Saturday, May 30, 2009
மிகச் சிறிய த்ரில்லர் கதை
நேத்து பதிவுல ஒரு கதையை எழுதுனப்புறம், எழுத்தாளர் சுஜாதா விகடன்ல வந்த "கற்றதும் பெற்றதும்" பகுதியில சொன்ன ஒரு கதை ஞாபகம் வந்துச்சு. நீங்களும் படிச்சிருப்பீங்கன்னு நெனக்குறேன்.
"உலகின் கடைசி மனிதன் இருட்டறையில் உட்கார்ந்திருந்தான். கதவு தட்டப்பட்டது"
இது ஒரு ஆங்கில எழுத்தாளர்(பேர் ஞாபகம் இல்ல) எழுதுனதுன்னு சுஜாதா சொல்லியிருந்தார் (அவர் ஆங்கிலத்துலதாங்க எழுதியிருப்பார், நம்ம வசதிக்காக சுஜாதா தமிழ்ல குடுத்தார்). இந்த ஒரு வரி கதையையே கொஞ்சம் மாத்தி எழுதினார் நம்ம "கணேஷ்-வஸந்த்"வோட பிரம்மா.
"உலகின் கடைசி மனிதன் இருட்டறையில் உட்கார்ந்திருந்தான். கதவு பூட்டப்பட்டது".
இத படிச்சப்போ என் ஞாபகத்துக்கு வந்த டயலாக். ஒரு படத்துல செந்தில் கவுண்டமணியப் பாத்து கேட்டது, நான் அவர பாத்து கேக்கணும்னு போல இருந்தது.
"அய்ய்ய்ய்ய்யோ அது எப்படிண்ணே உங்களுக்கு மட்டும் இப்படில்லாம் தோணுது?"
Friday, May 29, 2009
இன்னைக்கு ஒரு கதை!
ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு ஒரு கதை எழுதலாம்னு நெனக்குறேன். புடிக்குதோ இல்லையோ தயவுசெய்து படிச்சிடுங்க. கதையை மட்டும் தூயதமிழ், பேச்சுத்தமிழ் ரெண்டும் கலந்து எழுதிடுறேன், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க! இனி...
வீட்டு கதவைத் தட்டினேன்.
"யாரு?" உள்ளிருந்து குரல் கேட்டது.
"இஙக சோமசுந்தரங்கறவர பாக்கணும்"
"நான்தான் உள்ள வாங்க"
வீட்டு ஹாலில் அமர்ந்திருந்த பெரியவர் மூட்டு வலிக்கான தைலத்தை எடுத்து தேய்த்துக்கொண்டிருந்தார். அருகிலிருந்த நாற்காலியில் அமரச்சொன்னார்.
"சார் என் பேரு ராம் ஷர்மா. ஷர்மா ஹாஸ்பிடல் பத்தி கேள்விபட்டிருப்பீங்கன்னு நெனக்குறேன். அதனோட மேனேஜிங் டைரக்டர் நான்தான்."
"ஆங் தெரியுங்க, பக்கத்து வீட்டு விஸ்வநாதன் உங்க ஆஸ்பத்திரிலதான் அல்சருக்கு வைத்தியம் பாத்துக்கிட்டான். இப்ப கொஞ்சம் சவுகரியம்தான்...ஆமா நீங்க என்ன விஷயமா?..."
"உங்க பக்கத்து கிராமத்துல ஒரு ஹாஸ்பிடல் கட்டலாம்னு ப்ளான் பண்ணியிருக்கோம். அதுக்காக கொஞ்ச நாள் நான் இங்க தங்கணும். அந்த ஊர்ல தங்கறதுக்கு அந்தளவு வசதியில்ல. உங்க வீட்டு எதிர்ல இருக்கற பங்களா எனக்கு ரொம்ப புடிச்சுபோச்சு. அது உங்களோடதுன்னு சொன்னாங்க..நான் வாங்கிக்கலாம்னு நெனக்குறேன்...அதான் உங்கள பாத்து அத பத்தி பேசிட்டு போகலாம்னு வந்தேன். ஆமா நீங்க ஏன் அவ்வளவு பெரிய பங்களாவ விட்டுட்டு இந்த வீட்டுல இருக்கீங்க?"
