Tuesday, May 17, 2011

சுதா ரகுநாதன்

பதிவெழுத ஆரம்பித்து கிட்டதட்ட இரண்டு வருடங்கள் ஆகிறது. வலைப்பூ மீதான போதை தற்போது குறைந்திருந்தாலும் அவ்வப்போது எழுத வேண்டும் என்ற ஆசை மட்டும் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. ஆரம்பத்தில் எழுதியதை இப்போது வாசிக்கையில் எரிச்சல்தான் மிஞ்சுகிறது என் மீது எனக்கு. தட்டுத்தடுமாறி ஏதேதோ எழுதிக்கொண்டிருக்கிறேன். இதுவரை எழுதியதில் மனதிற்கு மகிழ்ச்சியோ, திருப்தியோ தருமளவுக்கு எதுவும் இல்லை. வார்த்தை ஜாலங்கள் எல்லாம் கைகூடாததால் அத்தருணத்தில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே எழுதுகிறேன்.



ம்ம்ம்...யோசித்து பார்க்கையில், மற்றவர்கள் மனம் நோகும்படியோ, அநாகரிகமாகவோ இதுவரை எதையும் எழுதியதில்லை. இவ்விரண்டு வருடங்களில் இதுதான் என்னால் முடிந்த அதிகபட்ச சாதனை(!)


**********


வேலைப்பளு. கடந்த சில மாதங்களாக அலுவலகமே வாழ்க்கையாக மாறியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் (கவனிக்க: குறைந்தபட்சம்) 12 முதல் 14 மணி நேரங்கள்.


இதனால் இழப்பது நிறைய, குறிப்பாக நட்புகள். நான் குருவாக மதிக்கும் என் நண்பரின் இல்லத்திருமணத்திற்குக்கூட செல்ல முடியாத சூழ்நிலை. அவன் ஓவரா படம் காட்றான், திமிரு புடிச்சவன், எனக்கு கால் பண்றதே இல்ல என்று சில முத்துகள் பலரின் வாயிலிருந்து உதிர்வதை அறிய முடிகிறது. ஒரே ஒரு நண்பர் மட்டும் உன் சிச்சுவேஷன் எனக்கு புரியுதுடா என்றார். மகிழ்ச்சியாக இருந்தது இவர் ஒருவராவது நம்மை புரிந்துகொண்டாரே என்று. பின்பு சொன்னார், எனக்கும் உன் நிலைமைதான்டா, டெய்லி 12 ஹவர்ஸ். ஹுக்கும்...அதானே பார்த்தேன்!


உண்மையான நட்புகளுக்கு ஒவ்வொன்றுக்கும் விளக்கம் தரவேண்டியதில்லை. ஒவ்வொன்றுக்கும் விளக்கம் எதிர்பார்க்கும் மனிதர்கள் நட்புகளாய் இருக்க வாய்ப்பில்லை. எல்லா மனிதர்களும் எனக்கு வேண்டாம். எனக்குப் பிடித்த, என்னைப் பிடித்த ஒரு சில நட்புகள் போதும்.


**********


சமீபத்தில் ஒரு ஞாயிறன்று நண்பனொருவனின் கிரஹப்பிரவேசத்திற்காக நானும் என் இரு நண்பர்களும் சென்றிருந்தோம். எல்லோருடனான அரட்டையின்போதுதான், சில நாட்களாய் தொலைத்திருந்த நகைச்சுவையுணர்வை மீட்டெடுத்தது போன்று உணர்ந்தேன்.


கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்குப் பின் சிலரை சந்தித்தேன். எப்போதும் தாமதமாக வந்தவன், இப்போதும் தாமதமாகத்தான் வருகிறான். வாய்ச்சவடாலில் (மட்டும்) வீரனாக இருந்தவன், தன் குணம் மாறாத நீலாம்பரியைப் போல் இன்னும் அப்படியேதானிருக்கிறான். அன்று சிம்ரனை காதலித்தவன் இன்று அனுஷ்காவை பூஜிக்கிறான். எல்லோரையும் பிடித்து கலாய்த்துக்கொண்டிருந்ததில் அந்த நாள் இனிய நாளாக அமைந்தது.


