஆரம்பித்திருந்தார். ஆம், பத்து வயதிற்குள்ளாகவே அக்பருக்கு, ஒரு வீரனுக்கு தேவையான அனைத்து பயிற்சிகளும், ஏன் நேரடி போர் அனுபவம் கூட கிடைத்திருந்தது. ஹுமாயூனுக்கு கூடவே இருந்ததை போல, அக்பருக்கும் பைரம் கான் உடன் இருந்து, போரிலும், ஆட்சியிலும் வழி நடத்தியிருக்கிறார்.

வெயிலில் இருப்பவனுக்குத்தான், நிழலின் அருமை தெரியும் என்பது போல், எழுத படிக்க தெரியாத அக்பர் புத்தகங்களை சேகரிக்க காட்டிய ஆர்வம் ஆச்சரியப்படவைக்கிறது. அவற்றை வாசித்து காட்டுவதற்கென்றே நிறைய பேர் அக்பரிடம் பணிபுரிந்திருக்கிறார்கள்.

அக்பர் என்றால், பீர்பால் இல்லாமலா? பீர்பாலும் இருக்கிறார். எல்லாவற்றையும் இங்கேயே எழுதிவிட்டால்? ஹுஹும்...இதற்கு மேல் புத்தகத்தை வாசித்து தெரிந்துகொள்ளுங்கள்.

பெயர்: அக்பர்

ஆசிரியர்: என். சொக்கன்

விலை: ரூ.90/-

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

இணையம் மூலமாக வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-781-7.html

Monday, January 21, 2013

2013 சென்னை புத்தக கண்காட்சி

புத்தக கண்காட்சிக்கு செல்ல ஆரம்பித்ததிலிருந்து, மிகப் பொறுமையாக, நிதானமாக, ரசித்து ரசித்து புத்தகங்கள் வாங்கியது இந்த வருடம்தான். மதிய நேரத்தில் சென்றால், கூட்டம் குறைவாக இருக்கும் என்றெண்ணி கடந்த சில வருடங்களில் ஏமாந்ததுதான் மிச்சம். எனவே, இந்த வருடம், வாரயிறுதியில், காலையிலேயே செல்ல முடிவெடுத்தேன்.


வாரயிறுதியில் கண்காட்சி 11 மணிக்கு ஆரம்பிக்கிறது என்றாலும், சனிக்கிழமை (19-01-13) காலை 10:30க்கே ஒய்எம்சிஏ சென்றடைந்தேன். நுழைவுச்சீட்டு வாங்கும் வரிசையில், எனக்கு முன்னர் ஏறக்குறைய இருபது பேர் நின்றிருந்தனர். 10:45க்கு நுழைவுச்சீட்டு தர ஆரம்பித்தனர். வாங்கிய பின், பின்னால் பார்த்தேன். "சாப்பிட வாங்க". வயிற்றுக்கு ஏற்கனவே ஈயப்படிருந்ததாலும், அவர்கள் நிர்ணயித்திருக்கும் விலையை கேள்விப்படிருந்ததாலும், "வரமாட்டேன் போங்க" என்று உள்ளே போகாமலேயே வெளிநடப்பு செய்தேன்.

கண்காட்சி அரங்கம். கடைசி வாயிலிலிருந்து ஆரம்பித்தேன். காலை நேரம் என்பதால், நியாயத்திற்கு காலியாக இருந்தது. எப்போதும் கண்காட்சியை ரங்கநாதன் தெருவை போல் பார்த்து பழகிய எனக்கு, இது ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது. கொஞ்சம் மகிழ்ச்சியும். ரிலாக்ஸாக நிறைய ஸ்டால்களை சுற்றி பார்க்கலாம்.



முதலில் சென்றது வாலி பதிப்பகம். "வாலிப வாலி" வாங்கிவிட்டு, பில் போடும்போது அங்கிருந்த பெரியவரிடம் கேட்டேன்.

"இது கவிஞர் வாலி...அவரோட பதிப்பகமா சார்?"

சிரித்தார். 

"இல்லங்க, அவர்கிட்ட அனுமதி வாங்கிட்டு, அவர் பேர்ல நடத்தறோம். திங்க கிழமை (21-01-13) வந்தீங்கன்னா அவரை பார்க்கலாம், இங்க வரார்"

தலைக்கு மேல் இடது பக்கத்தில், ஒரு BUBBLE தோன்றி, திங்கள் மாலை அட்டெண்ட் பண்ணவேண்டிய க்ளையண்ட் கால் தெரிந்தது. என்ன வாழ்க்கடா இது! புத்தகத்திற்கான காசையும், ஒரு "தேங்க் யூ சார்"ஐயும் கொடுத்துவிட்டு கிளம்பினேன்.


இவர்கள் 7Cயா என தெரியாது. ஆனால், ஒரு ஆசிரியர் இந்த மாணவர்களை அழைத்து வந்திருந்தார்


ஸ்டாலை வடக்கு நோக்கி போட்டிருக்கிறார்களா, தெற்கு நோக்கி போட்டிருக்கிறார்களா என்றெல்லாம் பார்க்காமல், கிழக்கு நோக்கி விரைந்தேன். கிழக்கு பதிப்பகம். ALWAYS FAVOURITE! முதலில் கொஞ்சம் சுஜாதா(க்)கள். வாத்தியார் எழுத்தில் வாசிக்காதது இன்னும் நிறைய இருக்கிறது. மற்ற சில பதிப்பகங்களை விட, இங்கு விலை சற்று அதிகம் என்றாலும், தொடர்ந்து இங்கு வாங்குவதற்கான காரணம் புத்தக உள்ளடக்கம் மற்றும் தாளின் தரம்.

