Thursday, March 08, 2012

59வது தேசிய திரைப்பட விருதுகள் - ஏன் ரஹ்மானுக்கு கிடைக்கவில்லை?

நேற்று மதியம் சிஎன்என் சேனலில் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பை நேரடியாக  ஒளிபரப்பினார்கள் மிகுந்த ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தேன். மற்ற எந்த  கேட்டகரியிலும் எனக்கு பெரிதாக ஆர்வம் இல்லை. ஆனால் சிறந்த இசையமைப்பாளர் விருது ரஹ்மானுக்கும், சிறந்த பின்னணி பாடகர் விருது மோஹித் செளகானுக்கும் கண்டிப்பாக கிடைக்கும் என்று 'ராக்ஸ்டார்' இசை கேட்டதிலிருந்தே நம்பிக்கொண்டிருந்தேன். நிற்க.  நான்கைந்து  பத்திகள் கழித்து  மீண்டும்  புலம்புகிறேன்.


கன்னாபின்னாவென்று வசூலும், ஆஹா ஓஹோவென விமர்சனங்களும் வந்துவிட்டதால் வித்யா பாலனுக்கு விருது கிடைத்ததில் பெரிய ஆச்சரியம் இல்லை. 'கான்' நடிகர்கள் இல்லாமலும் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை தரமுடியும் என்று நிரூபித்ததே 'டர்ட்டி பிக்சர்' டீமுக்கு பெரிய வெற்றிதான். இந்த விருது இன்னும் அவர்களை மேலும் உற்சாகபடுத்தி இருக்கக்கூடும்.

விமர்சகர்கள் கல் எறிந்தாலும், அற்புதமான  மார்க்கெட்டிங்கினாலேயே துட்டு பார்த்துவிட்ட ஷாரூக்கின் 'ரா.ஒன்', சிறந்த ஸ்பெஷல் பெக்ட்ஸ் விருதை அள்ளியிருக்கிறது. 

சிறந்த படத்தொகுப்பிற்காக 'ஆரண்ய காண்டம்' படத்திற்கும், தமிழில் சிறந்த படமாக 'வாகை சூட வா'விற்கும் விருது கிடைத்துள்ளது. இவையிரண்டும் சரியான தேர்வுதான். வித்தியாசமான கதை, மசாலா ஐட்டங்கள் ஏதுமின்றி குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படம் என்றாலும், சிறந்த ஜனரஞ்சக படமாக 'அழகர்சாமியின் குதிரை' தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. 

ஜனரஞ்சகமான படம் என்றால் அனைவரையும் கவர்ந்திருக்க வேண்டும். வணிக ரீதியாக வெற்றி கிடைக்காததே இந்த படம் அனைவரையும் கவரவில்லை என்பதற்குச் சான்று. அதற்காக 'மங்காத்தா' படத்திற்குத்தான் இந்த விருது கிடைத்திருக்க வேண்டும் என்று சொல்லுமளவுக்கு நான் கொடுங்கோலன் அல்ல. ஒரு வரியில் சொல்லவேண்டும் என்றால்,  'அழகர்சாமியின் குதிரை' - விமர்சகர்களால் மட்டுமே கொண்டாடப்பட்ட படம். 

'லகான்' படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டபோதும் எனக்கு இதே எண்ணம்தான் தோன்றியது. படு புத்திசாலித்தனமான திரைக்கதை, அசத்தலான இயக்கம், இசை ஆகியவை இருந்தாலும், ஆஸ்கர் வாங்கும் அளவுக்கு இந்த படம் வொர்த் இல்லை என்பது என் கருத்து. 

ராக்ஸ்டாருக்கு வருவோம். படத்தின் இரண்டாம் பாதி சரியான சொதப்பல் என்றாலும் சிறந்த நடிப்பிற்கான விருது ரன்பீர் கபூருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஃபில்ம்ஃபேர், அப்ஸரா, ஸ்டார் ஸ்க்ரீன் அவார்ட்ஸ், ஸீ சினி அவார்ட்ஸ் என பல விருதுகளை அள்ளினாலும், தேசிய விருது கிடைக்கவில்லை. போகட்டும், இது கூட பரவாயில்லை. ஆனால் பாடல்களை கேட்ட பின்பும், பார்த்த பின்பும், இசைக்காக ரஹ்மானுக்கும், பாடியதற்காக மோஹித் செளகானுக்கும் கண்டிப்பாக விருது கிடைக்கும் என்று திடமாக நம்பினேன். பில்ம்பேரில் ஆரம்பித்து ஒவ்வொரு மேடையாக ஏறி, இருவரும் விருதுகளை வாங்கி குவித்துகொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இவ்விருவருக்குமே தேசிய விருது கிடைக்காதது  ஒரு மிகப்பெரிய disappointment. பொதுவாக ரஹ்மானின் பாடல்களில், ஒரு படத்தில் ஒன்றிரண்டு பாடல்களாவது 'சுமார்' என்ற பீலிங்கைத்தான் கொடுக்கும். இசை சம்பந்தப்பட்ட படம் என்பதாலோ என்னவோ, புல் ஃபார்மில் பட்டையை கிளப்பியிருந்தார் ரஹ்மான். 'ஜோ பி மேய்ன்' தொடங்கி 'தும் ஹோ' வரை ஒவ்வொரு பாடலும் அட்டகாசம். 




இந்த பாடலை பாருங்கள். ரஹ்மானின் இசையும், மோஹித் செளகானின் குரலும், ரன்பீர் கபூரின் நடிப்பும், நாடி நரம்பையெல்லாம் முறுக்கேற வைக்கும்! என்னை பொறுத்தவரை ஆஸ்கர் வாங்கிய 'ஜெய் ஹோ'வை விட 'சட்டா ஹக்' நூறு மடங்கு மேல். இந்த பாடலுக்கு விருது கிடைக்காமல் போனது ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. தேர்வு குழுவினர் இந்த பாடலை கேட்டதே/பார்த்ததே இல்லையோ? ப்ச்... என்னமோ போடா மாதவா!

4 comments:

  1. கோல்டன் குலோப்,ஆஸ்கார், கிராமி போன்ற விருதுகள் வாங்கிய பின்னர், இந்த பிசாத்து விருது வரலைன்னா என்ன, லூஸ்ல விடுங்க சார்.

    ReplyDelete
  2. நன்றி ஜெயதேவ் தாஸ், ஸ்லம்டாகைவிட ராக்ஸ்டார், விருது வாங்க தகுதியான ஆல்பம். அதனால்தான் ரொம்பவும் எதிர்பார்த்தேன்.

    ReplyDelete
  3. I think Rahman's Rockstar song was not even nominated till the end. Then no need to expect & get disappointed.

    ReplyDelete
  4. நன்றி மோகன், நாமினேஷன் பத்தி நெட்ல தேடிப்பார்த்தேன்..நோ லக் :(

    ReplyDelete