Sunday, May 23, 2010

ந‌ம்மால் உத‌வ‌ முடியும்



ப‌க்கத்து தெருவில்தான் என் தாத்தா வீடு உள்ள‌து. அவ‌ர்க‌ள் வீட்டின் எதிரே, வாட‌கைக்கு வ‌சித்து வ‌ரும் ஒரு குடும்ப‌ம். வ‌றுமைக்கோட்டிற்கு கீழே உள்ள‌வ‌ர்க‌ள் என்ற‌ சொற்றொட‌ருக்கு ச‌ரியான‌ எடுத்துக்காட்டு. நெச‌வுத் தொழிலை ம‌ட்டுமே முழுமையாக‌ ந‌ம்பியிருக்கும் குடும்ப‌ம். ப‌ல‌ சிர‌ம‌ங்க‌ளுக்கிடையில் வாழ்க்கை த‌றியை நெய்துகொண்டிருக்கின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ளின் ம‌க‌ன் ப‌ன்னிர‌ண்டாம் வ‌குப்பு இப்போதுதான் முடித்துள்ளார்.

இரு மாத‌ங்க‌ளுக்கு முன், ப‌ன்னிர‌ண்டாம் வ‌குப்பிற்கு பின் அவ‌ரை மேற்கொண்டு ப‌டிக்க‌ வைக்க‌ ஏதாவ‌து செய்ய‌ முடியுமா என்று பாட்டி கேட்டிருந்தார். அவ‌ரை க‌வ‌லைப்ப‌டாம‌ ப‌டிக்க‌ சொல்லுங்க‌, என்னாலான‌ பொருளாதார‌ உத‌வியை க‌ண்டிப்பாக‌ செய்கிறேன் என்று பாட்டியிட‌ம் சொல்லியிருந்தேன். பின் அலுவ‌ல‌க‌த்தில் ந‌ண்ப‌ர் ஸ்ரீராம் அவ‌ர்க‌ளோடு பேசிக்கொண்டிருக்கையில் இதைப் ப‌ற்றி சொன்ன‌போது, அவ‌ர் உட‌னே, அந்த‌ பைய‌னை ப‌டிக்க‌சொல்லு, எவ்வ‌ள‌வு செல‌வானாலும் நாம‌ பார்த்துக்க‌லாம் என்றார்.

சென்ற‌ வார‌ம் +2 தேர்வு முடிவுக‌ள் வ‌ந்த‌து. ஐநூற்றி சொச்ச‌ம் ம‌திப்பெண்க‌ள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். குறைவான‌ ம‌திப்பெண்க‌ள் பெற்றிருக்கிறோமே என்ற‌ தாழ்வு ம‌ன‌ப்பான்மையா இல்லை மேற்கொண்டு ப‌டிப்ப‌த‌ற்கு வ‌ச‌தியில்லையே என்ற‌ க‌வ‌லையா...எதுவென்று தெரிய‌வில்லை. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள‌ நோக்கியா தொழிற்சாலையில் வேலைக்கு செல்ல‌ முடிவு செய்திருந்தார். சென்ற‌ வார‌ம் வீட்டிற்கு அவ‌ரை வ‌ர‌வ‌ழைத்து சிறிது நேர‌ம் அப்பா பேசிக்கொண்டிருந்தார். +2வில் காம‌ர்ஸ் குரூப் ப‌டித்த‌தால், பி.காம் ப‌டிக்குமாறு அப்பா அறிவுறுத்தினார்.

பி.காம் ப‌டிச்சா வேல்யூ இல்ல‌ன்னு சொல்றாங்க‌ என்றார். பி.காம் ம‌ட்டும் ப‌டிச்சாலும் வேலை கிடைக்கும், ஆனா லைஃப்ல‌ ந‌ல்லா டெவ‌ல‌ப் ஆக‌ணும்னா, பி.காம் முடிச்சுட்டு, எம்.காமோ, எம்பிஏவோ க‌ண்டிப்பா ப‌ண்ண‌னும் என்றேன். ச‌ரி என்று கேட்டுக்கொண்டார். ச‌ரி என்று சொல்லும்போதே அவ‌ர் க‌ண்ணில், 'அந்த‌ள‌வுக்கு வ‌ச‌தி இல்லையே' என்ப‌து தெரிந்த‌து. அடுத்து என்ன‌ பேசுவ‌தென்றே என‌க்கு தெரிய‌வில்லை. பின் அப்பாவிட‌ம் சிறிது நேர‌ம் பேசிவிட்டு அவ‌ர் கிள‌ம்பிவிட்டார்.