"எம் பொண்ணு பெங்களூர்ல இருக்கா. பையன் அமெரிக்கால ஒரு கம்ப்யூட்டரு கம்பெனியில வேல பாக்குறான். இங்க நானும் என் சம்சாரமும் மட்டும்தான். ரெண்டு பேரும் எங்களோட வந்து இருங்கன்னு கூப்புடுறாங்க...ஆனா அந்த குளுர்லாம் நமக்கு ஒத்துக்காது. இங்க எனக்கும் இவளுக்கும் எதுக்கு பெரிய பங்களா? அதனாலதான் மூணு வருஷமா இங்க இருக்கறோம்."
கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு தொடர்ந்தார்.
"வெளியே சொல்லியிருப்பாங்க, எனக்கும் மறைக்கபுடிக்காது. ரெண்டு வருஷம் முன்னாடி ஒரு படுபாவி பய அந்த பங்களாவுல போய் தற்கொலை பண்ணிக்கிட்டான். அதுலயிருந்து யாருமே அத வாங்குறதுல விருப்பம் காட்டல. இப்ப நீங்க வேணுங்கறீங்க, யோசிச்சு சொல்லுங்க. ஏன்னா நாளைக்கு எந்த பிரச்னையும் வரக்கூடாது பாருங்க"
"சார் நானும் கேள்விபட்டேன். எனக்கு இதுலல்லாம் நம்பிக்கை இல்ல. உங்களுக்கு ஓகேன்னா நான் இப்பவே ஒரு தடவ பங்களா உள்ள போய் பாத்துட்டு முடிவு பண்ணிடலாம்னு நெனக்குறேன். நீங்க என்ன சொல்றீங்க?"
"சரிப்பா, எனக்கு நேத்துலயிருந்து மூட்டுவலியா இருக்கு. என்னால இப்போ எழுந்து வரமுடியாது. சாவி அந்த ஆணியில இருக்கு. அதனால கொஞ்சம் சிரமம் பாக்காம நீங்களே போய் பாத்துட்டு வந்துடுங்க"
"பரவால்லங்க, நான் பாத்துக்கறேன்"
சாவியை எடுத்துக்கொண்டு அந்த பங்களா முன் வந்து நின்றேன். ராமு அண்ணன் (என் கார் டிரைவர்) சிகரெட் பிடிக்க எங்கேயா ஒதுங்கிவிட்டார். ஆளைக்காணோம். கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன். கொஞ்சம் 'சந்திரமுகி' டைப்பில் லேசாக பயமுறுத்தத்தான் செய்தது. ஆனால் கட்டப்பட்டிருந்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
"ஹலோ" என்று மிதமான குரலில் கூறினேன். "ஹலோ ஹலோ லோ...." என்று எதிரொலித்தது. வாவ்! எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. மனது சிறு குழந்தையாகி எதிரொலியை ரசித்தது.
"ஐ லைக் திஸ்" என்று கொஞ்சம் சத்தமாக கூறினேன். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. காரணம், இந்த முறை நான் "ஐ லைக் திஸ்" என்று சொன்னதற்கு நான் கேட்டது எதிரொலி அல்ல..."வெல்கம்!!!"
Thursday, May 28, 2009
மே ஹூன் சூர்யா!
கஜினி வந்தார் முன்னே, சூர்யா வருகிறார் பின்னே - ஆந்திராவுல, ராயலசீமா பகுதியில இருந்த பரிதாலா ரவிங்கறவர் பத்தி ராம் கோபால் வர்மா படம் எடுக்கப்போறார். 5 மணி நேரமா வரப்போற இந்த படத்த பார்ட் 1, பார்ட் 2ன்னு வெளியிடப்போறாங்களாம். பார்ட் 1ல விவேக் ஓபராய் நடிக்கறார். பார்ட் 1 முடிவில நம்ம 'சிக்ஸ் பேக்' சூர்யா வருவாராம். அங்கே ஆரம்பிச்சு அப்படியே பார்ட் 2ல மெயின் ரோல்ல வரப்போறதா சொல்லியிருக்காங்க.