ஏனோ, என்.சொக்கன், மருதன், முகில் ஆகியோரின் புதிய புத்தகங்கள் அதிகளவில் தென்படவில்லை. மிக கொஞ்சமே. சில புத்தகங்களை எடுத்துக்கொண்டேன். நல்ல வேளை, பில் போடும்போது, "கிழக்கு பதிப்பகம் தி.மு.க.வோடதா" என்று கேட்கக்கூடாத அளவிற்கு அறிவிருப்பதை நினைத்து அகமகிழ்ந்தேன்.

பின்பு ஒரு காமிக்ஸ், உயிர்மையில் மேலும் ஒரு சுஜாதா. அவ்வளவுதான்.

இந்த வருடம் வாங்கிய புத்தகங்கள்

  1. வாலிப வாலி - நெல்லை ஜெயந்தா - வாலி பதிப்பகம் - ரூ.250/-
  2. உணவின் வரலாறு - பா.ராகவன் - கிழக்கு பதிப்பகம் - ரூ.140/-
  3. பிரபல கொலை வழக்குகள் - SP. சொக்கலிங்கம் - கிழக்கு பதிப்பகம் - ரூ.140/-
  4. பாட்ஷாவும் நானும் - சுரேஷ் கிருஷ்ணா & மாலதி ரங்கராஜன் - வெஸ்ட்லேண்ட் லிமிடெட் - ரூ.125/-
  5. லெனின் - மருதன் - கிழக்கு பதிப்பகம் - ரூ.120/-
  6. எடிசன் - இலந்தை சு. இராமசாமி - கிழக்கு பதிப்பகம் - ரூ.115/-
  7. பரலோகப் பாதை பச்சை! - லயன் காமிக்ஸ் - ரூ.100/-
  8. திப்பு சுல்தான் - மருதன் - கிழக்கு பதிப்பகம் - ரூ.90/-
  9. அக்பர் - என்.சொக்கன் - கிழக்கு பதிப்பகம் - ரூ.90/-
  10. எப்படி ஜெயித்தேன்? (நாடோடி - மன்னன் திரைப்படம் வெற்றியடைந்தது பற்றி) - எம்.ஜி.ஆர். - நாதன் பதிப்பகம் - ரூ.50/-
  11. ஆரோக்கிய கீரை சமையல் - காஞ்சன மாலா - மினி மேக்ஸ் - ரூ.40/-


சுஜாதா ஸ்பெஷல்

  1. கொலையுதிர் காலம் - உயிர்மை பதிப்பகம் - ரூ.200/-
  2. இதன் பெயரும் கொலை - கிழக்கு பதிப்பகம் - ரூ.115/-
  3. சொர்க்கத் தீவு - கிழக்கு பதிப்பகம் - ரூ.95/-
  4. விடிவதற்குள் வா - கிழக்கு பதிப்பகம் - ரூ.95/-
  5. 24 ரூபாய் தீவு - கிழக்கு பதிப்பகம் - ரூ.90/-
  6. மிஸ். தமிழ்த்தாயே நமஸ்காரம்! - கிழக்கு பதிப்பகம் - ரூ.85/-
  7. ஆயிரத்தில் இருவர் - கிழக்கு பதிப்பகம் - ரூ.70/-
  8. அப்ஸரா - கிழக்கு பதிப்பகம் - ரூ.50/-
  9. தப்பித்தால் தப்பில்லை - கிழக்கு பதிப்பகம் - ரூ.35/-

வாங்கிய அன்றே, வாத்தியாரின் ஒரு கதையை வாசித்து முடித்து, இந்த வருடத்தின் கணக்கை துவக்கியிருக்கிறேன். :-)


Friday, December 28, 2012

2012 - ரசித்து பார்த்த திரைப்படங்கள்

து கண்டிப்பாக 2012ல் வெளிவந்த சிறந்த படங்களின் லிஸ்ட் அல்ல. என் ரசனைகேற்றவாறு, 2012ல் நான் ரசித்து பார்த்த படங்களை வரிசைப்படுத்தியிருக்கிறேன். அந்த படத்தை விட்டுட்ட, இந்த படத்தை விட்டுட்டன்னுலாம் குறை சொல்லப்பிடாது :)

**********************

காதலில் சொதப்புவது எப்படி 

வாவ்!: காதலர்கள் பிரிகிறார்கள். ஈகோ பிரச்னை. எப்படி மீண்டும் சேருகிறார்கள்? நெகிழ்வு, உருக்கம் அது இதுவென்று ஒரு துளி கண்ணீரையாவது வரவழைக்கக்கூடிய கதை ஆனாலும் அதை நகைச்சுவையாக சொன்னதாலேயே பிடித்துப்போனது. அதுவும் ஒரு காட்சியில், அமலா பால் அழ ஆரம்பிக்கும்போது, ஒரு அணையில் இருந்து நீர் வெளியேறுவதை காண்பிக்கும்போது சிரிப்பை அடக்கமுடியவில்லை. 

ஆனால் உங்கள் மனைவி/காதலி அழும்போது, இந்த காட்சி நினைவுக்கு வந்து சிரித்து தொலைத்தீர்களேயானால், சனி பகவான் உங்கள் தலையில் டிஸ்கோ டான்ஸ் ஆடுகிறார் என்று அர்த்தம்.

ப்ச்: ஆரம்பத்தில் கொஞ்சம் நன்றாக இருந்தாலும் போகப் போக, சித்தார்த் கேமராவை பார்த்து "பசங்க பொண்ணுங்க, பசங்க பொண்ணுங்க" என்று அடிக்கடி பேசுவது அவ்வளவாக ரசிக்கும்படி இல்லை.

அம்புலி 

வாவ்!: நமக்கு அடையார் ஆனந்த பவன் பாஸந்தியைப் போன்றது, இயக்குனர் ஹரீஷுக்கு ஹாரர் ஜானர் கதைகள். எனவே இம்மாதிரி கதையை அவர் தேர்ந்தெடுத்தது ஆச்சரியமில்லை. ஆனால் திருட்டு விசிடி பிரச்னையை சமாளிக்க இந்த டீம், 3டி'யில் படத்தை எடுத்தது மிக புத்திசாலித்தனமான முடிவு. 