பாட்டியிட‌ம், ப‌டிக்க‌ சொல்லுங்க‌ பாட்டி, என்ன‌ வேணும்னாலும் ப‌டிக்க‌ட்டும், எவ்ளோ செல‌வானாலும் பார்த்துக்க‌லாம், காசு இல்ல‌ங்க‌ற‌துக்காக‌லாம் வேலைக்கு போக‌ வேணாம், முத‌ல்ல‌ ப‌டிக்க‌ட்டும். அப்புற‌ம் வேலைக்கு போக‌ட்டும் என்று சொல்லியிருக்கிறேன்.

நான் நாத்திக‌ன் இல்லை. கோயிலுக்கு ஒவ்வொரு வார‌மும் ஞாயிற்றுக்கிழ‌மைக‌ளில் செல்ப‌வ‌ன். ஆனாலும் கோயிலின் உண்டிய‌லில் காசு போட்டு புண்ணிய‌த்‌தை தேடுவ‌தை விட‌ இதுபோல் ப‌டிக்க‌ சிர‌ம‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளுக்கு உத‌வி செய்வ‌தே சிற‌ந்த‌து என‌ நினைக்கிறேன். ஒரு நிமிட‌ம் யோசித்து பார்த்த‌போது, மிக‌ குறைவான‌ ம‌திப்பெண்க‌ள் பெற்றிருக்கிறாரே, இவ‌ர் க‌ல்லூரியில் ந‌ன்றாக‌ ப‌டிப்பாரா என்ற‌ ச‌ந்தேக‌ம் கூட‌ தோன்றிய‌து. புத்த‌ன் அல்ல‌ நான், ச‌ராச‌ரி ம‌ன‌ம்...என்ன‌ செய்ய‌? வீட்டின் பொருளாதார‌ சூழ்நிலையால்கூட‌ அவ‌ருக்கு ப‌டிப்பில் க‌வ‌ன‌ம் சித‌றியிருக்கலாம் என்று தோன்றிய‌து. அவ‌ரை குறை கூற‌ விரும்ப‌வில்லை, குடும்ப‌ நிலை உண‌ர்ந்து க‌ண்டிப்பாக‌ ந‌ன்றாக‌ ப‌டிப்பார் என்றே ந‌ம்புகிறேன்.

பெற்றோரின் வ‌ள‌ர்ப்பு முறை, ‌முறையான க‌ல்வி...இவ்விர‌ண்டும்தான் ஒரு ம‌னித‌னை செம்மைப்ப‌டுத்துவ‌தில் பெரும்ப‌ங்கு வ‌கிக்கின்ற‌ன‌. ஆனால் க‌ல்வி என்ப‌து வியாபார‌ம் ஆன‌பின், ப‌ல‌ருக்கு அது எட்டாக்க‌னியாக‌வே மாறிப்போகிற‌து. வ‌ங்கிக்க‌ட‌ன் வாங்கி அவ‌ரை ப‌டிக்க‌ச்சொல்ல‌லாம்தான். ஆனால் 'க‌ட‌ன் வாங்கியிருக்கிறோமே' என்ற‌ எண்ண‌ம் எப்போதும் அவ‌ரின் ம‌ன‌தை ஆக்கிர‌மித்து, ம‌ன‌ அழுத்த‌த்தில் அவ‌ர் ப‌டிப்ப‌தில் சிறிதும் விருப்ப‌மில்லை என‌க்கு. அவ‌ர் ந‌ன்றாக‌ ப‌டிக்க‌ வேண்டும், அதே ச‌ம‌ய‌ம் க‌ல்லூரி வாழ்க்கையை ர‌சித்து வாழ‌ வேண்டும்.

எத்த‌னை பேருக்கு தெரியும் என்று தெரிய‌வில்லை. அஜித் த‌ன் தாய் த‌ந்தை பெய‌ரில் ந‌ட‌த்தி வ‌ரும் 'மோகினி ம‌ணி ஃப‌வுண்டேஷ‌ன்' மூல‌மாக‌ ப‌ல‌ருக்கும் உத‌வி செய்து கொண்டிருக்கிறார். சூர்யாவின் 'அக‌ர‌ம்' ப‌ற்றி ப‌ல‌ரும் அறிந்திருப்பீர்க‌ள். என‌க்கும், ஒரு ஃப‌வுண்டேஷ‌ன் ஆர‌ம்பித்து ப‌ல‌ருக்கும் உத‌வ‌ வேண்டும் என்ற‌ எண்ண‌ம் இருக்கிற‌து ம‌ன‌தில். ஆனால் அதை ந‌டைமுறைப்ப‌டுத்த த‌ற்போதைய‌ பொருளாதார‌ சூழ்நிலை இட‌ம்கொடுக்க‌ ம‌றுக்கிற‌து. இருந்தாலும் ந‌ண்ப‌ர்க‌ளின் உத‌வியோடு த‌ற்போதைக்கு இந்த‌ ஒரு பிள்ளையையாவ‌து க‌ண்டிப்பாக‌ ப‌டிக்க‌ வைக்க‌ முடியும் என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கிற‌து.

