இந்த பெயருக்குத்தான் எத்தனை வசீகரம். 'சின்ன சின்ன ஆசை'யை எல்லோரும் ரசிக்க ஆரம்பித்திருந்த நேரம். நானோ தடதடக்கும் இசையில் அமைந்திருந்த 'ருக்குமணி ருக்குமணி'க்காகவும், ஆரம்பிக்கும்போதே மனதை மயக்கிய 'காதல் ரோஜாவே'வுக்காகவும், மனதில் ரஹ்மானுக்காக ஒரு நிலையான சிம்மாசனத்தை போட்டு வைத்தேன். ஆரம்பத்தில் சில பத்திரிக்கைகள் ரகுமான் என்றே எழுத, முதல் ரெண்டெழுத்தை நினைத்து கிடைத்த அற்ப சந்தோஷமும் சிம்மாசனத்திற்கான அதிமுக்கிய காரணம் :)

ரஹ்மானை ரசிப்பதால் ராஜாவை வெறுப்பதில்லை நான். தமிழ் சினிமாவில் இசை என்று ஆரம்பித்தால், கே.வி.மஹாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, இளையாராஜா, ரஹ்மான் என்றுதான் சொல்வேன். இவர்கள் ஒவ்வொருவரும் இசை(யுலகை) ஆண்டவர்கள். ராஜாவும் சரி, ரஹ்மானும் சரி தான் வருவதற்கு முன்பிருந்த இசையை, தமிழர்களின் இசை ரசனையை வேறு தளத்திற்கு கொண்டு சென்றனர். ஹாரிஸ், யுவன், விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ், மணிசர்மா ஆகியோரின் இசையையும் ரசிக்கிறேன். ஆனால் ரஹ்மான் போட்டு கொடுத்த பாதையில்தான் இன்றிருக்கும் பல ஹிட் இசையமைப்பாளர்கள் பயணிக்கின்றனர் என்பது மறு(றை)க்க முடியாத உண்மை.
ரஹ்மானின் இசையை 'ரோஜா' முதல் இன்றைய 'இராவணன்' வரை கவனித்து ரசித்து வந்திருக்கிறேன். உண்மையாக சொல்கிறேன். ஸ்லம்டாக் மில்லியனர் கேட்டபோது, 'அடப்பாவிங்களா இதுக்கேவா ஆஸ்கர்?' என்றுதான் தோன்றியது. மனதை ஈர்க்கும் இசையோ, மயக்கும் இசையோ ஸ்லம்டாக் மில்லியனரில் இல்லை என்பது என் எண்ணம். 'ஜெய்ஹோ'வை விட ரஹ்மான் இசைத்த சிறந்த பாடல்கள் ஏராளம்.
இது ரஹ்மானின் வாழ்க்கை பற்றிய பதிவல்ல. நான் மிகவும் ரசித்த ரஹ்மானின் பல பாடல்களை பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு. எனக்குள் இருக்கும் சோம்பேறி அரக்கனை சம்ஹாரம் செய்து, இதை ஒரு தொடராக எழுத விருப்பம். ஆனால் செயல்படுத்துவதில் எந்தளவு முனைப்பாக இருப்பேன் என்பது எனக்கே தெரியவில்லை. பார்க்கலாம்.....
தாஜ்மஹால்.....கண்ணை மூடி இப்படத்தைப் பற்றி நினைத்து பார்த்தால் சட்டென்று மனதில் தோன்றுவது, பாரதிராஜா, மனோஜ், ரியாசென் மற்றும் 'சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹாலு' பாடல். ஹீரோ பில்டப் பாடலான 'திருப்பாச்சி அருவாளை தீட்டிகிட்டு வாடா வாடா' பாடலும், 'சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹாலு' பாடலும் பலமுறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு எல்லோரையும் கவர்ந்தது.
ஆனால் கேட்ட முதல் முறையிலேயே நான் சொக்கிப் போன பாடல் 'குளிருது குளிருது'. அருவியில் வழிந்தோடும் நீரைப்போல் காதலையும், காமத்தையும் வரிகளில் வழிந்தோடவிட்டிருப்பார் கவிஞர் வைரமுத்து. வார்த்தைகளை ஆதிக்கம் செய்யாத இசை. 'பூகம்ப வேளையிலும்' என்று ஹைபிட்சில் எகிறும்போது உன்னி பின்னியிருப்பார்.
படம்: தாஜ்மஹால்
பிண்ணணி பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், ஸ்வர்ணலதா
பல்லவி:
குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி
கடலிலே தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால் காதலின் உறவுகள் எரிவதில்லை
குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி
சரணம் 1:
இதயத்தில் வலி ஒன்று வருது
உன் இமைகளின் முடி கொண்டு தடவு
நெஞ்சுக்குள்ளும் எரியுது நெருப்பு
இதை நீர் கொண்டு அணைப்பது உன் பொறுப்பு
இது தண்ணீர் ஊற்றியா தீரும்
நான் பன்னீர் ஊற்றினால் மாறும்
தேகங்கள் பரிமாற நம் உள்ளங்கள் இடமாறும்
பேரின்ப பூஜைகளே உன் பெண்மைக்கு பரிஹாரம்
மழை இல்லாமலும் தென்றல் சொல்லாமலும்
நம் நெஞ்சுக்குள் இப்போது லட்சம் பூ மலரும்
குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி
சரணம் 2:
நெஞ்சுக்குழி விட்டு விட்டு துடிக்கும்
அடி நெருப்புக்குள் ஏன் இந்த நடுக்கம்
முகத்துக்கும் முகத்துக்கும் சண்டையா
அட முத்தமிட வேறு இடம் இல்லையா
மழைத்துளி மழைத்துளி தொல்லையா
அட அடைமழை காக்க எண்ணம் இல்லையா
சுற்றி எல்லாம் எரிகின்ற போதும்
நாம் இன்பம் கொள்வது தீது
அடி பூகம்ப வேளையிலும்
இரு வான்கோழி கலவிக்கொள்ளும்
தேகத்தை அணைத்து விடு
சுடும் தீக்கூட அணைந்துவிடும்
அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும்
சுற்றி நின்றாடும் தீவண்ணம் அணைவது திண்ணம்
குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி
கடல் அலை தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால் காதலின் உறவுகள் எரிவதில்லை