தமிழ்நாட்டில் இன்றும் பல கிராமங்களில் ஏதாவதொரு ஏரியாவை பற்றி ஒரு பேய் கதை இருக்கும். கிராமத்தில் ஒரு ஹாரர் கதை, அதுவும் 3டி'யில் என்பது படத்திற்கு மேலும் சுவாரஸ்யம் கூட்டியது.

ப்ச்: காதலை இன்னும் கொஞ்சம் க்யூட்டாக காண்பித்திருக்கலாம். பாடல்களை போல் காதலும் மனதில் அவ்வளவாக ஒட்டவில்லை. க்ளைமேக்ஸ் இன்னும் கொஞ்சம் பெட்டராக படமாக்கப்பட்டிருக்கலாம்.

இங்க்லிஷ் விங்க்லிஷ்

வாவ்!: ஸ்ரீதேவி. QUEEN'S RETURN TO THE SCREEN. ஆங்கிலம் அவ்வளவாக தெரியாத ஒரு பெண்ணை, அவள் குடும்பத்தினரே எவ்வளவு அலட்சியமாக ட்ரீட் செய்கின்றனர் என்பதை மிக இயல்பாக காண்பித்திருந்தார் கெளரி ஷிண்டே. ஒரு சில குடும்பத்தலைவர்களுக்காவது கண்டிப்பாக உறுத்தியிருக்கும். 

ஆங்கிலம் கற்றுக்கொண்டபின் ஸ்ரீதேவி கிளைமேக்ஸில் ஐ.நா.சபையில் உரையாற்றுவாரோ என்கிற பயத்தில் நாம் பார்த்துக்கொண்டிருக்கும்போது, வீட்டு திருமண நிகழ்ச்சியில், அதுவும் சிற்சில தவறுகளுடன் ஆங்கிலம் பேசுவது போன்று காண்பித்திருந்தது படு யதார்த்தம்.

ப்ச்: நானும் இருக்கேன் என்பது போல் இருந்தது இசை. இளையராஜாவை இறக்கி விட்டிருக்க வேண்டும். நிறைய காட்சிகளில் நம் மனதில் புகுந்து ஆட்கொண்டிருப்பார். GAURI & BALKI, YOU MISSED HIM!

ஒரு கல் ஒரு கண்ணாடி

வாவ்!: வேறு யார், சந்தானம்தான். வசனங்களுக்கு இணையாக, பாடி லேங்க்வேஜிலும், ரியாக்ஷனிலும் அதகளப்படுத்தி இருந்தார். ஓவர் பில்டப், ஒப்பனிங் சாங் என்று எதுவுமில்லாமல், தூக்கத்திலிருந்து எழுந்திருப்பது போன்று அறிமுகமானதிலேயே உதயநிதியை பிடித்துப்போனது. நடனத்தை தவிர, நடிப்பில் ஓரளவு பாஸாகிவிட்டார் என்றே சொல்லலாம்.

ப்ச்: லூஸு போல ஹன்சிகாவை சுற்றிய பின், ப்ராஜக்ட், ஒத்து வராது என்றெல்லாம் ஹீரோ சொல்லும்போது, ஓங்கி ஒரு குட்டு குட்டலாம் போல இருந்தது. ஹீரோ ஹீரோயின் காதலிக்கிறார்கள். பிரிகிறார்கள். காமெடி நண்பன். நட்பு. பிரபல ஹீரோவின் ஸ்பெஷல் அப்பீயரன்ஸ். ஹீரோ ஹீரோயின் லவ் சக்சஸ். இந்த டெம்ப்ளேட்டை ராஜேஷ் கண்டிப்பாக மாற்றியே தீரவேண்டும். OLD WINE IN NEW BOTTLE ரொம்ப நாளைக்கு நல்லாருக்காது.

நான் ஈ





வாவ்!: சந்தேகமின்றி இயக்குனர் ராஜமௌலிதான். ஒரு சனிக்கிழமை மாலை, சும்மா டைம் பாஸுக்காக நண்பனுடன் இந்த படத்திற்கு சென்றேன். படம் ரிலீசான இரண்டாம் நாள் என்று நினைக்கிறேன். அரை மணி நேரத்திலேயே புரிந்துவிட்டது, ஒரு அட்டகாசமான திரைக்கதை அமைந்திருக்கும் படத்திற்கு வந்திருக்கிறோம் என்று. ரொம்ப நாள் கழித்து மனம் ஒரு குழந்தையாய் மாறி என்ஜாய் பண்ணி பார்த்த படம்.

ப்ச்: ஒன்றே ஒன்றுதான். 3டி'யில் வந்திருக்க வேண்டிய படமிது. இன்னும் கொண்டாடியிருக்கலாம்.

வழக்கு எண் 18/9

வாவ்!: நாலு சண்டை, நாலு பாட்டு என்று மற்றுமொரு சினிமாவாக இல்லாமல், சாட்டையின்றி வலியை உணரவைத்ததற்காக இயக்குனர் பாலாஜி சக்திவேல் மற்றும் தயாரிப்பாளர் லிங்குசாமி இருவரும் பாராட்டுக்குரியவர்கள். "அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட்டார்" என்று பிரதான பாத்திரத்தில் நடித்த நான்கு பேரையுமே சொல்லலாம். மறந்துவிட்டேன், அந்த போலீஸ்காரர் உட்பட. "ஆய் ஊய்" என்று கத்தாமல் என்னவொரு வில்லத்தனம்!