"ரங் தே பஸந்தி" படத்துலேயே சித்தார்த் கேரக்டர்ல முதல்ல சூர்யாதான் நடிக்கறதா இருந்தது. ஆனா கால்ஷீட் பிரச்னையினால நடிக்க முடியலன்னு ஒரு பேட்டியில சூர்யா சொல்லியிருந்தார். ஒருவேளை நாலு பேர் நடிக்கற படத்துல நம்மள ஒப்பு சப்பாவா போட்ருவாங்களோன்னு நெனச்சுட்டாரோ? என்னன்னு தெரியல. ஆனா சித்தார்த்துக்கு உண்மையாவே நல்ல வெயிட்டான(எவ்ளோ கிலோன்னுலாம் தயவுசெய்து கடிக்காதீங்க்) கேரக்டர்தான். அந்த படத்த பாத்தபோது சூர்யா மிஸ் பண்ணிட்டாரேன்னுதான் தோணுச்சு. சரி, இப்பவாவது ஒத்துக்கிட்டாரே, அதுவரைக்கும் சந்தோஷம்தான்!
ஹிந்தி படத்துல நடிக்கறது பெரிய கெளவரம்னோ, தமிழ்ல நடிக்கறது வேஸ்ட்னோ சொல்றதுக்காக இந்தப் பதிவ நான் எழுதல. ஹிந்தி படங்களுக்கு சர்வதேச அளவுல நல்ல மார்க்கெட். பெரிய அளவுல ரீச் ஆகும். ஜெர்மனி, இத்தாலி மாதிரி நாடுகள்ல கூட ஷாருக்கானோட ஓம் ஷாந்தி ஓம் ரிலீஸாகி நல்லா ஓடுக்சுன்னு படிச்சதா ஞாபகம். அதனாலதான் சூர்யா மாதிரி திறமையுள்ள ஒரு நடிகர் அங்கயும் போய் ஜெயிக்கணும்கறதுதான் என்னோட ஆசை. ரஜினி, கமலுக்கு அப்புறம் நம்மாளுங்க யாருமே இந்திப்படத்துல நடிக்கலன்னு நெனக்குறேன். ஆல் தி பெஸ்ட் சூர்யா!
கொசுறு: 2005ல தன் எதிரிகளால கொல்லப்ப்ட்ட பரிதாலா ரவி பேரு 54 கொலை கேஸ்ல பதிவாகியிருந்ததாம்.
Wednesday, May 27, 2009
ஹி...ஹி...
இன்னைக்கு கொஞ்சம் வேலையிருந்ததால எழுதமுடியல(இல்லன்னா ஒரே நாள்ல 100 பக்கம் எழுதறமாதிரிதான்). இன்னைக்கு என்ன டாபிக்குன்னு எதிர்பாத்து வந்து ஏமாந்தவங்களுக்கு(அப்படி யாராவது இருக்காங்களா என்ன?) ரியலி சாரி!
குமுதத்துல சம்பந்தமேயில்லாத இடத்துல நமீதா ஃபோட்டோ இருக்கும். அதுமாதிரிதான் மேலயிருக்கற ஸ்நேகா ஃபோட்டோ. என்ன பண்றது, நம்ம 'ப்ளாக்' கொஞ்சம் கமர்ஷியலாகவும் இருக்கணும்ல!
Tuesday, May 26, 2009
கில்லி!!!
தூய தமிழில் எழுதுவது சற்று சுவாரஸ்யம் இல்லாமல் பத்திரிக்கையில் வரும் செய்தியைப் போல இருப்பதாக உணர்கிறேன். அதனால் இனி பேச்சுத்தமிழிலேயே எழுதலாமென்று நினைக்கிறேன்.
ஞாயிறு (மே 24) சாயந்தரம் "சர்வம்" படம் போகலாம்னு நெனச்சிருந்தேன். ஆனா, அன்னைக்கு காலையிலேயே குமுதமும், விகடனும் படிச்சதுல படம் கொஞ்சம் புஸ்ஸுனு புரிஞ்சுபோச்சு..அதனால அப்புறம் பாத்துக்கலாம்னு விட்டுட்டேன். ஐபிஎல் பைனல் பாக்கலாம்னு ராத்திரி 8 மணிக்கு டாண்ணு செட் மேக்ஸ் சேனல் வெச்சேன். எனக்கு கில்கிறிஸ்ட் புடிக்கும்குறதுனால(பெங்களுர் ஜெயிச்சிருந்தா கும்ப்ளேவ புடிச்சிருக்கும்!) என் ஃபுல் சப்போர்ட்டும் டெக்கான் சார்ஜர்ஸ் டீமுக்குத்தான். செமி ஃபைனல்ல சென்னையை கவுத்ததுனாலயும் பெங்களூர் டீம் மேல எனக்கு கொஞ்சம் கடுப்பாத்தான் இருந்துது.