இது போன்றதொரு சந்தர்ப்பம் அடிக்கடி (சனி, ஞாயிறுகளில்) கிடைக்கவேண்டும்.


**********


மே மாத சென்னை வெயில் பற்றி சொல்லவேண்டியதில்லை. சூரிய பகவான் தீயாய் வேலை செய்துகொண்டிருக்கிறார். இரு வாரங்களுக்கு முன் வழக்கமாக காலை சிற்றுண்டிக்குச் செல்லும் உணவகத்திற்குச் சென்றிருந்தேன். அன்று திரு.சூனா பனாவின் உக்கிரம் காலையிலேயே அதிகமாயிருந்தது. ஏதேனும் குளிர்பானம் அருந்தலாமென்றெண்ணி அங்கிருந்த ஒரு ஸ்ட்ராபெர்ரி ஃபேளேவரை வாங்கி குடித்தேன்.


அந்த பாட்டிலில் MRP 15 என்று போட்டிருக்க, காசு வாங்கியவரோ 17 என்று பில் போட்டார்.


"இதுல 15தான் போட்டிருக்கு, ஏன் பில்ல 17 போட்டிருக்கீங்க?"


"17தாங்க"


"இங்க பாருங்க, 15தான் போட்டிருக்கு". பாட்டிலைக் காட்டினேன்.


"இதெல்லாம் நாங்க ஃபிக்ஸ் பண்றதுதான் சார், இது 17 ரூபா"


அதற்கு மேல் அவரிடத்தில் விவாதம் செய்வதில் அர்த்தமில்லை எனத் தோன்றியது. இதில் கொடுமை என்னவென்றால், அங்கிருந்த ஒரு சிலரும், 2 ரூபாய்க்கு ஏன் அநாவசியமாக பேசுகிறான் என்பது போல் என்னை முறைத்துப் பார்த்தனர். நல்லாயிருங்கப்பு!


இந்த பிரச்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் இருக்கிறது. எந்த பொருள் வாங்கினாலும் வெளியே விற்கும் விலையை விட அதிகமாகத்தான் இருக்கிறது. கேட்டால் மிக அலட்சியமான பதில்தான் கிடைக்கும்.


நானொன்றும் அ ந் நி ய ன் அல்ல, இம்மாதிரி ஆட்களுக்கு, கபீம்குபாம் என்று எழுதிவிட்டு தண்டனை தர. என்னால் செய்ய முடிந்தது, எங்கெல்லாம் இம்மாதிரி அதிக விலை வைத்து விற்கிறார்களோ, அங்கெல்லாம் எந்த பொருளையும் வாங்குவதில்லை, முற்றிலும் தவிர்க்கிறேன். நம் நீதிமன்றங்களின் சுறுசுறுப்பை நினைத்தாலே, நுகர்வோர் நீதிமன்றத்திற்குச் செல்லவும் தயக்கமாயிருக்கிறது. இவர்களை வேறென்னதான் செய்ய?


**********



பெயர் குறித்த தொடர் பதிவிற்கு ப்ரியா அழைத்திருந்தார், பல நாஆஆஆஆஆட்களுக்கு முன்பு. ஸாரி ப்ரியா, பெட்டர் லேட் தேன் நெவர் இல்லையா?


சிறுவயதில் என் பெயர் எனக்கு பிடிக்காது. ஸ்டைலிஷாக இல்லாமல் ஏதோ பழைய பெயர் வைத்துவிட்டார்கள் என்று கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. அதுவும் ஒரு பழைய கறுப்பு வெள்ளை படத்தில், நாயகி நாயகனை அப்போதுதான் தூங்கியெழுந்தது போன்ற toneல் ‘நாதா நாதாஎன்றழைக்க, ‘ரகுநாதன்என்னும் பெயர் மீது இன்னும் எரிச்சல் கூடியது.


பள்ளி, கல்லூரி நாட்களில்....ஏன் இப்போது கூட என் பெயரில் பில் போடும்போது பலர், RAGUNATHAN என்றுதான் எழுதுவர். நான் RAGHUNATHAN. அவர்கள் விட்டுவிடுவது ஓரெழுத்துதான் என்றாலும் என்னமோ அது ஒரு பெரிய மனக்குறையாகவே தோன்றும். நல்லவேளை, மார்க் ஷீட், பாஸ்போர்ட் போன்றவற்றிலெல்லாம் இந்த பிரச்னை வரவில்லை.