ப்ச்: தயாரிப்பு செலவு குறைகிறது என்றாலும் டிஜிட்டல் கேமிராவில் எடுத்ததால், படம் முழுக்க மனதில் ஒட்டவில்லை சில ஷாட்ஸ், டிவியில் வரும் சின்னத்திரை சினிமா போல இருந்தது. ஆனால், இந்த கதைக்காக அதை பொறுத்துக்கொள்ளலாம் என்றுதான் தோன்றுகிறது.

மௌன குரு

வாவ்!: இந்த படம் ரிலீசானது டிசம்பர் 2011 என்றாலும், நான் பார்த்தது இந்த வருடம்தான். இப்படியெல்லாம் நடக்குமா, இது சாத்தியமா, சரியான லாஜிக்கா என்றெல்லாம் யோசிக்க விடாமல், திரைக்கதையில் கட்டிப்போட்டிருந்தார் இயக்குனர் சாந்த குமார். இதுவரை நீங்கள் இந்த படத்தை பார்க்காவிடில், வாய்ப்பு கிடைத்தால் அவசியம் பாருங்கள். மிஸ் பண்ணக்கூடாத படம் இது!

ப்ச்: இரண்டாம் பாதியில் நன்றாக நடித்திருந்தாலும், முதல் பாதியில், அருள்நிதியின் முகத்தில் ஒரு எக்ஸ்ப்ரஷனும் காணோம். சொல்லிக்கொடுத்த டயலாக்கை சரியா சொல்றேன் பார் என்பது போல நடித்திருந்தார்.

தடையறத் தாக்க

வாவ்!: இயக்குனர் மகிழ் திருமேனி & அருண் விஜய். கண்டிப்பாக ஒரு ப்ரேக் குடுத்தாக வேண்டும் என்ற நிலையில் இயக்குனரும், ஹீரோவும். படத்தில் ஒரு காட்சி கூட போரடிக்கவில்லை. சொந்த படம் என்றாலும், 'ஏய்ய்ய்ய் நான் யார் தெரியுமா' என்றெல்லாம் எக்ஸ்ட்ரா பில்டப் கொடுக்கததாலேயே அருண் விஜய்யை பிடித்திருந்தது. இது போன்ற படங்களை தேர்வு செய்து நடித்தால், மனுஷன் ஒரு நல்ல இடத்தை பிடிப்பார்.

ப்ச்: அதிகப்படியான வன்முறை. உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறை என்று காண்பித்தால் கூட, கண்டிப்பாக வீட்டில் அமர்ந்து குடும்பத்தோடு பார்க்கமுடியுமா என்பது கேள்விக்குறிதான்.

துப்பாக்கி 

வாவ்!: இளைய தளபதியா இது? விஜய்  கூட அண்டர்ப்ளே பண்ணி நடிப்பாரா என்று ஆச்சரியப்படவைத்த படம். நண்பன் படத்திற்கு பிறகு விஜய் நடிப்பை மறுபடியும் ரசித்து பார்த்தேன். எல்லா புகழும் முருகதாஸுக்கே. உட்கார்ந்து பேசினால், என்னென்ன லாஜிக் ஓட்டைகள் என்று மணிக்கணக்கில் பேசலாம். ஆனால் தியேட்டரில் படம் பார்க்கும்போது யோசிக்கவிடாத திரைக்கதை அமைத்ததே படத்தின் உண்மையான வெற்றி. ஏழாம் அறிவு சறுக்கலுக்கு பின் முருகதாஸ் மீண்டும் BACK TO FORM!

ப்ச்: போக்கிரி படம் ரொம்ப பிடித்திருந்தது, பெல் பாட்டம் போலீஸ் யூனிபார்ம் வரும் வரை. அது போல இந்த படத்தில், ஒப்பனிங் சாங்கும், க்ளைமாக்ஸ் 'தன் கையே தனக்குதவி' டைப்பில் எலும்பு முறிவை சரி செய்யும் காட்சியும். மொத்த படத்திற்காக இவ்விரு விஷயங்களை தாங்கிக்கொண்டே தீரவேண்டும்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

வாவ்!: வாழ்வில் நடந்த ஒரு மிக சீரியசான விஷயம். சீரியஸ்னசை தூக்கி மூட்டை கட்டி தூர போட்டுவிட்டு, நகைச்சுவை கலந்து திரையில் ஒரு கலக்கு கலக்கிவிட்டனர். ஹீரோ விஜய்  சேதுபதியை விட, எனக்கு அந்த மூன்று நண்பர்களின் நடிப்புதான் பிடித்திருந்தது.

யாரால் மறக்க முடியும் "ப்ப்ப்பா பொண்ணா இது" காட்சியை :) அதே போல் "நாகராஜ் அண்ணே!". க்ளைமேக்ஸில் விஜய் சேதுபதிக்கு நினைவு வரும் காட்சியில், அந்த நட்பும், நெகிழ்ச்சியும் சிம்ப்ளி சூப்பர்ப்!

ப்ச்: சில காட்சிகளை கொஞ்சம் எடிட் பண்ணியிருக்கலாம். அதை தவிர குறையொன்றுமில்லை.

பீட்சா





வாவ்!: நிஜமாகவே வாவ்! சொல்ல வைத்த படம். சில ஹாலிவுட் த்ரில்லர்களை பார்க்கும்போது கொஞ்சம் வருத்தமாக இருக்கும், தமிழில் ஏன் இது போல படங்கள் வருவதில்லை என்று. அந்த வருத்தத்தை துடைத்தெறிந்த படம். சினிமாவில் உழைப்போடு, கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும் என்பார்கள். விஜய்  சேதுபதிக்கு இந்த வருடம்.....என்ன சொல்ல? வெளுத்து வாங்குகிறார்! இவர் பயந்து பயந்து, அந்த பயத்தை நமக்கும் கொண்டுவரச் செய்ததிலேயே மனிதர் வெற்றி பெற்றுவிட்டார்.