முதல் பாதி முடிஞ்சதும் அவ்ளோதான் ஐதராபாத்..கத காலின்னு பாத்தா, பசங்க பின்னியெடுத்துட்டாங்க..சும்மா சொல்லக்கூடாது 'கில்லி'யோட கேப்டன்ஸி உண்மையாவே அசத்தல்தான்..கடைசி ஓவர்ல உத்தப்பா ஊத்தப்பா ஆனதுனால டெக்கான் சார்ஜர்ஸ் ஐபிஎல் 2009 சாம்பியன்!!!
இப்பவே, அடுத்த வருஷம் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் டீமுக்கு ரிக்கி பாண்டிங் கேப்டன், ஸ்டீவ் வாஹ் கோச்சுன்னுலாம் பேச்சு ஓடிட்டிருக்கு...பாப்போம் என்ன பண்றாங்கன்னு. சென்னை சூப்பர் கிங்ஸ், நீங்க என்ன பண்ணப்போறீங்க? தயவுசெய்து ஃபீல்டிங்ல கொஞ்சம் கவனம் செலுத்துங்கப்பா! ஏதோ பக்கத்து தெரு டீம்கூட ஆடுறமாதிரி பவுலிங் போடுறீங்க. ப்ளீஸ் கொஞ்சம் டெவலப் ஆகுங்க..ஆனா இது மாதிரி சில பல குறைகள் இருந்தும் செமிஃபைனல் வரை வந்ததுக்கே உங்கள பாராட்டணும்!!!
போன வருஷம் கடைசியா வந்த டெக்கான் சார்ஜர்ஸ் இந்த வருஷம் சாம்பியன். அப்போ ஐபிஎல் 2010 சாம்பியன் கொல்கட்டா நைட் ரைடர்ஸ்???
Friday, May 22, 2009
நியூட்டனின் 3ஆம் விதி
சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தைப் பற்றிய அறிவிப்பு வந்தபோதே இப்படத்தைக் கட்டாயம் பார்க்கவேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். காரணம், படத்தின் வித்தியாசமான தலைப்பு. ஆனால் ஹீரோ எஸ்.ஜே.சூர்யா என்றவுடன் மனது சற்று பின்வாங்கியது. "அன்பே ஆருயிரே" பார்த்ததினால் வந்த விளைவு. ஆனால் இப்படத்தின் ஸ்டில்களைப் பார்த்தபோது, சரி கொஞ்சம் ரிஸ்க் எடுப்போம் என்று முடிவு செய்தேன்.
ஒரு தனியார் டிவி சேனலில் தொகுப்பாளினியாக வேலை செய்யும் எஸ்.ஜே.சூர்யாவின் காதலியான ஷாயாலியை சீரழித்துக் கொன்றுவிடுகிறார் சேனல் அதிபர் ராஜீவ் கிருஷ்ணா. சரியாக ஒரு வருடம் கழித்து தன் காதலி இறந்த அதே நாளில் அதே நேரத்தில் சேனல் அதிபரைக் கொல்ல முடிவு செய்கிறார் காதலன். எப்படி கொல்கிறார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் காட்சியமைப்பு மூலம் சொல்லி கைத்தட்டல் வாங்குகிறார் இயக்குனர் தாய் முத்துசெல்வன்.
எஸ்.ஜே.சூர்யா என்றாலே இரட்டை அர்த்த வசனம், ஆபாசம் போன்றவை இருந்தே ஆகவேண்டுமா என்ன? நல்லவேளை ஒன்றிரண்டு காட்சிகளோடு இவற்றை இப்படத்தில் நிறுத்திக்கொண்டார். மற்றபடி நடிப்பில் திறன்பட செய்துள்ளார் (வில்லனோடு போனில் பேசும் காட்சிகளில் அவருடைய குரல் பெரிய ப்ளஸ் பாயிண்ட்). புதுமுகம் ஷாயாலி கண்களை உருட்டியே நடிக்க முயற்சி செய்திருக்கிறார். "ஆஹா"வில் பார்த்த ராஜீவ் கிருஷ்ணாவா இது! (சில காட்சிகளில் சற்று ஓவராக இருந்தாலும்) நன்றாகவே மிரட்டுகிறார், பதறுகிறார், பயப்படுகிறார்.
முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் சற்றே சறுக்குகிறது. அதுவும் ப்ளாஷ்பேக் காட்சிகள் கொஞ்சம் இழுவை. தமிழில் த்ரில்லர் படங்கள் வருவது மிகவும் குறைவு. வரும் ஒரு சிலவற்றையும் ஓவராக குறைகூறுவதில் எனக்கு விருப்பமில்லை. ஒரு சில காட்சிகளில் லாஜிக் இடித்தாலும், வேகமாக போகும் திரைக்கதை அதை மறக்கடிக்கச்செய்கிறது. அனாவசிய ஹீரோயிஸம் இல்லாத இது போன்ற படத்தில் நடித்ததற்காகவே எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஒரு கைகுலுக்கல்!
சுருக்கமாக சொன்னால் த்ரில்லர் விரும்பிகள் (ஒருமுறை மட்டும்) பார்க்கவேண்டிய படமிது!
Thursday, May 21, 2009
ஆரம்பிச்சிட்டாருய்யா!
நடந்து முடிந்த 2009 பாராளுமன்ற தேர்தலில், ராம்விலாஸ் பஸ்வான், மணிசங்கர் அய்யர் உள்ளிட்ட விஐபி வேட்பாளர்கள் தோல்வி கண்டுள்ளனர். நடிகர் சிரஞ்சீவியும் தான் போட்டியிட்ட இரு தொகுதிகளில் ஒன்றில் தோல்வியுற்றிருக்கிறார். தோல்விக்கான காரணம் குறித்து இவர்கள் யார் மீதும் பழிபோடவில்லை. ஆனால் மருத்துவர் ராமதாஸ் தேர்தல் கமிஷன் மீது பழிபோட்டு தன் எரிச்சலை வெளிப்படுத்தியிருக்கிறார்.
"இந்த தேர்தலில் திமுக பணம் கொடுத்து மக்களின் ஓட்டுக்களை வாங்கியுள்ளது. இது நன்றாக தெரிந்தும் தேர்தல் கமிஷன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்களில் பார்வையிட வரும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா இந்தமுறை வரவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்காத இவர் பேசாமல் மாடு மேய்க்கப் போகலாம்."
"அதிமுக அணியில் இருந்துகொண்டே மக்கள் பிரச்னைக்காகப் போராடுவோம்"
குறும்பனின் சில கேள்விகள்:
1. இதற்கு முன்பு நீங்கள் திமுக கூட்டணியில் இருந்தபோது நடந்த தேர்தல்களிலெல்லாம் அவர்கள் பணம் கொடுத்ததேயில்லையா?
2. உஙகளின் தற்போதைய கூட்டணியான அதிமுகவினர், மக்களுக்கு இந்த தேர்தலில் பணம் கொடுக்கவில்லையா?
3. நரேஷ் குப்தா என்ன செய்திருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்? உஙகள் கட்சியினர் போட்டியிட்ட தொகுதிகளுக்கெல்லாம் சென்று பார்வையிட்டிருக்கவேண்டுமென்றா? அவர் என்ன தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியா, இல்லை பாமகவின் தேர்தல் அதிகாரியா?
4. ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலேயே, கொஞ்சமும் நாகரிகமின்றி "அவர் மாடு மேய்க்கப் போகலாம்" என்கிறீர்களே, இதுதான் ஒரு கட்சித் தலைவரின் பண்பாடா?
5. 2011 சட்டசபை தேர்தலுக்கும் இதே கூட்டணியில் இருப்போம் என்று உங்களால் உறுதியாக சொல்லமுடியுமா?
அரசியல் கட்சிகள் அணி மாறுவது சகஜம்தான். எந்த கட்சியும் இதற்கு விதிவிலக்கில்லை. திமுகவும் பாஜகவுடன் கூட்டணி அரசில் இருந்துவிட்டு பின்பு காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தது. ஆனால் அதற்கு பின்பு அவர்கள் பாஜகவை கீழ்த்தரமாக விமர்சிக்கவில்லை. நீங்களோ கடைசி நிமிடம் வரை பதவி சுகம் அனுபவித்துவிட்டு பின்பு அவர்களையே மண்ணை கவ்வவைப்போம் என்றீர்கள். இலங்கைத் தமிழர்களுக்காக கூட்டணியை விட்டு வெளியே வந்தோம் என்றீர்களே, அன்றுதான் உங்களுக்கு இலங்கை பிரச்னை என்னவென்று புரிந்ததா? "பொலிட்டிகல் பிராஸ்டிட்யூட்" என்ற வார்த்தைக்கு சரியாக பொருந்தும் ஒரே அரசியல்வியாதி நீங்கள்தான்.