த‌ட்ட‌ச்சு செய்துவிட்டு ஒருமுறை இப்ப‌திவை ப‌டித்து பார்க்கையில், சுய‌த‌ம்ப‌ட்ட‌ம் அதிக‌மாக‌ இருக்கிற‌தோ என்று கூட‌ தோன்றுகிற‌து. சொல்ல‌ப்போனால் ச‌ற்று கூச்ச‌மாய் கூட‌ இருக்கிற‌து. ஆனாலும் ப‌திவிட‌ கார‌ண‌ம், உங்கள் வீட்டின் அருகே கூட‌ குடும்ப‌ சூழ்நிலையின் கார‌ணமாக‌ மேற்கொண்டு ப‌டிக்க‌ சிர‌ம‌ப்ப‌டும் மாண‌வ‌னோ, மாண‌வியோ இருக்க‌லாம். அவ‌ர்க‌ளை க‌ண்ட‌றிந்து இய‌ன்ற‌ வ‌ரை உத‌வுவீர்க‌ள் என்ற‌ ந‌ம்பிக்கைதான். த‌னியாக‌ ந‌ம்மால் செய்ய‌முடியுமா என்றால் கொஞ்ச‌ம் க‌ஷ்ட‌ம்தான். ஆனால் ந‌ம‌க்கென‌ ஒரு ந‌ட்பு வ‌ட்ட‌ம் இருக்கும்போது நாம் ஏன் க‌வ‌லைப்ப‌ட‌ வேண்டும்? க‌ர‌ம் கோர்ப்போம், க‌ல்வி கொடுப்போம்!

11 comments:

  1. // கோயிலின் உண்டிய‌லில் காசு போட்டு புண்ணிய‌த்‌தை தேடுவ‌தை விட‌ இதுபோல் ப‌டிக்க‌ சிர‌ம‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளுக்கு உத‌வி செய்வ‌தே சிற‌ந்த‌து என‌ நினைக்கிறேன்//
    அருமையா சொல்லியிருக்கீங்க ரகு..

    ReplyDelete
  2. Good thought Raghu. அதே நேரத்தில் நீங்கள் படிக்க வைக்க நினைப்பவரிடம் படிக்கும் ஆர்வமிருக்கிறதா எனக் கேட்டறியுங்கள். பலருக்கும் மண்டையிலிருக்கும் அறிவை விட கையிலிருக்கும் திறமை அதிக பலன் தரும். அவருக்கு காமர்ஸ் பிடிக்கவில்லையெனில் அவரின் குடும்பத் தொழிலான நெசவிலேயே டெக்ஸ்டைல் டிப்ளமோ படிக்கலாம். அல்லது அரசாங்கம் தரும் பல தொழிற்பயிற்சிகள் அவருக்கு உதவலாம். நீங்கள் உதவி செய்ய நினைப்பது மகிழ்ச்சி. ஆனால் செய்யும் உதவி பயனுள்ளதாகவும், நாம் மகிழும் படியும், நம்மால் உதவி பெறுபவர் மகிழும்படியும் இருக்க வேண்டும். வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. வாவ், வெல் டன் ரகு.உங்களைபோலதான் நானும் நினைத்தது உண்டு கோயில் உண்டியலில் காசு போடுவதை விட இப்படி சிரமப்படும் மாணவர்களுக்கு உதவளாமே என்று.தனியாக செயல் படுவது சிறிது கஷ்டமென்றாலும் நண்பர்களின் உதவியோடு நிச்சயம் முடியும். படிப்பிற்கு உதவ நினைக்கும் உங்க தாட் ரொம்ப பிடிச்சிருக்கு ரகு.கீப் இட் அப்.

    ReplyDelete
  4. நல்ல சிந்தனை !நெறியுடன் உதவ எண்ணும் எண்ணம் வளர்க!

    விக்னேஷவரியின் வார்த்தைகளையும் கவனம் கொள்ள வேண்டும் !

    ReplyDelete
  5. Good, I think I can also do something as I can. I hope I would do

    ReplyDelete
  6. சரியாக சொல்லியிருக்கிறீர்கள் ரகு..