படத்திற்கு சந்தோஷ் நாராயணனின் பிஜிஎம் யானை பலம். விரைவில் ஹிந்தியிலும் 'பீட்சா' டெலிவரி  (ரீமேக்) பண்ணப்போகிறார்கள்.

ப்ச்: முதல் அரை மணி நேரம். கொஞ்சம் ஸ்லோ. அதற்குப்பின்தான் படம் பட்டையை கிளப்ப ஆரம்பித்தது.

**********************

இந்த லிஸ்ட்டில் இருக்கும் பல படங்கள் நிறைய  பேருக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.

அடுத்த மூன்று நாட்களுக்குள் வேறெதையும் எழுதி யாரையும் டார்ச்சர் பண்ண விருப்பமில்லை :)  2013ஆம் வருடம் சிறப்பாக அமைய அனைவருக்கும் வாழ்த்துகள்!

Wednesday, December 26, 2012

லாலா லால லா ல லா லாலலா


ப்பா அம்மாவுடன் நேற்று தி.நகர் போயிருந்தேன். இரண்டு மணி நேர பயண தூரத்தில் சென்னை இருந்தாலும், பொங்கல் பர்ச்சேஸிற்காக அப்பாவும் அம்மாவும் சென்னை வருவது இதுவே முதல் முறை. விடுமுறை தினம் என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்க 9:30க்கே தி.நகர் போய்விட்டோம். செவிக்கு உணவில்லாத காலை பொழுதில், சரவண பவன் இட்லியும் காபியும் வயிற்றுக்கு ஈயப்பட, ஜீரணத்திற்கும் சேர்த்து பில் போட்டிருந்தார்கள்.




10 மணிக்கு போத்தீஸில் களமிறங்கினோம். தி.நகரின் ராசியா என்று தெரியவில்லை. ஊரில் இருக்கும் கடையில் பத்து பதினைந்து நிமிடங்களில் புடவை எடுத்துவிடும் அம்மா, நான்கு புடவைகள் எடுக்க ஒரு மணி நேரத்துக்கும் மேலானது. "எவ்வளவு நேரம் எடுத்துக்கறா பாருப்பா" என்று பொறுமையிழந்து அப்பா என்னிடம் வந்து புலம்ப, "பரவால்லப்பா, வருஷத்துல ஒரு நாள்தானே" என்று சமாதானப்படுத்தினேன்.

அடுத்த ஒரு மணி நேரம் அப்பாவுக்கு, தம்பிக்கு, எனக்கு என ட்ரஸ் எடுத்துவிட்டு, போத்தீஸில் இருந்து வெளியேறுகையில் அம்மா சொன்னார், "இனிமே பொங்கல் பர்ச்சேஸுக்கு இங்கேயே வந்து எடுக்கலாம்". அப்பா திரும்பி என்னை பார்த்தார். நான் மட்டும் என்ன செய்ய? எனக்கும் இஸ்க் இஸ்க் என்றுதான் கேட்டது.

*******

ஞ்சுக்கு வேளச்சேரி வந்தடைந்தோம். அப்பா, அம்மா ரெண்டு பேருக்குமே வெளியுலக எக்ஸ்போஷர் ரொம்ப கம்மி. கூட்டுக்குள்ளேயே வாழ பழகிக்கொண்டவர்கள். அவர்களுக்கு புதியதாக இருக்கட்டும் என்றெண்ணி, Flamingo ரெஸ்டாரண்ட்டுக்கு அழைத்துப்போயிருந்தேன். Vegetarian Buffet. டீசண்ட்டான இடம். அமைதியான சூழல். அவர்களுக்கு ரொம்பவே பிடித்துப்போனது. இரண்டு பேரும் கொஞ்சம் excitedஆகவே இருந்தார்கள்.

எப்போதும் இதுபோல் தோன்றியதில்லை. வெளியே புதிய இடத்திற்கு தன் குழந்தைகளை கூட்டி வந்திருக்கும் தந்தையின் உணர்வில் இருந்தேன் நான். அவர்களோடு ஒரு சில விஷயங்களில், இன்றும் நிறைய கருத்து வேற்றுமைகள் இருக்கிறது. Argue பண்ணியிருக்கிறேன். கோபப்பட்டிருக்கிறேன். எனினும், affection குறையவில்லை.

*******

ப்படியெல்லாம் feel பண்ணியதன் விளைவு......தற்போது, மொபைல் ரிங்டோனாக, எஸ்.ஏ.ராஜ்குமாரின் "லாலா லால லா ல லா லாலலா "வை வைக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்

Monday, October 15, 2012

கற்றதும் பெற்றதும் - சுஜாதா

சிறு வயதில், ஆனந்த விகடனை புரட்டும்போது, இரண்டு மூன்று பக்கங்கள் எதையும் வாசிக்காமல் அப்படியே கடந்து சென்றுவிடுவேன். அப்போது தெரியாது, ஒரு சில வருடங்கள் கழித்து, அதே பக்கங்களை புத்தக வடிவில் வெறி பிடித்தது போல வாசித்து தீர்ப்பேன் என்று. அந்த இரண்டு மூன்று பக்கங்களின் தலைப்பு 'கற்றதும் பெற்றதும்'.



த்ரில்லர் கதைகள் மிகவும் பிடித்தமானவை என்பதால், வீட்டு அலமாரியில் கணேஷ் வசந்த்களே குடியிருக்கின்றனர். மத்யமர்களையோ, ஸ்ரீரங்கத்து தேவதைகளையோ தரிசிக்க இன்னும் நேரம் வரவில்லை. சமீபத்தில், அலுவலக நண்பர் ஒருவர்தான் 'கற்றதும் பெற்றதும்' புத்தகத்தை கொடுத்தார். வாரயிறுதியில் ஊருக்கு செல்லும்போது வாசிக்கலாம் என்று அப்படியே வைத்திருந்தேன். 