சில நாட்கள் வாயைத் திறக்காமல் இருப்பதுதான் இப்போதைக்கு மக்களுக்கும் உங்கள் கட்சிக்கும் நீங்கள் செய்யும் மிகப்பெரிய தொண்டு! அதுவரை, அம்மாவிடம் பேசி எப்படி அன்புமணியை 2010ல் ராஜ்ய சபா உறுப்பினராகத் தொடரவைப்பதென்று யோசித்துக்கொண்டிருங்கள்...
Saturday, May 16, 2009
தேர்தலுக்கு பின்பு...
இந்திய பாராளுமன்றத்திற்கான 2009 தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படுகின்றன. எந்த கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடைக்கப்போவதில்லை என்று கருத்துக்கணிப்புகள் (இத யார்தான் கண்டுபுடிச்சாங்களோ) கூறுகின்றன.
புதிய அரசு அமைப்பதற்கு இதுவரை டாம் & ஜெர்ரியாக இருந்த கட்சிகளெல்லாம் ஒன்று கூடி கூட்டணி கட்சிகளின் கூட்டம் என்று வெளியில் சொல்லிக்கொண்டு உள்ளே பதவி பேரம் நடத்திக்கொண்டிருப்பர். இப்பொழுது உள்ள நிலைமையைப் பார்க்கும்பொழுது மீண்டும் காங்கிரஸ்தான் ஆட்சிக்கு வரும் என்று தோன்றுகிறது.
திமுகவை பொறுத்தவரை வழக்கம்போல் டி.ஆர்.பாலுவையும், தயாநிதி மாறனையும் மத்திய அமைச்சர்களாக்க குட்டி கரணம்...இல்லை..பெரிய கரணம் போட்டாவது ஜெயித்துவிடுவர். லிஸ்ட்டில் இந்த முறை அழகிரியும் சேரும் வாய்ப்பு இருப்பதால் கலைஞருக்கு கடும் தலைவலி காத்துக்கொண்டிருக்கிறது. மற்றவர்களுக்குத்தான் இதயத்தில் இடம், மகனாயிற்றே மத்திய அமைச்சரவையிலேயே இடம் வாங்கி கொடுப்பார் அன்புள்ள அப்பா!
ஒரு முன்னாள் முதல்வர் (பன்னீர் செல்வம்) தன் கட்சியின் தலைமையின் காலில் சாஷ்டாங்கமாக விழுவதெல்லாம் இந்தியாவிலேயே அதிமுகவில் மட்டும்தான் நடக்கும். உண்மையில் சொல்லப்போனால் ஜெ.வுக்கு இருக்கும் துணிச்சல் இங்கு வேறு எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது. ஆனால் அவர் அதை சரியான முறையில் பயன்படுத்தாமல், மக்களுக்காக களத்தில் இறங்கி போராடாமல், தன் கட்சியினரை காலில் விழும் காமெடியன்களாக வைத்திருப்பதிலேயே காலத்தை தள்ளுகிறார். மத்திய அரசுக்கு ஆதரவு கொடுக்க வேண்டி வந்தால் இவர் போடப்போகும் முதல் நிபந்தனை "தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க வேண்டும்". அட போங்க மேடம் நீங்களும் உங்க கோரிக்கையும்...கொடநாடுவில் ஓய்வெடுக்க தயாராகிவிட்டிருப்பீர்களே!
அவ்வளவுதான்..ரத்தத்தின் ரத்தங்களுக்கு இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு அம்மாவின் தரிசனம் கிடைக்காது.....
Thursday, May 14, 2009
முதல் பதிவு
வணக்கம் பதிவுலகமே,
இன்னைலருந்து எவ்வ்வ்வளோ முடியுதோ அவ்வ்வ்வளோ மொக்கைகள போடலாம்னு இருக்கேன்.
நான் என்ன பண்றது, நான் எழுதறதலாம் படிக்கணும்ங்கறது உங்க தலையெழுத்து, மாட்டிகிட்டீங்க..புடிச்சா படிங்க, புடிக்காட்டாலும் படிங்க...ம்ம்ம்...விதிய யாரால மாத்த முடியும்!
ஹே யாருப்பா அது! அதுக்குள்ள இந்த விண்டோவ க்ளோஸ் பண்றது....
Subscribe to:
Posts (Atom)