எனக்கு ரகு என்று அழைத்தால்தான் பிடிக்கும், அழைப்பவர்களைத்தான் பிடிக்கும். பெயரை சுருக்கி கூப்பிடுவதும், செல்லப்பெயர் வைத்துக் கூப்பிடுவதும்தான் நட்பின் நெருக்கத்தை அதிகரிக்கிறது என்பது என் எண்ணம்.


இப்போது நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. கண்டிப்பாக ‘சுதாஎன்கிற பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று கூட யோசித்திருக்கிறேன் (இப்போது அந்த ஆசை இல்லை). அப்பெண்ணுக்கு பாட வருகிறதோ இல்லையோ, ‘நான் சுதா ரகுநாதன் என்றாவது அறிமுகப்படுத்திக்கொள்ளலாம் இல்லையா? J



11 comments:

  1. அப்புறம் யாரைக் கல்யாணம் செய்தீர்கள்?!!!!!!!!!

    ReplyDelete
  2. அருமை ரகு. அவ்வப்போதாவது எழுதுங்கள்

    ReplyDelete
  3. பழைய பதிவுகள் வாசிக்கையில் எரிச்சல் எதுக்கு ரகு.. அப்போதைய எழுத்துக்கும் இப்போதைய எழுத்துக்கும் உள்ள சிறு வளர்ச்சி கூட ப்ளாகினால் வந்ததென மகிழுங்கள். இன்னும் நல்லா எழுதுவீங்க, அப்பப்போ எழுதினா..

    இந்த MRP விலையை விட அதிகம் விற்கும் பிரச்சனை பல இடங்களில் இருக்கு. இதற்கென நுகர்வோர் கோர்ட் போனா சீக்கிரம் முடிஞ்சிடும். டெல்லில அந்த மாதிரி 1 ரூபாய் அதிகமிருந்ததற்காக ஒருவர் வழக்கு போட்டு அதிகத் தொகை பெற்றார். (எவ்ளோ தொகைன்னு மறந்திடுச்சு)

    சுதா ரகுநாதன்... :)
    ஆனா தமனாவின் அறிமுகப் படத்திற்குப் பின் உங்களுக்கு உங்க பேர் ரொம்பப் பிடிச்சிருக்குமே..

    ReplyDelete
  4. நல்லா வைக்கிறீங்கய்யா தலைப்பூ..!

    ReplyDelete
  5. குட் ... சுஜாதா டச் தெரியுதே எழுத்தில்

    :)

    ReplyDelete
  6. நல்ல தொகுப்பு ரகுநாதன் . ரயில்வே ஸ்டேசனில் ஒட்டுமொத்த ஒப்பந்தம் விடுவது போல் கோயம்பேடு பஸ் ஸ்டேண்டில் விட முடியாதா

    ReplyDelete
  7. நன்றி டாக்டர், இப்போதைக்கு தனிமையை :)

    நன்றி மோகன், அவசியம் எழுதுகிறேன்

    வாங்க விக்கி, ஆரம்பத்தில் எழுதியதையெல்லாம் இப்போ வாசிக்கும்போது ரொம்ப சில்லியா ஃபீல் பண்றேன்.

    //தமனாவின் அறிமுகப் படத்திற்குப் பின் உங்களுக்கு உங்க பேர் ரொம்பப் பிடிச்சிருக்குமே//

    அஃப்கோர்ஸ் ;)

    ReplyDelete
  8. நன்றி ராஜு, ச்ச்ச்சும்ம்ம்ம்மா ;)

    நன்றி ஷர்புதீன், ஏன் பாஸ்? சுஜாதாவை வாசிப்பவர்களுக்கு கோபம்தான் வரும் :)

    நன்றி எல் கே, ரயில்வே ஸ்டேஷனில் இந்த பிரச்னை கிடையாதா?!

    ReplyDelete
  9. நன்றி சமுத்ரா

    ReplyDelete