சனிக்கிழமை காலை. சென்னை கடற்கரை ரயில் நிலையம். ஸ்டேஷனிடம் கோபித்துக்கொண்டு ரயில் கிளம்ப ஆரம்பித்தது. புத்தகத்தை திறந்து, மகிழ்ச்சியோடு தலை குனிந்தேன். முதல் ஒரு சில பக்கங்கள் எனக்கு சற்று அலர்ஜியாகவே இருந்தது. நிறைய கெமிஸ்ட்ரி, பயாலஜி...உவ்வே! பதினொன்றாம் வகுப்பிலிருந்தே, எனக்கும் கெமிஸ்ட்ரிக்கும்  கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதே இல்லை. கிட்டத்தட்ட 30 பக்கங்களுக்குப் பிறகுதான் புத்தகம் சூடு பிடித்தது...வாசிக்கவும் பிடித்தது.

"ச்சே....என்ன மனுஷன்யா இவரு" என்று சிலாகித்து, கொஞ்சம் தலை நிமிர்ந்து ரயிலின் ஜன்னல் வழியே பார்த்தேன். தாம்பரம் ரயில் நிலையம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம், தன் எழுத்தால் வாத்தியார் என்னை கட்டி போட்டு இருந்தார். அறிவியல் தொடர்பான விஷயங்களை விட, அவரின் அனுபவங்கள்தான் ரசிக்க வைத்தன.




#பதின்ம வயதில் எந்த வித குறும்புகளிலும் ஈடுபடவில்லை என்கிறார், காதல் உட்பட. காரணம், ஸ்ட்ரிக்ட்டான பாட்டி. ஏதாவது சின்ன பொய் சொன்னால் கூட, பாட்டி எளிதில் கண்டுபிடித்து விடுவாளாம்.

#ஸ்ரீரங்கத்தில், இவர் இருந்த தெரு அணிக்கும், இன்னொரு தெரு அணிக்கும் க்ரிக்கட் மேட்ச் நடந்திருக்கிறது. எதிரணியினர், அம்பயர் எங்க சைடு ஆளுதான் என்று கூற, அதற்கு இவர் அணியும் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். பின்புதான் தெரிந்திருக்கிறது அது எவ்வளவு பெரிய தவறு என்று. எதிரணி பேட்ஸ்மன்  அவுட் ஆகும்போதெல்லாம் அம்பயர் கை கூசாமல் "நோ பால்" காண்பித்திருக்கிறார். 1940களிலேயே மேட்ச் பிக்ஸிங்! பிறகென்ன, தோல்விதான். ஆனால் அதையும் சுவைபட கூறியிருக்கிறார்.

#மெட்ராஸில் (அப்போ மெட்ராஸ்தாம்பா) ஹாஸ்டலில் தங்கியிருந்தபோது, ஒரு முறை தகவல் எதுவும் சொல்லாமல், அவர் அப்பா திடீரென வந்திருக்கிறார். ஹாஸ்டல் ரூம் பற்றி சொல்ல வேண்டுமா என்ன? தொன்று தொட்டு வரும் பழக்கமான, ஆடையில் சிக்கனத்தை வலியுறுத்தும் நடிகையின் படம் ஒன்று சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கிறது. அதை மறைக்கக் கூட நேரமில்லை. அப்பா பார்த்துவிட்டார். ஆனால், அவர் எதுவும் கேட்கவில்லை. பின்பு, பல வருடங்கள் கழித்து, தன் அப்பாவின் கடைசி நாட்களின்போது இதை கேட்டிருக்கிறார் வாத்தியார்.

"அப்பா, ஹாஸ்டலுக்கு நீங்க வந்திருந்தபோது சுவத்துல..."

"ஞாபகம் இருக்குடா...ஒரு பொம்மனாட்டி படம் ஒட்டி இருந்தது"

"ஏம்பா எதுவும் கேட்கல?"

"எப்படியும் நீ படிச்சு ஒழுங்கா வந்துடுவேன்னு தெரியும்டா". வாத்தியாரின் அப்பா தீர்க்கதரிசி!

#பணிக்காலத்தில், பல பிரச்னைகள் காரணமாக கிட்டத்தட்ட ஏழெட்டு முறை வீடு மாற்றியிருக்கிறார். அதுவும், பங்களூரில்தான் (வாத்தியாருக்கு எப்பவும் பங்களூர்தான், பெங்களூர் அல்ல) அதிகம். ம்ம்...என்ன செய்ய? அவங்க அப்பவே அப்படித்தான் போல!

#நிறைய கவிதைகளை பகிர்ந்திருக்கிறார். மனுஷ்ய புத்திரன், கனிமொழி (அவங்கதானே?) ஆகியோரின் பெயர்களை அடிக்கடி காண முடிந்தது. ஒரு சில அத்தியாயங்களில், "கவிதை புத்தகமெல்லாம் எனக்கு அனுப்பாதீங்க" என்று சற்று கோபம் கலந்து கெஞ்சி கேட்கிறார். அப்படியும் நம் பயபுள்ளைகள் அவரை விட்ட மாதிரி தெரியவில்லை.

#எழுத ஆரம்பித்து, சில வருடங்கள் கழித்து தட்டச்சுக்கு மாறி, பின்பு கணிணியில் கதைகள் எழுதியதை பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். கணிணியில் கதைகள், கட்டுரைகள் எழுதுவதின் பெரும் பயனாக அவர் சொல்லியிருப்பது - தன் கிறுக்கல் கையெழுத்தை பெரும் மன உளைச்சலுடன் வாசிக்கும் கஷ்டம் உதவி ஆசிரியர்களுக்கு இல்லாமல் போனது!

#இணையத்தில், தன்னை குறித்தான பாராட்டுகளையும், விமர்சனங்களையும் நன்கு கவனித்து வந்திருக்கிறார். இணையம் ஒரு சுதந்திரமான பொதுவெளி. இங்கு யாரும் எதுவும் சொல்லலாம் என்பதால், அவர்கள் எல்லோருக்கும் பதிலளிப்பது சரி வராது என்பது வாத்தியாரின் வாதம். இது தற்போதைய பதிவர்களுக்கும் பொருந்தும்.