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. //நான் நாத்திக‌ன் இல்லை. கோயிலுக்கு ஒவ்வொரு வார‌மும் ஞாயிற்றுக்கிழ‌மைக‌ளில் செல்ப‌வ‌ன். ஆனாலும் கோயிலின் உண்டிய‌லில் காசு போட்டு புண்ணிய‌த்‌தை தேடுவ‌தை விட‌ இதுபோல் ப‌டிக்க‌ சிர‌ம‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளுக்கு உத‌வி செய்வ‌தே சிற‌ந்த‌து என‌ நினைக்கிறேன்.//

    நல்ல சிந்தனை, நல்லவர்கள் அனைவரும் பின்பற்றலாம்!

    //என‌க்கும், ஒரு ஃப‌வுண்டேஷ‌ன் ஆர‌ம்பித்து ப‌ல‌ருக்கும் உத‌வ‌ வேண்டும் என்ற‌ எண்ண‌ம் இருக்கிற‌து ம‌ன‌தில்//

    உங்கள் நல்ல எண்ணத்திற்கு வாழ்த்துக்கள்.

    //த‌ட்ட‌ச்சு செய்துவிட்டு ஒருமுறை இப்ப‌திவை ப‌டித்து பார்க்கையில், சுய‌த‌ம்ப‌ட்ட‌ம் அதிக‌மாக‌ இருக்கிற‌தோ என்று கூட‌ தோன்றுகிற‌து//

    நிச்சயமாக இல்லை.
    உங்கள் மனதில் உள்ளதை வெளியில் சொன்னால்தான்
    மற்றவர்கள் உங்களை புரிந்துகொள்ள முடியும்.

    உங்களுடைய இந்த முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    பி.கு. சகோதரி விக்னேஸ்வரியின் கருத்தையும் கவனத்தில் கொள்ளலாம்!

    ReplyDelete
  8. நான் நாத்திக‌ன் இல்லை. கோயிலுக்கு ஒவ்வொரு வார‌மும் ஞாயிற்றுக்கிழ‌மைக‌ளில் செல்ப‌வ‌ன். ஆனாலும் கோயிலின் உண்டிய‌லில் காசு போட்டு புண்ணிய‌த்‌தை தேடுவ‌தை விட‌ இதுபோல் ப‌டிக்க‌ சிர‌ம‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளுக்கு உத‌வி செய்வ‌தே சிற‌ந்த‌து

    நீங்கள் எழுதியது சுயதம்பட்டம் அல்ல.

    ReplyDelete
  9. ந‌ன்றி ஜெய்

    ந‌ன்றி விக்கி, அவ‌ருக்கு ப‌டிப்ப‌தில் விருப்ப‌மிருக்கிற‌து, அத‌னால்தான் வ‌லியுறுத்தி ப‌டிக்க‌ சொல்லியிருக்கிறோம்

    ந‌ன்றி ப்ரியா, க‌ண்டிப்பா ஏதாவ‌து செய்ய‌ணும்ங்க‌

    ந‌ன்றி நேச‌மித்ர‌ன், அவ‌சிய‌ம் க‌வ‌ன‌த்தில் கொள்கிறேன்

    ReplyDelete
  10. ந‌ன்றி ச‌ர‌வ‌ண‌குமார்

    ந‌ன்றி ரியாஸ்

    ந‌ன்றி அமைதிஅப்பா, சுய‌த‌ம்ப‌ட்ட‌ம் போன்ற‌ ஒரு ஃபீல் இருந்த‌து. இப்போது யோசித்து பார்க்கும்போது நீங்க‌ள் சொல்வ‌தும் ச‌ரியென்றே தோன்றுகிற‌து

    ந‌ன்றி ஜோதிஜி

    ReplyDelete
  11. நல்லதொரு முயற்சி ரகு, இதுமாதிரி முயற்சிகள்தான் நம்மை அடிக்கடி நமக்குள் அடையாளம் காட்டும்..!

    //பெற்றோரின் வ‌ள‌ர்ப்பு முறை, ‌முறையான க‌ல்வி...இவ்விர‌ண்டும்தான் ஒரு ம‌னித‌னை செம்மைப்ப‌டுத்துவ‌தில் பெரும்ப‌ங்கு வ‌கிக்கின்ற‌ன‌.//
    உண்மையான வார்த்தை..!

    //எத்த‌னை பேருக்கு தெரியும் என்று தெரிய‌வில்லை. அஜித் த‌ன் தாய் த‌ந்தை பெய‌ரில் ந‌ட‌த்தி வ‌ரும் 'மோகினி ம‌ணி ஃப‌வுண்டேஷ‌ன்' மூல‌மாக‌ ப‌ல‌ருக்கும் உத‌வி செய்து கொண்டிருக்கிறார்.//
    அட.. எனக்கு புதுத்தகவல் இது..!

    நல்ல விஷயம் ரகு... உங்களோட இந்த முயற்சியில சீக்கிரமே நானும் கைக்கோர்க்கிறேன்..!

    -
    DREAMER

    ReplyDelete