#ரஜினி, வேண்டாம் என்று சொன்னவுடன், இயக்குனர் ஷங்கர் வேறு யார் 'முதல்வன்' என்று யோசித்திருக்கிறார். "இந்த கதைக்கு பெரிய நடிகர் அவசியமில்லை, நன்கு நடிக்கத் தெரிந்த நடிகர் இருந்தாலே போதும்" என்று வாத்தியார் சொல்ல, ஜென்டில்மேனை, முதல்வன் நாற்காலியில் உட்கார வைத்திருக்கிறார் ஷங்கர்.

பகிர்ந்து கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது. எதை எழுதுவது, எதை விடுவது என்றுதான் தெரியவில்லை. வாசித்து முடித்த பின், புத்தகத்தோடு ஒரு முடிவையும்  எடுத்து அலமாரியில் வைத்திருக்கிறேன். அது, 'கற்றதும் பெற்றதும்' மொத்தம் எத்தனை பாகங்கள் இருக்கிறதோ, அத்தனையையும் வாங்கிவிட வேண்டும். காத்திருக்கிறேன், 2013 சென்னை புத்தகக் கண்காட்சிக்காக.


Saturday, July 07, 2012

Exam - உங்கள் அறிவுத்திறனை சோதிக்க ஒரு படம்!

ஒரு படம், பார்ப்பவர்களை உருக வைக்க வேண்டும், நெஞ்சை நெகிழ வைக்க வேண்டும், கண்களை கலங்க வைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவரா நீங்கள்? அப்படியெனில் இது உங்களுக்கான படமல்ல. ஒன்று, இப்போதே இந்த விண்டோவை க்ளோஸ் பண்ணிவிடுங்கள் அல்லது கொஞ்சம் நேரம் ஒதுக்கி இந்த படத்தையும் பாருங்கள். ஒன்றரை மணி நேர சுவாரஸ்யத்துக்கு 100% கேரண்டி!

டமால் டுமீல் அதிரடி சண்டை காட்சியெல்லாம் கிடையாது. இங்கிட்டு ஒரு பில்டிங், அங்கிட்டு ஒரு பில்டிங் என்று தத்தி தாவும் ஸ்பைடர்மேனிஸமும் கிடையாது. இவையேதுமின்றி ஒரு த்ரில்லர் படத்தை எடுக்க முடியுமா, பார்ப்பவர்களை கவர முடியுமா என்ற கேள்விக்கு இந்த படத்தை பதிலாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஸ்டுவர்ட் ஹசல்டைன் (Stuart Hazeldine). 

பார்ப்பவர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு வரும் படம் என்பார்களே. அது இந்த படத்துக்கு அட்சர சுத்தமாக பொருந்தும். ஒரேயொரு லொகேஷன். நூற்றியொரு நிமிடங்கள். முழுக்க முழுக்க உரையாடல்கள்தான். இருந்தும் ஒரு இடத்தில் கூட சலிப்பே வரவில்லை. அடுத்து என்ன அடுத்து என்ன என்ற ஆர்வம்தான் அதிகமாகிக்கொண்டே போகிறது. வெகு நாளாயிற்று இப்படியொரு படத்தை பார்த்து!




ஒரு பயோ-டெக் கம்பெனியில்,  சிஇஓவின் பர்சனல் அசிஸ்டன்ட் பதவிக்காக ஒரு தேர்வு வைக்கப்படுகிறது. மொத்தம் எட்டு பேர் அந்த தேர்வை எழுத தகுதி பெற்றிருக்கின்றனர். ஒவ்வொருவரும் வெவ்வேறு சமூகப் பின்னணியை கொண்டவர்கள். அந்த எட்டு பேரில் ஒருவர்தான் சிஇஓவின் பர்சனல் அசிஸ்டன்ட்டாக தேர்வு செய்யப்படுவார்.

தேர்வறையை பற்றி சொல்லியாக வேண்டும். ஒரு ஜன்னல் கூட இல்லாத மூடிய அறை அது. அறை கதவின் பக்கத்திலேயே ஆயுதம் ஏந்திய காவலர் ஒருவர் இருக்கிறார். எட்டு போட்டியாளர்களும் அவரவர் இருக்கையில் அமர்ந்திருக்க, அந்த தேர்வின் ஒருங்கிணைப்பாளர் அறைக்குள் நுழைகிறார். 

அவர் சொல்லும் சில விஷயங்கள்:

இந்த தேர்வுக்கான நேரம் மொத்தம் 80 நிமிடங்கள்

இந்த தேர்வில் போட்டியாளர்கள் பதிலளிக்க வேண்டியது ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே!

மேலும் இந்த தேர்வுக்கு மூன்று நிபந்தனைகள்:

நிபந்தனை #1: போட்டியாளர்கள் யாரும் தேர்வு ஒருங்கிணைப்பாளரிடமோ, அறை கதவின் அருகில் இருக்கும் ஆயுதம் ஏந்திய காவலரிடமோ  பேசக்கூடாது.

நிபந்தனை #2: போட்டியாளர்கள் தங்கள் விடைத்தாளை சேதப்படுத்தக்கூடாது.

நிபந்தனை #3: அந்த அறையை விட்டு வெளியேறக்கூடாது.

இந்த மூன்று நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினாலும், போட்டியாளர்கள் தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள். இவற்றை அறிவித்துவிட்டு அந்த ஒருங்கிணைப்பாளர் தேர்வறையிலிருந்து வெளியேறிவிடுகிறார்.

இப்போது, போட்டியாளர்கள் ஒவ்வொருவரும், தங்கள் முன் வைத்திருக்கும் தாளை திறந்து பார்க்க......அவர்களுக்கு பேரதிர்ச்சி! அந்த தாளில் கேள்வியே இல்லை.  கேள்வியே  இல்லாமல் எப்படி விடையளிப்பது? எப்படி தேர்ச்சி பெறுவது? 

ஒரு சில  நிமிடங்களுக்குப் பின், அந்த அறைக்குள்தான்  கேள்வி எங்கேயோ ஒளிந்திருக்கிறது என்று முடிவு செய்து, தேட ஆரம்பிக்கிறார்கள். கேள்வியை கண்டுபிடித்தார்களா, எட்டு பேரில் யார் வெற்றி பெற்றது என்பதையெல்லாம், வெள்ளித்.....கணிணித்திரையில் கண்டு மகிழுங்கள்!

நான்கெழுத்து F*** வார்த்தையை தவிர்த்து, துளியும் விரசமின்றி நகருகிறது படம். தைரியமாக குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கலாம்.  படம் பார்த்து முடித்தவுடன், "ச்சே...நம்மால ஏன் அந்த கேள்வியை கண்டுபிடிக்க முடியல?" என்ற கேள்விதான் வெகுநேரம் எனக்குள் உறுத்திக்கொண்டிருந்தது.  கொஞ்சம் சுவாரஸ்யமான உறுத்தல்தான். படம் பார்த்தால், அது உங்களுக்கும் கிடைக்கும்.

பி.கு: திரைப்படம் குறித்து வெகு நாட்களாய் எழுதாததால் இந்த பதிவை முயற்சித்தேன். ஜாக்கிகள், கேபிள்கள் அளவுக்கெல்லாம் எனக்கு எழுத வராது. பொறுத்தருள்க :)

Wednesday, June 27, 2012

ஒரு நடுப்பகல் மரணம் - சுஜாதா


சில கதைகளின் பெயரை பார்த்தாலே சட்டென ஈர்த்துவிடும். ஆனாலும் இருமுறை யோசிப்பேன், தலைப்பில் இருக்கும் வசீகரம் உள்ளடக்கத்தில் இருக்குமா என. இந்த புத்தகம் வாங்குவதற்கு அப்படிப்பட்ட யோசனை எதுவும் தேவைப்படவில்லை. காரணம், மேலட்டையில் இருந்த மூன்று எழுத்துக்கள். சு. ஜா. தா.

பங்களூருக்கு (வாத்தியாருக்கு எப்பவும் பங்களூர்தான், பெங்களூர் அல்ல) தேனிலவு செல்கிறார்கள் புதுமண ஜோடி. ஒரு மதிய வேளையில், மனைவி வெளியே சென்றிருக்கும்போது, ஹோட்டல் அறையிலேயே வைத்து கணவன் கொலை செய்யப்படுகிறான். அறை கண்ணாடியில் ரத்தத்தால் MAYA என்று எழுதப்பட்டிருக்கிறது.

ஆம். கொலை செய்த நபர், 'முடிந்தால் என்னை பிடியுங்கள் பார்க்கலாம்' என்று கிட்டத்தட்ட நேரடியாகவே போலீசுக்கு சவால் விட, கதை சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. MAYA என்றால் என்ன, எதை குறிக்கிறது என்று பின்தொடரும் போலீஸ், ஒரு கட்டத்தில், கொலைகாரனை கைது செய்கிறார்கள்.

கடைசியில், எல்லோரையும் அழைத்து, யார் கொலை செய்தது, எப்படி கண்டுபிடித்தோம் என்பதையெல்லாம் போலீசார் விளக்குகிறார்கள். இங்கு ஒரு ட்விஸ்ட் வைக்கிறார் வாத்தியார். அது என்ன என்பதை இந்த கதையை வாசித்து தெரிந்துகொள்ளுங்கள்.



இதை விட சுருக்கமாக இந்த கதையை பற்றி சொல்ல எனக்கு தெரியவில்லை. வேறு எதை சொன்னாலும் சஸ்பென்ஸ் உடைந்துவிடும். அதனால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

கதை பெரும்பாலும் பெண்ணின் பார்வையிலேயே செல்கிறது. திருமணத்திற்கு பின் பெற்றோரை பிரிவது, முதலிரவு, தேனிலவு, கணவன் கொலையுண்ட பின் கிடைக்கும் அதிர்ச்சி, மாமியாருடன் ஏற்படும் உரசல் என்று பல விஷயங்கள்.

கணவனை இழந்த இளம் பெண்கள், உறவினர்களாக இருந்தாலும் வேறு ஆண்களோடு பேசினால், அதை எல்லோரும் சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை. கண், காது, மூக்கு மட்டுமின்றி, இன்ன பிற அங்கங்களும் வைத்து அழகு பார்த்து, ஆகச் சிறந்த கதையொன்றை கட்டுவதில் நம் சமூகம் இன்னும் சிறந்து விளங்கிகொண்டிருக்கிறது. இதை ஒரு புத்திமதி மாதிரியோ, கருத்து மாதிரியோ இடித்துரைக்காமல், போகிற போக்கில், ஒரு கதாபாத்திரம் வழியாக மிகச் சாதாரணமாக சொல்லிவிட்டு போகிறார் வாத்தியார்.

மற்ற கதைகளை ஒப்பிடுகையில், இந்த கதையின் க்ளைமேக்ஸ் அவ்வளவாக பெரியதொரு பாதிப்பை ஏற்படுத்தாதது ஒரு மைனஸ்தான். ஆனால் அதையும் தாண்டி இந்த கதையை ரசிக்க வைப்பது, அதன் ஃப்ளோ. அடுத்து என்ன ஆகும், அடுத்து என்ன ஆகும் என்று ஒரு படபடப்புடன் ஓடிக்கொண்டே இருக்கிறது கதை!

Strictly for Sujatha Fans!